Thursday, April 12, 2012

சித்திரையில்தான் புத்தாண்டு (Detailed reply to Varalaru dot com article)

 

 

சித்திரையில் தொடங்கும் புது வருடம் என்னும் தலைப்பில் ஜனவரி 2010 –இல் தமிழ் ஹிந்து தளத்தில் வெளியான எனது இரண்டு கட்டுரைகள் இங்கே:-

http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-1/

http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-2/  

 

இவற்றை விமரிசித்து மார்ச் 2012 இல், வரலாறு டாட் காமில் வெளியிடப்பட்ட தலையங்கம் இங்கே:-

http://www.varalaaru.com/Default.asp?articleid=1094


இதற்கு நான் அனுப்பிய இரண்டு மறுமொழிகள் இன்று வரை அந்தத் தளத்தில் பிரசுரிக்கப்படாததால், நாளை வரும் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு என்னுடைய இந்தத் தளத்தில் வெளியிடுகிறேன். சுருக்கமான மறுமொழியை இதற்கு முந்தின கட்டுரையாகக் காணலாம். தமிழ் தெரியாத வாசகர்களுக்கென, தனியாக இன்னொரு கட்டுரையை ஆங்கிலத்தில் இதையடுத்து இடுகிறேன். விருப்பமுள்ளவர்கள் இந்தக் கட்டுரைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

 

-ஜெயஸ்ரீ.

 

****************************

 

விரிவான எனது மறுமொழி.

 

ஆசிரியர் குழுவினருக்கு,

வணக்கம்.

 

இரண்டு வருடங்களுக்கு முன்னால் தமிழ் ஹிந்துவில் நான் எழுதிய கட்டுரைகளை விமரிசித்துத் தாங்கள் எழுதியுள்ளதாக, "எதுதான் தமிழ்ப் புத்தாண்டு?" என்னும் தங்களது கட்டுரையை நண்பர்கள் எனது கவனத்துக்குக் கொண்டு வந்தார்கள். எந்த ஒரு கட்டுரையின் முதல் பத்தியையும், கடைசிப் பத்தியையும் படித்தாலே போதும், அந்தக் கட்டுரை சொல்ல வரும் மூலக்கருத்தைத் தெரிந்து கொண்டு விடலாம் என்பதால், அந்த இரண்டு பத்திகளை மட்டும் முதலில் படித்தேன். ஒரு பண்டிகையை மனசாட்சிப்படியே கொண்டாட வேண்டும் என்னும் ஒரு புதிய, அரிய கருத்தைச் சொன்ன கையோடு, சித்திரையுமல்ல, தையுமல்ல என்ற நிலையை எடுக்கிறீர்களோ என்று எண்ணும் வண்ணம், யோசிக்காமல் தையில் கொண்டாடி விட்டு, பின்னர் யோசிக்காமல் சித்திரையில் கொண்டாடுவதுதான் தவறு என்று ஆரம்பித்திருக்கிறீர்கள். அதனால்  'வாசகர்களே யோசியுங்கள்' என்று முடிப்பீர்கள் என்று பார்த்தால், "சங்க காலத்தில் தை முதல் நாள் உத்தராயணத் தொடக்கமாகக் குறிப்படப்படாவிட்டாலும்" தை முதல் நாளையே வருடத்தொடக்கமாக எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லியுள்ளீர்களே, அப்படிச் சொல்ல எது இடம் கொடுத்தது? உங்கள் மனசாட்சியா? அல்லது உங்கள் மனம் விரும்பிய எண்ணமா? அல்லது நீங்கள் யோசித்ததின் விளைவா? இவையெல்லாம் அல்ல, திருவலஞ்சுழி கல்வெட்டே அவ்வாறு கூறுகிறது என்றால், அது காட்டும் 4 சங்கராந்திகளும் மேதினி ஜோதிடம் எனப்படும் நாட்டுக்கான ஜோதிடப் பலன்களைச் சொல்ல உதவும் குறிப்புகளாயிற்றே, அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு கொண்டவரா நீங்கள் என்ற ஆச்சரியத்தில் முழு கட்டுரையையும் படிக்க ஆரம்பித்தேன்.

 

படிக்க ஆரம்பித்தவுடன் 5 விவரங்கள் தெரிய வந்தன.

 

(1) நீங்கள் யாருடைய மனசாட்சியைக் கூவி அழைக்கிறீர்கள் என்று ஆரம்பத்திலேயே தெரிகிறது.. முந்தின ஆட்சியில் தையில் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்ட தமிழ் அமைப்புகள் மற்றும் சங்கங்கள் எல்லாம், இன்றைய ஆட்சியில் தடா/பொடாவெல்லாம் இல்லை என்ற நிலையிலும், தையில் புத்தாண்டு கொண்டாடுவதை விட்டு விட்டனர் என்பதால் தனிமைப்படுத்தப்பட்டவராக நீங்கள் அவர்களது மனசாட்சியைத் தட்டி எழுப்பப் பார்க்கிறீர்கள். அதற்கு அவர்கள் எழுதியவற்றை வாசகர்கள் முன் வைத்து, தையில்தான் புத்தாண்டு என்று நிரூபித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், சித்திரையில் புத்தாண்டு என்று சொல்லும்  தரவுகளை மீண்டும் வாசகர்கள் முன் வைத்து சித்திரைப் புத்தாண்டுக்கு மட்டுமல்ல, எனக்கும் விளம்பரம் தந்து விட்டீர்கள். மிக்க நன்றி. உங்கள் தேடல் வேட்டையை விரிவுபடுத்தியிருந்தீர்கள் என்றால், இந்தத் தையில் நான் எழுதிய "தையில் புத்தாண்டா?" என்னும் கட்டுரையையும் படித்திருப்பீர்கள். http://thamizhan-thiravidana.blogspot.in/2012/01/94.html  உங்கள் வாசகர்களுக்கு இன்னும் பல விவரங்கள் கிடைத்திருக்கும். அடுத்த கருத்துக்குச் செல்வதற்கு முன்னால், மற்றவர்களை யோசிக்கச் சொன்ன நீங்கள், உங்கள் பங்குக்கு என்ன யோசித்தீர்கள் என்று கேட்கத் தோன்றுகிறது. எந்த அச்சுறுத்தலும், தூண்டுதலும் இல்லாமல் உங்கள் நண்பர்கள் தையில் புத்தாண்டு என்பதை விட்டு விட்டனர் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? தையில் புத்தாண்டு என்று சொல்வதில் ஆதாரமேயில்லை என்று அவர்களும் நினைக்கிறார்கள் என்பதைத்தானே அது காட்டுகிறது?

 

(2) உங்கள் கட்டுரையைப் படிக்கையில் இன்னொறும் தெரிந்ததுஉங்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்று சொல்லும் மக்களில் நீங்களும் ஒருவர் என்பதே. "உரையாசிரியரின் கருத்துக்கள் இரண்டாம் நிலைத் தரவுகளே, மூல பாடம்தான் முதல் நிலைத் தரவாகக் கொள்ளத் தக்கது." என்று எங்களுக்குச் சொல்லி விட்டு, நீங்கள் யாருடைய தரவுகளை மேற்கோளிடுகிறீர்கள்? கடந்த நூறாண்டுக்குள் வந்தவர்கள் எழுதியுள்ள கருத்துக்களை அல்லவா சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?

 

பழம் உரையாசிரியர்கள் சொல்வதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் "உரையாசிரியர்கள் அவரவர் காலத்தில் நிலவி வந்த நம்பிக்கைகளுக்கேற்பத் தற்குறிப்பேற்றியோ அல்லது நடுநிலையுடனோ பாடலுக்குப் பொருள் கண்டிருக்கவே வாய்ப்பிருக்கிறது" என்கிறீர்கள். பழம் உரையாசிரியர்கள் தங்கள் காலத்தில் நிலவி வந்த நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு பொருள் கண்டிருக்கக்கூடும் என்னும் வாதம் நீங்கள் மேற்கோளிடும் கடந்த நூற்றாண்டு அறிஞர்களுக்கும் பொருந்தும் அல்லவா?

 

பழைய உரையாசிரியர்களுள் பரிமேலழகருக்கு நடுநிலையாளர் என்று நற்சான்றிதழ் கொடுத்திருக்கிறிர்கள், அதற்கு நன்றி. அந்த நற்சான்றிதழ், பரிமேலழகர் எழுதிய திருக்குறள் உரைக்கும் சேர்த்துத்தான் என்று நம்புகிறேன். 'ஊழ்' அதிகாரக் குறட்பாக்களுக்கு பரிமேழகர் அளித்த விளக்கங்களுக்கும், கணியன் பூங்குன்றனார் பாடல் உரைக்கும் வேறுபாடு இல்லை. ஆனால் 'கணியன்  பூங்குன்றனாரின் பாடலுக்கு ஊழ்வினைக் கருத்தையும் தற்குறிப்பேற்றி இணத்துப் பார்ப்பதாக' நீங்கள் சொன்னது ஏதோ நான் தற்குறிப்பேற்றிச் சொன்னதாக நினைப்பது போலிருக்கிறது. அந்தக் கருத்து, டா. .வே. சா. அவர்கள் கண்டெடுத்த சுவடிகளில் உள்ளது. அதை டா. .வே.சா அவர்கள் 1950 ஆம் ஆண்டு, விக்ருதி வருடம், வைகாசி மாதத்தில்  பதிப்பித்த "புறநானூறு மூலமும், உரையும்', என்னும் நூலின் 349 ஆம் பக்கத்தில் காணலாம். அதை எழுதியவர், யார், எந்த காலத்தவர் என்று நமக்குத் தெரியாத, ஆனால் உள்ளிடைக் குறிக்கோள் எதுவும் இல்லாமல், உள்ளதை உள்ளபடிச் சொன்ன ஒரு பழைய உரையாசிரியர் ஆவார்.

 

ஆனால் இன்றைய உரையாசிரியர்கள்அதிலும் கடந்த ஒரு நூறு ஆண்டுகளில் உரை எழுதியவர்களைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது. நீங்களே பரிபாடல் 11 இல் சொல்லப்படும் மூன்று தெருக்களுக்குஅவற்றின் ஜோதிடப் பிண்ணனி தெரியாமல், மனம் போன போக்கில் தற்குறிப்பேற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். துணைக்கு பெருமழைப் புயல் சோமசுந்தரனாரையும் அழைத்துக் கொள்கிறீர்கள். முதல் நிலைத் தரவாக, மூலப் பாடல் எழுதிய நல்லந்துவனாரை அல்லவா நீங்கள் அழைத்திருக்க வேண்டும்? அப்படிச் செய்திருந்தால் விவரம் புரிந்திருக்குமே? நல்லந்துவனார் கிரக அமைப்புகளை எதிலிருந்து ஆரம்பிக்கிறார் என்று நீங்களும் கவனிக்க வில்லை, சோமசுந்தரனாரும் கவனிக்கவில்லை. நல்லந்துவனார் 'உருகெழு வெள்ளி' என்று சுக்கிரனிலிருந்து ஆரம்பிக்கிறார். அது இருக்கும் ராசி இடபம் ஆகும் ஆனால் இடபம் இருக்கும் வீதி, மேட வீதியாகும். அதாவது பொதுவாக கிரக அமைப்புகளைச் சொல்லும் போது, மேட வீதியில் தங்கியிருக்கும் கிரகத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இதையே மனிதனுடைய பிறப்பு ஜாதகத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் அந்த மனிதன் பிறந்த லக்னத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும், ஆனால் உலக நோக்கில் சொல்லும் போது, மேட வீதியில் இருக்கும் கிரகத்தைச் சொல்லிவிட்டு, அதற்குப் பிறகு, சூரிய, சந்திரர்களுக்கு அடுத்து வரும் செவ்வாய் கிரகம் தொடங்கி வரிசையாக புதன், வியாழன் என்று அவை இருக்கும் அமைப்புகளைச் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் நல்லந்துவனார் சொல்லியுள்ளார். மேட வீதி என்பது, சூரியனின் பகல் பொழுது அதிகரிக்கும் இடபம், மிதுனம், கடகம், சிம்மம் ஆகியவை ஆகும். இவற்றைப் பற்றியும், பரிபாடல் சொல்லும் விவரத்தையும், பிறகு காண்போம்.

 

(3) ஒருவர் எழுதினது தனக்குத் தெரியவில்லை அல்லது புரியவில்லை என்றால், எழுதினவரைக் குறை சொல்லும் மக்களில் நீங்களும் ஒருவரே என்பதும் தெரிகிறது. நீங்கள் எழுதியுள்ளீர்கள்"பல் வேறு பெயர்களையும், மேற்கோள்களையும் கட்டுரை முழுவதும் தந்தால் மட்டும் போதாது. அவற்றுக்குள்ள தொடர்பு முறையாக விளக்கப்பட வேண்டும். அவ்விளக்கம் படிப்போருக்குச் சிந்தனைத் தொடர்ச்சியைத் தர வேண்டும்" தமிழ் ஹிந்துவில் நான் எழுதியுள்ள தமிழ்ப் புத்தாண்டு குறித்த இரண்டு கட்டுரைகளைப் படித்து இப்படி ஒரு கருத்து சொன்னது நீங்கள் ஒருவர் மட்டுமே. இதுவரை அந்தக் கட்டுரையின் கீழ் கருத்துரையிட்டவர்கள் யாரும் இப்படி எழுதவில்லை. கொடுக்கப்பட்ட தொடர்புகளைப் புரிந்து கொண்டு, சிந்தனையைச் செலுத்த அவர்களால் முடிந்திருக்கிறது. அதனால் பல வேறு விவரங்களையும் அவர்கள் கருத்துரையாக எழுதியுள்ளார்கள். ஆனால் உங்களுக்கு மட்டும் இப்படி ஒரு எண்ணம் எழுகிறது என்றால், தவறு யாரிடத்தில்?

 

(4) உங்கள் கட்டுரையைப் படிக்கையில் தெரிய வரும் மிக முக்கிய விவரம், உங்களது சொந்த விருப்பு வெறுப்புகளையும், நம்பிக்கைகளையும் ஆராய்ச்சியில் புகுத்துகிறீர்கள் எனபதே. உங்களுக்கு ஜோதிடம் பிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் அது உங்கள் கருத்து. ஆனால் அதே நோக்கில் நீங்கள் எப்படி ஒரு பழைய சரித்திரத்தை ஆராயலாம்? அதிலும் அந்த காலத்து மக்களது வாழ்க்கையில் ஜோதிடம் மிக முக்கியப் பங்கு வகித்திருந்ததால், அவர்கள் வாழ்க்கை முறையை ஆராயும்போது அவர்கள் பின்பற்றிய - அவர்கள் நம்பிய ஜோதிடத்தை ஒதுக்கி வைத்து விட்டு ஆராய முடியாது. ஆராயவும் கூடாது. அப்படிச் செய்யும் ஆராய்ச்சி, ஆராய்ச்சியே அல்ல. அப்படிச் செய்த ஆராய்ச்சியில்தான் இல்லாத தைப் புத்தாண்டைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

 

இன்றைக்கு உங்களுக்குத் தெரிந்த ஜோதிடம், பலன் சொல்லும் ஜோதிடம். அது ஜோதிட சாஸ்திரத்தில் ஐந்தில் ஒரு பங்குதான். மீதி உள்ளவற்றைக் கொண்டு இந்த உலகை மட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்தப் பொருளுக்கும், அவை குறித்த எந்தக் கேள்விக்கும் விடை சொல்ல முடியும். அதனால்தான் ஜோதிடன் தெரிந்தவனை 'அறிவன்' என்று தொல்காப்பியர் கூறினார்.

 

"மறு இல் செய்தி மூ வகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்" (புறத்திணை இயல் 74)

 

மக்களை ஏழு வகையாகப் பிரித்து, அவர்களுள் ஒருவராக அறிவன் என்னும் முக்கால அறிவும் கொண்டவனைத் தொல்காப்பியர் அடையாளம் காட்டுகிறாரே, ஜோதிடத்துக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்த சமுதாயமாக அன்று தமிழ்ச் சமுதாயம் இருந்திருக்க வேண்டும்? கிராமத்துக்குக் கிராமம் ஜோதிடன் இருந்திருக்கிறான் என்பதை  சிலப்பதிக்காரம் வேட்டுவ வரியில் காணலாம். ஜோதிடன் இல்லாமல் அரசன் எங்கும் செல்ல மாட்டான் என்பதைச் சேரன் செங்குட்டுவனைப் பற்றிய விவரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அரசனது ஐம்பெருஞ்சுற்றம் என்பதில் நிமித்தம் பார்ப்பவனும் ஒருவன் என்பதைச் சூடாமணி நிகண்டு கூறுகிறது.

 

பயணம் செல்வதற்கு முன் நல்ல நாள் பார்த்து, குடையையும், வாளையும் வேறிடத்தில் வைத்தான் கரிகால் பெருவளத்தான். இந்த வழக்கம் இன்றும் இருக்கிறது.  என்மனார் புலவர் என்று வாய்க்கு வாய் முன்பிருந்த வழக்கத்தைச் சொல்லும் தொல்காப்பியரும் இந்த வழக்கத்தைச் சூத்திரமாக எழுதியுள்ளார். எரிகல் விழுந்ததைப் பார்த்து ஏழு நாட்களுக்குள் அரசனுக்குக் கெடுதி ஏற்படுமே என்று கவலைப்பட்டார் கூடலூர் கிழார். விருந்தினர் வர, காக்கை கரையும் என்னும் சகுனத்தைச் சொல்லியே காக்கைப் பாடினி என்ற பட்டம் பெற்றார் நச்செள்ளையார். பல்லி சொல்லைக் கேட்டும், ஓந்தி சென்ற இடத்தைப் பார்த்தும், கண் துடிப்பை வைத்தும் சகுனம் சொல்வதை இளங்கோவடிகள் வரை எழுதி வைத்துவிட்டார்கள். இவையெல்லாம், ஜோதிட சித்தாந்தம், ஜோதிட சம்ஹிதை, சகுனம், நிமித்தம் ஆகியவற்றுள் அடங்கும். உன்ன மர சகுனத்தையும், உன்னத்துப் பகைவனாக ஒரு அரசன் ஆனதையும் ஜோதிட சாஸ்திரத்தால் மட்டுமே விளக்க முடியும். இன்றைக்கு அவற்றைத் தெரிந்தவர்கள் மிகக் குறைவு.

 

ஆனால் ஆங்கிலேயன் வந்து நம் பழைய முறை கல்வித் திட்டத்தை ஒழித்து, இன்றைய கல்வித் திட்டத்தைப் புகுத்திய 19 ஆம் நூற்றாண்டு வரை, ஜோதிடக் கல்வி பரவலாக இருந்திருக்கிறது, ஜோதிடர்களும் அதிக அளவில் இருந்தனர். 1881 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அறிவியல் என்னும் தலைப்பின் கீழ் ஜோதிடர்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஜோதிடத்தில் உள்ள கணக்குகள், விதிமுறைகள் மிக மிக அதிகம். அதனால் அதை அறிவியல் என்றே ஆங்கிலேயர் காலம் வரை அழைத்தார்கள். வாழ்க்கையின் எல்லாச் செயல்களையும் ஜோதிடனைக் கேட்டுத்தான் செய்தார்கள் என்றும் அந்தக் கணக்கெடுப்பில் சொல்லியுள்ளார்கள். 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 1,23,000 ஜோதிடர்கள் இருந்தார்கள் என்றும் குறித்துள்ளார்கள். ஜோதிடன் இல்லாமல் ஒரு கிராமம் கிடையாது என்பதை, 1817 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் மில் என்பவரால் எழுதப்பட்ட "பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு" என்னும் நூலில் காணலாம். அது மட்டுமல்ல, கல்வெட்டுகளில் நாம் காணும் பல வாரியங்களையும், ஜோதிடர் உள்ளிட்ட அனைத்து வகையான தொழில் செய்பவர்களையும் உள்ளடக்கிய சதுர்வேதி மங்கல வாழ்க்கை முறையே 19 ஆம் நூற்றாண்டு வரை எங்கும் இருந்திருக்கிறது என்பதையும் அந்த நூலில் காணலாம். http://www.chaf.lib.latrobe.edu.au/dcd/page.php?title=&record=5299 இந்த வாழ்க்கை முறை தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது என்றும் அவர் சொல்வது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

 

நீங்கள் அதிகம் பேசும் கல்வெட்டு ஆராய்ச்சிகளையே எடுத்துக் கொள்ளுங்கள். பெரும்பான்மையானவை கோவில் கல்வெட்டுகளும், தானம் குறித்த விவரங்களுமே ஆகும். அவற்றில் காசு, கழஞ்சு, சந்தி விளக்கெரிக்க எண்ணை, நெய், ஆடு, பசுக்கள், நிலங்கள் என்னும் தான்ங்கள் அதிகப்படியாக உள்ளன. இவற்றுக்கெல்லாம் உள்ள ஒரு பொதுத் தன்மை, இவையெல்லாம் கோவிலுக்காகத் தானமாகத் தரப்பட்டுள்ளன என்பதே. உங்களுக்கு இவையெல்லாம் வெறும் சொற்கள். அல்லது மக்களது நம்பிக்கைகள். ஆனால் ஜோதிட ஆராய்ச்சியில் காலாண்டு அனுபவம் உள்ள எனக்கு இந்தச் சொல் ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஒரு வாழ்க்கையும், அதில் ஏற்பட்ட பிரச்சினையும், அதன் ஜோதிடத் தொடர்பும் தெரிகிறது. ஒருவன் எப்பொழுது காசு தானம் செய்வான், எப்பொழுது ஆடு தானம் செய்வான் எப்பொழுது கோதானம் செய்வான், எப்பொழுது விளக்குக்கு எண்ணை கொடுப்பான் என்பதற்கெல்லாம் ஜோதிடத்தில் தொடர்பு இருக்கிறது. இன்றைக்கும், இந்தத் தானங்களைப் பல லட்சக் கணக்கான மக்கள் ஜோதிடர்கள் சொல்ல, ஜோதிடக் காரணங்களுக்காகச் செய்து வருகிறார்கள்.

 

கல்வெட்டுகளில் காணப்படும் தானங்களுக்குப் பின்னாலும் ஜோதிடம்தான் தூண்டுகோலாக இருந்திருக்கிறது என்பதற்குச் சாட்சிகளா இல்லை? சர்க்கரை வியாதியிலிருந்து குணம் பெற்றதற்காகவும், வண்டு கொட்டி பிழைத்ததற்காகவும் செய்யப்பட்ட தானங்கள், வேண்டுதல்களை நிறைவேற்றவே என்று சொல்லி விடலாம். ஆனால் கொடுக்கப்பட்ட தானப் பொருள், ஜோதிடத் தொடர்பு கொண்டது. இன்னின்ன காரணத்துக்கு இன்னின்ன தானம் என்று ஜோதிடத்தில் அடையாளம் காண்கிறோம்.

 

கல்வெட்டுகளில் காணப்படும் மிக முக்கியச் சான்று மூன்றாம் வீர சோழனைக் குறித்தது. அவனது பிறந்த நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் பீடிக்கவே வீர சோழீஸ்வரம் என்னும் கோவிலையே கட்டியிருக்கிறான். ஒரு ஊரையே தேவதானமாகக் கொடுத்திருக்கிறான்.

 

கிரஹண தோஷத்துக்கே இப்படி எனில் கிரக தோஷத்துக்கு எப்படி? வீர்ராஜேந்திரனின் கிரக தோஷம் நீங்க வேண்டிச் செய்யப்பட்ட நில தானத்தின் சாட்சி, கொங்கவிடங்கீஸ்வரர் கோயிலில் இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மன்னனுக்குப் பெருங்கணி என்றால், மக்களுக்கு வெறும் கணி. இதே நிலமைதான் அன்றும் இருந்திருக்கிறது, இன்றும் இருக்கிறதுஅல்லது இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அன்றைக்கு இருந்து வந்த நிலையே இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.

'

புத்தாண்டு என்பது ஜோதிட ரீதியாகக் கணிக்கப்படுவது. அந்த ஜோதிடக் கருத்தை ஜோதிடத்தில்தான் தேட முடியும். அதாவது தாமரையை நீர் நிலையில்தான் தேட முடியும், நிலப்பரப்பின் மீதல்ல என்பதைப் போல. ஆனால் நிலப்பரப்பிலும், தாமரை கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் தாமரை நிலத்தில் முளைத்திருக்காது, நீரிலிருந்து பறித்துப் போட்ட தாமரையாகத்தான் அது இருக்கும். அந்த தாமரையைக் கொண்டு, தாமரையின் முழு தாவரவியல் விவரங்களையும் அறிய முடியாது. அவற்றை அறிய, நீர் நிலையில் உள்ள தாமரையைத்தான்  ஆராய வேண்டும். அந்த ஆராய்ச்சி தரும் விவரங்களைக் கொண்டு, நிலத்தில் பறித்துப் போட்ட தாமரையும் அத்தகையதே என்று அறிய வேண்டும். வருடப் பிறப்பு என்பதையும், ஜோதிடத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்த்தே, இலக்கியத்தில் உள்ளவற்றுடன் ஒப்பிட்டு, இலக்கியத்தில் அதை அடையாளம் காண வேண்டும்.

இந்த அடிப்படை அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமல், 'கற்பியலில்' ஆலோசனை சொல்வது உட்பட, மக்கள் வாழ்க்கையின் எல்லா அங்கங்களிலும் பங்கு பெற்ற அறிவன் என்னும் ஜோதிடனும், அவன் பயின்ற ஜோதிடமும் தமிழ் மக்களின் வாழ்வில் கலந்தவை என்பதை ஒத்துக் கொள்ளாமல், எவற்றையெல்லாம் ஜோதிட நோக்கில் ஆராய வேண்டும் என்ற பாகுபாடு அறியாமல் செய்யப்படுபவை எல்லாம் ஆராய்ச்சிகளே அல்ல.

 

(5) மிக மிக முக்கியமான அடுத்த விவரம், ஜோதிடம் மட்டுமல்ல, பல்துறை அறிவும், எந்த ஒரு துறையின் மீதும் விருப்பு- வெறுப்பற்ற பன்முனை ஆராய்ச்சியும் இருந்தால்தான் சமூகத்தைப் படம் பிடித்துக் காட்டும் எந்த சங்கப் பாடலுக்கும், வரலாற்றுச் செய்திக்கும் பொருள் கூற முடியும். கிடைக்கும் ஒவ்வொரு செய்தியும் அலட்சியப்படுத்த முடியாதவை என்னும் எண்ணம் வேண்டும். இது புராணச் செய்தி, இது ஆரியர்கள் புகுத்திய செய்தி, இது கட்டுக்கதை என்று தள்ளி விட்டு செய்யப்படும் ஆராய்ச்சியில் எதை இழக்கிறோம் என்பது கூடத் தெரியாது.  உதாரணமாக அமராவதிக் கல்வெட்டில் பல்லவர்கள் அஸ்வத்தாமன் வழியில் வந்தவர்கள் என்ற செய்தி இருக்கிறது. அந்த செய்திக்கு நீங்கள் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் தளத்தில் படித்தேன். அந்தச் செய்தி மகத்தானது. அந்தச் செய்திக்கும், மாற்பிடுகு, பெரும் பிடுகு, பகாப்பிடுகு, விடேல் விடுகு என்னும் பெயர்க் காரணங்களுக்கும், அந்த மன்னர்கள் நீர்நிலைகளை உருவாக்குவதில் ஏன் ஆர்வம் காட்டினார்கள் என்பதற்கும், அவர்களது விஷ்ணு பக்திக்கும், அவர்கள் வம்சாவளியினர் மல்யுத்தத்தில் வல்லவர்களாக இருந்தனர் என்பதற்கும், அவர்களே மஹாபாரத நிகழ்ச்சிகளை சிலையில் வடித்தனர் என்பதற்கும் ஒன்றுக்கொன்று இயைந்து தொடர்புகள் இருக்கின்றன. அவற்றை அறியக்கூடிய ஒரு முயற்சியே ஏற்படாத வண்ணம் இது சரிப்படாது, அது சரிப்படாது என்று உங்கள் சொந்தக் கருத்துக்களால் அதை ஒதுக்கி விட்டீர்கள்.

 

பன்முனை, அல்லது பல்துறை ஆராய்ச்சிகள் மூலமாகத்தான் அந்தத் தொடர்புகளை அறிய முடியும். அதில் புராண, இதிஹாசங்களையும் ஒதுக்க முடியாது.

உதாரணத்துக்கு பதிற்றுப் பத்தின் கடைசி பாடலான 90 ஆவது பாடலைக் காட்டுகிறேன். அந்தப் பாடல் முடிவில், நாம் இப்பொழுது பேச எடுத்துக் கொண்ட மாதம், வருடம் பற்றிய அருமையான வரிகள் வருகின்றன. குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையை, பெருங்குன்றூர் கிழார் வாழ்த்துகிறார்.

 

'நின்னாள், திங்கள் அனையவாக

திங்கள் யாண்டோ ரனையவாக

யாண்டே ஊழியனையவாக

ஊழி வெள்ள வரம்பினவாக' என்கிறார்.

 

அதாவது அரசனது வாழ்நாளின் ஒரு நாள் என்பது ஒரு மாதம் ஆகும். அவன் வாழ்நாளின் ஒரு மாதம் என்பது ஒரு வருடத்துக்கொப்பாகும். ஒரு வருடம் என்பது ஒரு ஊழியாகும். ஒரு ஊழி என்பது ஒரு வரம்பாகும்.

 

இந்த வரிகளில் பொருட்சுவையைப் பார்ப்பது இலக்கியம்.

 

நாள்- மாதம்- வருடம் என்னும் தொடர்பைப் பார்ப்பது ஜோதிடம்.

 

இந்தத் தொடர்பு ஒரு வருடத்தின் அளவுகோலாக, மாதத்தைக் காட்டுகிறது. இரண்டு அயனங்களையோ, அல்லது ஆறு பருவங்களையோ அல்ல. ஆனால் ஒரு வருடத்தில் 12 மாதங்கள் இருப்பது எந்த அளவு உண்மையோ, அந்த அளவு உண்மை, ஒரு வருடத்தில் 2 அயனங்களும், 6 பருவங்களும் இருக்கின்றன என்பது. ஆனால் நடைமுறைப் பயனுக்கு மாதம்வருடம் கணக்குதான் சொல்லப்படுகிறது.

 

இதன் அடிப்படை கால அளவு ஒரு தாமரை இலையை ஊசியால் குத்த எடுத்துக் கொள்ளத் தேவைப்படும் நேரமாகும். அந்த நேரம் 'திருதி' என்ப்படும். திருதி முதல் சொல்லப்படும் காலக் கணக்கு இதோ:

 

60 திருதி = 1 மூச்சு.

6 மூச்சு = 1 விநாடி

60 விநாடி = 1 நாடி / நாழிகை = 24 நிமிடங்கள்

2 நாழிகை – 1 முகூர்த்தம். (முழுத்தம்)

15 முகூர்த்தம் / 30 நாழிகை = 1 பகல் பொழுது / 1 இரவுப் பொழுது (இது சித்திரையிலும், ஐப்பசியிலும் மட்டுமே நிகழும். "சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும்" என்று ஆரம்பிக்கும் ஜோதிடப் பாடல், சித்தர்கள் ஜோதிடச்  சுவடிகளில் இருக்கிறது. 

30 முகூர்த்தம் / 60 நாழிகை = 1 நாள்

30 நாள் = 1 மாதம்

12 மாதம் = 1 வருடம்.

 

இந்த நாள்மாதம் - வருடத்தைத்தான் மேலே சொன்ன பதிற்றுப் பத்து பாட்டில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த நாளுக்குச் 'சாவன நாள்' என்று பெயர். ஒரு சூரிய உதயத்திலிருந்து, மறு சூரிய உதயம் வரை இருப்பது ஒரு நாள் அல்லது ஒரு சாவன நாள். அப்படிப்பட்ட நாட்கள் 30 கொண்டது 1 மாதம். அப்படிப்பட்ட 360 (30 X 12 ) நாட்களைக் கொண்டது ஒரு வருடம். இதைச் சாவன வருடம் என்பார்கள்.

 

இது நம்மைச் சுற்றியுள்ள விண்வெளி வட்டத்தின் 360 பாகைகளுக்குச் சமானம். ஏனெனில் சூரியன் ஒரு நாளுக்கு சுமார் 1 பாகை என்ற அளவில் நகருகிறான் (நகருவது போலத் தோற்றமளிக்கிறான்). இதனால் ஒரு சாவன வருடத்தில் 360 நாட்கள் இருக்கும், 365 -1/4 நாட்கள் அல்ல.

நாள் மாதமாகுக, மாதம் வருடமாகுக என்று புலவர் சொல்லும் கணக்கில் இருக்கும் 360 நாட்கள் கொண்ட சாவன வருடத்தை ஜோதிடத்திலிருந்து தெரிந்து கொள்கிறோம்., ஆனால் அவர் ஏன் அப்படி வாழ்த்துகிறார், அப்படி வாழ்த்துவதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிய, அப்படிப்பட்ட வாழ்த்துக்களின் பின்னுள்ள உலகியல் கருத்தை அறிய வேண்டும். அப்படி ஒரு உலகியல் கருத்தை மஹாபாரதத்தின் மூலம் அறிய முடிகிறது.

 

இந்த வாழ்த்து காட்டுகின்ற ஆண்டுக் கணக்கை மஹாபாரதம், சபாபர்வம், 49 ஆவது அத்தியாயத்தில் ஒரு நாள்  என்பது ஒரு வருடம் என்று காணலாம். பாண்டவர்கள் வனவாசம் ஆரம்பித்து 13 நாட்கள் முடிந்த நிலையில் பீமன், யுதிஷ்டிரனிடம் சொல்கிறான்வேதம் காட்டும் வழிப்படி, நன்னெறியிலும், விரதங்களைப் பூண்டும் இருப்பவருக்கு ஒரு நாள் என்பது ஒரு வருடத்துக்குச் சமானம். யுதிஷ்டிரன் அவ்வாறு வாழ்பவன் ஆதலால் வன வாசம் ஆரம்பித்த 13 நாட்கள், 13 வருடங்களுக்குச் சமானமாகும். எனவே அவர் வன வாசம் முடிந்ததாகக் கணக்கிட்டு, கௌரவர்களுடன் போர் தொடுக்க வேண்டும் என்று பீமன் கூறுகிறான்.

 

இதன் அடிப்படையில் 1 நாள் = 1 வருடம்.

அதாவது 360 நாள் = 360 வருடம்.

 

ஒரு அரசன் 1 வருடம் ஆண்டாலே அவன் 360 வருடங்கள் ஆண்டான் என்று சொல்ல முடியும். இதனால்  தசரதன் 16,000 ஆண்டுகள் ஆண்டான், ராமன் 11,000 ஆண்டான் என்று நூல்கள் சொல்வதெல்லாம் கட்டுக்கதைகள் அல்ல என்றும் தெரிகிறது. வெறுமனே உயர்த்திச் சொல்வதற்காக அப்படிச் சொல்லவில்லை, அதன் பின்ன்ணியில் ஒரு கணக்கு இருக்கிறது என்றும் தெரிகிறது.  ராமன் 11,000 வருடங்கள் ஆண்டான் என்றால் உண்மையில் 11,000 / 360 = 30 வருடங்கள், 6 மாதங்கள் வரை அவன் ஆண்டான் என்று பொருள் கொள்ள வேண்டும்.

 

இதே விதமாக, தொல்காப்பியர், தொல்காப்பியத்தை அரங்கேற்றிய அரங்கில் வீற்றிருந்த பாண்டியன் மாகீர்த்தி என்பவன் 24,000 ஆண்டுகள் அரசுக் கட்டிலில் வீற்றிருந்தான் என்று நச்சினார்க்கினியர், தொல்காப்பியப் பாயிர உரையில் கூறுகிறார். அவர் சொன்னதும் கட்டுக்கதை அல்ல என்று தெரிகிறது. 24,000 / 360 = 66 வருடங்கள், 8 மாதங்கள் அவன் அரசாண்டான் என்பதை அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

 

இந்த உலகியல் வழக்கின் அடிப்படையில் வாழ்த்தியிருக்கிறார் என்றும் தெரிகிறது.

1 நாள் = 1 மாதம்

1 மாதம் = 1 வருடம் என்று சொன்னதும், மேற்சொன்ன கணக்கின் வகையைச் சேர்ந்ததே. உலக வழக்கில் இவ்வாறு சொல்வது தமிழ் மண்ணில் இருந்திருக்கிறது என்பதற்கு இந்தப் பாடல் ஒரு அத்தாட்சி. ஒரு வருடத்துக்கு 360 நாட்கள் என்பது (30 நாள் x  12 மாதம்), 360 வருடங்கள் என்றாகின்றன. அந்த அரசன் 10 ஆண்டுகள் ஆண்டிருந்தால், அதை 3,600 ஆண்டுகள் என்றே மக்கள் குறிப்பிட்டிருப்பார்கள்.

 

இப்படி ஒரு உலக வழக்கு இருந்து வந்திருக்கிறது. இன்றைக்கு அது அழிந்து விட்டதால், அதைப் பற்றிய எந்த விவரமும் அறியாத நாம், பெருங்குன்றூர் கிழார் ஏதோ புகழ்ந்திருக்கிறார் என்று சொல்வது எளிது. நச்சினார்க்கினியரை நம்ப மாட்டோம் என்று சொல்லி விடுவது அதைவிட எளிது. அதனால் இழப்பு நமக்குத்தான். இந்த விவரத்தை அறிய மஹாபாரதம் தான் உதவுகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இது ஏற்றுக் கொள்ளத்தகாதது என்று எதையும் விட்டு விட முடியாது. இப்படிச் சிந்தித்திருந்தால், வருடப் பிறப்பென்பது சித்திரையில்தான் என்னும் ஜோதிடக் கருத்தை ஏற்றிருப்பீர்கள்.

 

ஜோதிடத்தில் ஊன்றிய தமிழர்கள்.

 

காலனிய ஆட்சி வராமல் இருந்திருந்தால் இந்தச் சந்தேகமே வந்திருக்காது. எதற்கெடுத்தாலும் காலனிய ஆதிக்கத்தைக் காரணமாகச் சொல்வது ஒரு நாகரிகமாகப் போய் விட்டது என்று என்று என்னை நீங்கள் குறை கூற முடியாது. ஏனெனில், காலனிய ஆதிக்கம் வந்து நம் பாட்த் திட்டங்களை ஒதுக்கி விட்டு, மேலை நாட்டுப் பாடத் திட்டங்களைக் கொண்டுவரவே, அது வரை- அதாவது 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை மிகவும் பிரபலமாகவும், பரவலாகவும் இருந்து வந்த வானவியல் கணிதப் பாடம் என்னும் ஜோதிடம் மறக்கடிக்கப்பட்டு விட்டது. என்றைக்கு இந்தியப் பொது மணி என்ற ஒன்றை ஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்தினார்களோ, அன்றுடன், நாழிகைக் கணக்கு பார்க்கும் முறையும் ஒழிந்து விட்டது. அது மட்டும் தொடர்ந்திருந்தால் நீங்கள் சொல்லும் மறைமலை அடிகள் உள்ளிட்ட எந்தத் தமிழ் அறிஞருக்கும் வருடப் பிறப்பு என்றைக்கு என்ற சந்தேகமே வந்திருக்காது. ஏனெனில், நாழிகைக் கணக்கர் செய்யும் கணக்கில் முதல் மாதமாகச் சித்திரையைக் கணக்கிட்டுச் செய்ய வேண்டிய கணக்குகள்தான்  இருக்கின்றன. நடைமுறை வாழ்க்கையில் சித்திரையை முன்னிட்டு நாழிகை கணக்கிடப்படுகையில், வருடப்பிறப்பு எப்பொழுது என்ற கேள்வியே எழுந்திருக்காது. இந்தக் கணிதத்தைச் சொல்லும் ஒரு பாடல் பழந்தமிழ்ச் சுவடிகளில் இருக்கிறது.

 

சித்திரைக்குப் பூசமுதல் சீராவ ணிக்கனுடம்

அத்தனுசுக் குத்திரட்டா தியாம்- நித்தநித்தம்

ஏதுச்சமா னாலும் ரெண்டே காலிற்பெருக்கி

மாதமைந்து தள்ளி மதி"

 (ஆதாரம் : "ஜோதிட கிரக சிந்தாமணி" பக் 97)

 

சித்திரை முதல் ஆடி வரையில், பூச முதலாகவும், ஆவணி முதல் கார்த்திகை வரையில் அனுஷம் முதலாகவும், மார்கழி முதல் பங்குனி வரையில் உத்திரட்டாதி முதலாகவும் அப்போது உச்சமான நட்சத்திரம் வரை எண்ணி, அதை 2-1/2 ஆல் பெருக்கி, அதுவரைச் சென்ற மாதங்கள், 1 க்கு 5 நாழிகையாக அன்று வரை ஈவுப்படி தள்ளிக் கண்டது அப்போதைய நாழிகையாகும். 'மாதமைந்து தள்ளி" என்பதற்கு, வருட ஆரம்பம் முதல் கழிந்து போன மாதங்கள் ஒன்றுக்கு 5 நாழிகை தள்ளி என்பது பொருள். இந்தக் கணக்கு வருட ஆரம்பம் சித்திரை என்று கொண்டால்தான் உதவும்.

 

நாழிகை மட்டுமல்ல, அனைத்து காலக் கணக்கும், சித்திரையை முதலாகக் கொண்டுதான் இருக்கின்றன. கலியுகம் பிறந்து இத்தனாவது நாள் என்று கல்வெட்டில் பார்க்கிறீர்களே, அந்த நாள் சித்திரையில் தொடங்கும் வருடத்தின் அடிப்படையில்தான் சொல்லப்பட்டுள்ளது. கோக்கருநந்தடக்கனின் பார்த்திவ சேகரபுரக் கல்வெட்டில் பார்க்கிறீர்களே, 'கலியுகக் கோட்டுநாள் பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து ஒன்பதினாயிரத்து எண்பத்து ஏழு சென்ற நாள்" என்று, அதை யாரும் விரல் விட்டு எண்ணிச் சொல்லவில்லை. கலியுகச் சுத்த நாள் என்று கணிப்பதற்கு கணக்குகள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு சொன்ன நாட்கள் அவை. அதில் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், அந்தக் கணக்கின் அடிப்படை மாதம் சித்திரை என்பதும் அடிப்படை வருடம் பிரபவ என்பதும், அதற்கும் அடிப்படை சகாப்தம் சாலிவாகன சகாப்தம் என்பதுமே. இதற்கான பஞ்சாங்க வாக்கிய சூத்திரங்கள் தமிழில் இருக்கின்றன.  

இப்படிச் சொல்லப்பட்ட பஞ்சாங்கம் அறிந்த .பெருங்கணி என்பானைப் பற்றி இளங்கோவடிகளே சிலப்பதிகாரத்தில் சொல்லியுள்ளதை நீங்கள் அறியவில்லை போலும்.

 

கண்ணகியின் சிலைக்குக் கல் எடுப்பதற்காக இமய மலைக்குச் செல்ல சேரன் செங்குட்டுவன் முடிவு செய்தபோது தன் "ஆசான், பெருங்கணி, அருந்திறல் அமைச்சர், தானைத் தலைவர்" ஆகியவர்களோடு ஆலோசனை செய்கிறான். அப்பொழுது

 

"ஆறிரு மதியினுங் காருக வடிப் பயின்று

ஐந்து கேள்வியும் அமைந்தோ"னான பெருங்கணியன்,

"முழுத்தம் ஈங்கிது முன்னிய திசை மேல்" என்கிறான்.

(கால் கோள் காதை), (முழுத்தம் = முகூர்த்தம்)

 

ஆறிரு மதி என்னும் பன்னிரண்டு ராசிகளில் கோள்கள் செல்லும் நிலையறிந்த அந்தப் பெருங்கணி, 'ஐந்து கேள்வியும்" அமையப் பெற்றிருந்தான் என்பதன் மூலம் 'ஐந்து கேள்வி' என்னும் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்னும் ஐந்து அங்கங்கள் கொண்ட பஞ்சாஞ்கத்தை அறிந்திருந்தான் என்று தெரிகிறது. அந்த ஐந்து கேள்விகளின் அடிப்படையில் வட திசை நோக்கிப் பயணம் செல்ல நல்ல முகூர்த்தமது என்றிருக்கிறான். இதன் மூலம் பஞ்சாங்கத்தைக் கொண்டு காலம் கணிக்கும் முறை சிலப்பதிகார காலத்தில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. சிலப்பதிகார காலத்தில் பஞ்சாங்கம் பார்க்கும் முறை வளர்ந்திருந்தது என்றால், அதன் ஆரம்பம் சங்க காலத்திற்குச் சென்று விடுகிறதே?

 

அந்தப் பஞ்சாங்கம் இல்லாமல் "வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி" பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி 'நற்பனுவ நால் வேதம்" தரும் சீரைப் பெற பல யாகங்களைச் செய்திருக்க முடியாதே?

 

கௌணியன் விண்ணந்தாயன் "ஆறுணர்ந்த ஒரு முது நூல்" கண்டோரைக் கொண்டு வேள்விகள் செய்திருக்க முடியாதே? அந்த ஆறு என்பதில் ஜோதிடம் வந்து விடுகிறதே. வேதாங்க ஜோதிடம் எனப்படும் அந்த அங்கத்தின் அமைப்பே பஞ்சாங்கத்தின் முன் அமைப்பு என்பதை ஜோதிடவியலார் அறிவர். அறியாதவர் வருடப்பிறப்பையே சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பர்.

 

பஞ்சாங்கம் அறிந்த பெருங்கணி இருந்தான்  என்றாலே, சித்திரை விஷுவில் அரசனுக்கு முன்னால் அந்தப் பெருங்கணி பஞ்சாங்கம் வாசித்திருக்க வேண்டும். சித்திரை விஷு, ஐப்பசி விஷு என்று இரண்டு விஷுக்களைச் சொன்னாலும், சித்திரை விஷுவில் மட்டும்தான் பஞ்சாங்கம் படிக்கப்படும், ஏனெனில் சித்திரையில் சூரியன் நுழையும் நேரமே வருட லக்னம் என்றும், ஜக-லக்னம் என்று சொல்லப்படுகிறது. இதை யார் சொன்னார்கள் என்று நீங்கள் கேட்பீர்கள். 'சூரியனுக்கும், புத்தாண்டுக்கும் உள்ள தொடர்பை வகுத்தவர் யார்?' என்றும் கேட்டுள்ளீர்கள். அதே கேள்வி தை மாதம் குறித்து உங்களை நோக்கிப் பாயும் என்பதை உணராமல் கேட்கிறீர்கள். நீங்கள் கேட்கவே அந்த விவரங்களைச் சொல்லி விட்டு, எனது கட்டுரைக்கு நீங்கள் அளித்த விமரிசனத்துக்கு வருகிறேன்.

 

சித்திரையில் வருடப்பிறப்பு ஆரம்பித்த காரணம்.

 

காலம் என்பதை மஹாகாலம், காலக்கிரமம் என்று இரண்டாக முனிவர்கள் அறிந்தனர். மஹாகாலம் என்பது பிரபஞ்சத்தின் தோற்றம் துவங்கி, மஹாப்பிரளயம் என்னும் முடிவு காலம் வரை செல்வது, இது பல ட்ரில்லியன் வருடங்கள் செல்கின்றன. அதன் ஒரு காலக் கட்டத்தில் இருக்கும் நம்முடைய புரிதலுக்காக, கல்பங்கள் என்றும், அவற்றின் உள் கூறுகளாக மன்வந்திரங்கள் என்றும், அவற்றின் உள் கூறுகளாக சதுர் யுகங்கள் என்றும் பகுத்துள்ளார்கள். இதை முக்கால ஞானத்தினால் முனிவர்கள் அருளினார்கள். அவர்கள் அருளினதில் சிலவற்றை இன்றைய அறிவியல் தட்டுத் தடுமாறி நிரூபித்து வருகிறது.

 

இந்தக் காலக் கூறுகள் எல்லாம் தவறாத கணக்கின்படி மீண்டும் மீண்டும் வருகின்றன. அறிவியலும் மீண்டும் மீண்டும் நடக்கும் REPEATABILITY  என்னும் அடிப்படையில்தான் சரி பார்த்து (VERIFICATION) நிரூபணம் செய்து வருகிறது, தவறாத மஹாகாலக் கணக்கின் அடிப்படைக் கால அளவு,  கலியுகத்துக்கு உள்ள கால அளவு ஆகும். கலியுகம் ஆரம்பித்த போது சூரியன், சந்திரன் மற்றும் ஐந்து கிரகங்கள் மேட ராசியின் பூஜ்ஜியம் பாகையில் ஒரு சேர நின்றன. வட்டத்துக்கு ஏது ஆரம்பம் என்று கேட்டீர்கள் அல்லவா? இதுதான் ஆரம்பம். இங்கு தொடங்கி இந்தக் கிரகங்கள் அனைத்தும் இதே இடத்தில் ஒன்று சேர 4,32,000 வருடங்கள் ஆகும். இதுவே மஹாகாலத்தின் அடிப்படை கால அளவு ஆகும். இதன் 2 பங்கு துவாபர யுகம், 3 பங்கு திரேதா யுகம், 4 பங்கு கிருத யுகம் ஆகும். ஆகவே ஒவ்வொரு மஹாயுக ஆரம்பத்திலும், இந்தக் கிரக சேர்க்கை மேடத்தின் நுழைவாயிலில் அமைகிறது. அதனால் ஜக- லக்னம் என்பது, மேட ராசியில் சூரியன் நுழையும் போது இருக்கும் லக்னமாகும். புதுப் பிறவி போல, அந்த இடத்திலிருந்து புது வருடம் தொடங்குகிறது.

 

மேடத்தில் கிரக- சேர்க்கை, இன்றைக்கு 5113 வருடங்களுக்கு முன் ஏற்பட்டது. கிருஷ்ணன் இந்த உலகத்தை விட்டு நீங்கின பொழுது இது ஏற்பட்டது என்று பல நூல்கள் கூறுகின்றன. அதுவே கலியுகம் தொடங்கிய நாளாகும். இதைக் கணிணி மூலம் விண்வெளி அமைப்பு மென்பொருளில் சரி பார்க்கலாம். ஆயிரக்கணக்கான வருட சரித்திரங்களை ஆராயும் போது, கல்வெட்டும், இலக்கியமும் உதவாது. விண்வெளி அமைப்புகளே அடையாளம் காட்டும், அந்த மென்பொருளின் உதவியால் ராமாயண காலக்கட்டத்தை பட்னாகர் என்பவர் நிரூபித்துள்ளார். நரஹரி ஆசார் என்பவர் மஹாபாரத காலத்தை நிரூபித்துள்ளார். அவ்வாறே கலியுக ஆரம்பத்தையும் சரிபார்க்கலாம், சரி பார்த்துள்ளார்கள். என்னுடைய ஜோதிட மென்பொருளிலும் சரிபார்த்துள்ளேன். அந்த அமைப்பு உண்மையே.

 

விண்வெளியின் பின்னணியில் PRECESSION  என்று சொல்கிறார்களே அவ்வாறு எந்த அளவு சூரிய மண்டலம் நகர்ந்தாலும், நாம் இருக்கும் பூமியிலிருந்து சூரியனைப் பார்க்கிறோமே அதில் பின்னோக்கு ஏற்படாது. இதைத்தான் மிகச் சரியான சொற்களைக் கொண்டு சங்கப் புலவர்கள், 'விரி கதிர் விசும்புடன் புணர்ப்ப' என்றும், விரிகதிர், மதியம் விசும்புடன் புணர்ப்ப என்றும் சொல்லியுள்ளார்கள். பின்னணியில் உள்ள விசும்பில் மேடம் ஆரம்பிக்கும் இடத்தில் சூரியன் பொருந்தும்போது ஒரு புதுச் சுற்று ஆரம்பிக்கிறது. மீண்டும் அதே இடத்துக்குச் சூரியன் வருவதற்கு எடுத்துக் கொள்ளும் காலமே ஒரு சூரிய வருடம் ஆகும், இதற்கு 365. 25 நாட்கள் ஆகின்றன.

 

இதற்கு முன் சாவன வருடம் என்று பார்த்தோம். அதற்கு 360 நாட்கள். விரதம் முதலான மனித வாழ்க்கையின் செயல்பாடுகளுக்கு அதைப் பயன் படுத்துகிறோம். சூரிய வருடம் என்பதை உலகத்தின் இயக்கங்களை அறியப் பயன்படுத்துகிறோம். சில நட்சத்திரங்களில் ஊடே சூரியன் செல்லும் போது வெப்பம் அதிகரிக்கும். அதை அக்கினி நட்சத்திரம் என்கிறோம். வேறு சில நட்சத்திரங்களில் பயணிக்கும் போது மழை பொழியக் காரணிகளைக் காட்டும். அதைக் 'கர்போட்டம்' – மழைக்கான கர்பம் உண்டாகிறது - என்கிறோம். இவை போல பலவற்றைக் கவனித்து, நடக்கப்போவதைக் கணிக்கிறோம்.

 

நட்சத்திரங்களுக்கு ஏன் இந்த முக்கியத்துவம் என்று கேட்கலாம். உண்மையில் நட்சத்திரம் என்பது ஒரு அடையாளமே, மேடம் ஆரம்பித்து 360 பாகைகள் கொண்ட விண்வெளி மண்டலத்தை 27 கூறுகளாகப் பிரித்துள்ளார்கள். ஒவ்வொரு கூறும் 13 பாகை- 20 கலை தொலைவு உள்ளது. இந்தத் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்தின் பெயரால் அதற்கு பெயர் இடப்பட்டுள்ளது. அந்தத் தொலைவு விசும்பை சூரியனும், சந்திரனும், கோள்களும் கடக்கையில் ஒவ்வொரு விதமான பலன்கள் ஏற்படுகின்றன. மழை, பஞ்சம், பயிர், நிலநடுக்கம், சுனாமி, விபத்து, பயங்கரவாதம் என்று எல்லாவிதமான உலக நிகழ்ச்சிகளையும் இவற்றைக் கொண்டு சொல்லி விடலாம், இவற்றைக் கண்டு பிடிப்பதற்கான மூலக் கூறுகளை முனிவர்கள் உபதேசித்திருக்கிறார்கள். சென்ற 100 வருடங்களில் நடந்த நிலநடுக்கம், சுனாமி,, பயங்கரவாதச் செயல்கள் ஆகியவற்றை ஆராய்ந்து நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பெங்களுரிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில ஜோதிட மாத இதழில் வெளியாகியுள்ளன. இவற்றுக்கெல்லாம் அடிப்படை சித்திரையில் தொடங்கும் வருடம்தான். வேறு எப்படி மாற்றினாலும் சரிவராது.

 

தமிழ்நாட்டின் நட்சத்திர ஜோதிடம்.

 

இந்த இடத்தில் பி.டி. சீனிவாச ஐயங்கார் எழுதிய தமிழர் வரலாறு நூலிலிருந்து நீங்கள் காட்டிய மேற்கோளை நினைவு படுத்துகிறேன். காலாவதியான அந்தக் கருத்தை நீங்கள் மேற்கோளிடுகிறீர்கள் என்றால், வரலாற்றில் மூழ்கி மூழ்கி, நீங்களே ஒரு மியூசியம் பொருளாக ஆகி விட்டீர்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது. உங்களை மட்டம் தட்ட வேண்டும் என்பது என் எண்ணமல்ல. ஆனால், தொடர்ச்சியாக உருவாகிக் கொண்டிருக்கும் கருத்துக்களை அறிந்து கொள்ளாமல் எப்படி ஆராயப் புகமுடியும் என்ற கேள்வியே எழுகிறது. வெளி உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, அவர் சொன்ன கருத்தில் உள்ள பேதத்தையாவது கவனிக்க வேண்டாமா? 27 நட்சத்திரங்களைப் பற்றி வேதங்கள் கூறுகின்றன என்கிறார். அது சரியே. 27 நட்சத்திரங்களைப் பற்றி ரிக் ஜோதிடம் தெரிவிக்கிறது. ஆனால் அவற்றைப் பற்றிய அறிவு யவன, காந்தார மக்கள் மூலமாக இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் பரவின என்கிறாரே அது சரியா?

 

அவர் சொல்லும் யவன கிரேக்கமேலை நாட்டு ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளனவா? அவற்றினூடே கிரகங்கள் செல்வதைக் கொண்டு பலன் சொல்லும் முறை அங்கு இருக்கிறதா? நாம் சொல்லும் ராசி என்பது சரியாக 30 பாகைகள் கொண்டது. அவர்கள் ராசிகள் அப்படியல்லவே! கிரேக்க, காந்தார நாடுகளில், ராசி மண்டலம் நமக்குத் தெரிவது போல 30 பாகை கொண்டதாகத் தெரியாது.

 

இந்த விவரமெல்லாம் எல்லாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. நம்மிடையேதான் தமிழ் அறிஞர்கள் இருக்கிறார்களே, அவர்கள் சொல்லலாமே, 'மீன்வயின் நிற்ப வானம் வாய்ப்ப' (பதிற்றுப் பத்து 90) என்று எந்தெந்த விண்மீன்களின் காலில் கோள்கள் நின்றால் மழை பொழியுமோ அங்கு அவை நிற்பதால், வானம் பொழிந்தது என்று சொல்லியுள்ளார்களே. அது மட்டுமல்ல "அழல் சென்ற மருங்கின் வெள்ளியோடாது மழை வேண்டு புலத்து மாரி நிற்ப" (பதிற்றுப் பத்து 13) என்கிறாரே செவ்வாய் சென்ற இடத்தில் சுக்கிரன் செல்லாததால், மழை பொழிந்தது என்பதில், செவ்வாய் சென்ற இடத்தை எப்படி அடையாளம் கண்டார்கள்? அது நின்ற நட்சத்திரப் பாகையைக் கொண்டுதானே?

 

மகத்தில் புகுந்த சனி காட்டும் கெடுதலைப் பற்றி தேவாரம், வாயு சங்கிதை, வில்லி பாரதம் ஆகிய நூல்களில் காணலாம். நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டதால் ஜோதிடத்துக்கு, 'நட்சத்திர தரிசனம்" என்ற பெயரும் உண்டு. அது நம் நாட்டு ஜோதிடத்தில் மட்டுமே இருப்பது.

 

உத்தராயணம் உதவாது.

 

கி.மு. 200 இல் தான் ஜோதிடம் இந்தியாவில் பரவிற்று என்று சொல்கிறாரே, அவர் வேதாங்க ஜோதிடத்தைப் படிக்காமல் சொல்லியிருக்கிறார். லகதர் என்னும் ரிஷி எழுதின வேதாங்க ஜோதிடத்தைக் கொண்டு, அது எழுதப்பட்ட காலத்தைச் சொல்லலாம். அதில் சொல்லப்பட்டுள்ள உத்தராயணத்துக்கும், இன்றைக்கு உத்தராயணம் ஆரம்பிக்கும் பாகைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கொண்டு எத்தனை வருடங்களுக்கு முன் அந்த உத்தராயணம் வந்தது என்று சொல்லலாம். அதன்படி அது பொ.மு 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று தெரிய வருகிறது. அவ்வாறு இருக்க பொ.மு 2 ஆம் நூற்றாண்டில்தான் ஜோதிடம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று சொல்வது மிகவும் தவறான கருத்து.

 

இந்த காலம் கண்டுபிடிக்கப்பட்ட விவரத்தைப் பார்ப்போம். "ப்ரபத்யேதே ஸ்ரவிஷ்ட்டாதௌ சூர்ய" என்று ஆரம்பிக்கும் அந்த ஸ்லோகத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் உத்தராயணம் ஆரம்பித்தது என்று கூறப்பட்டுள்ளது. அவிட்ட நட்சத்திரம் மகரகும்ப ராசிக்கிடையே பிரிந்திருந்தாலும், உத்தராயணம் என்பது, மகர ராசியில் அதிகபட்சம் 27 பாகைகள் மட்டுமே செல்ல முடியும். ஏன் என்பதைப் பின்னால் விளக்குகிறேன்.

 

மகரம் 27 பாகையில் அவிட்டம் 1 ஆம் பாதம் முடியும் தறுவாயில் இருக்கும். இன்றைக்கு உத்தராயணம் என்பது மார்கழி மாதம் வரும் தனுர் ராசியின் 6 ஆவது பாகையில் ஆரம்பிக்கிறது. இந்தத் தூரத்தை பாகை ஒன்றுக்கு 72 வருடங்கள் என்ற கதியில் உத்தராயணம் கடந்திருக்கிறது. அதாவது 51 பாகை X 72 = 3672 வருடங்களுக்கு முன்னால் இந்த ஸ்லோகம் எழுதப்பட்டிருக்கிறது. அதாவது பொ.மு. 17 ஆம் நூற்றாண்டில் இது எழுதப்பட்டு, அதன் அடிப்படையில் வேத யாகங்களைச் செய்திருக்கிறார்கள்.

 

இதற்குப் பிறகு நமக்குக் கிடைத்த சான்றாக வராஹமிஹிரரின் நூல்கள் உதவுகின்றன. அவற்றில் உத்தராயணம் உத்திராடம் 2 ஆம் பாதத்தில் ஆரம்பித்தது என்கிறார். இது தை மாதம் ஆரம்பிக்கும் மகர ராசியின் முதல் 3 பாகை 20 கலைகளுக்குள் அடங்கும். இதன் காலக்கட்டம் பொ.பி. 2 ஆம் நூற்றாண்டு ஆகும். இதற்குப் பிறகுதான் தை மாத மகர ராசியின் பூஜ்ஜியம் பாகையில் அதாவது தை மாத முதல் நாளன்று உத்தராயணம் வந்த்து, அது எப்பொழுது என்று கணக்கிட்டால், பொ.பி 3 ஆம் ஆண்டை ஒட்டி அது வந்திருக்கிறது. தை முதல் நாளில் உத்தராயணம் துவங்கி, அன்றுதான் தமிழர்கள் புத்தாண்டைக் கொண்டாடினார்கள் என்று நீங்கள் சொல்வது உண்மையானால், அது பொ.பி 3 ஆம் நூற்றாண்டில் மட்டுமே சாத்தியமாகும். சிலப்பதிகாரத்துக்குப் பிற்பட்ட காலம் இது. அவ்வாறிருக்க சங்க காலத்தில் தையில் புத்தாண்டு கொண்டாடினார்கள் என்று நீங்கள் சொல்வது நடக்கவே இயலாத ஒன்றாகும். அப்படியும் நீங்கள் பிடிவாதம் பிடித்தீர்கள் என்றால், அந்தப் புத்தாண்டு ரிக் வேதியர்கள் பின்பற்றிய புத்தாண்டு என்று ஒப்புக் கொள்ள வேண்டி வரும்.

 

இன்னும் பார்க்கலாம். ராஜராஜ சோழன் காலத்தில் உத்தராயணம் இன்னும் 10 பாகைகள் பின்னோக்கி வந்து விட்டது. அதாவது தனுர் ராசியின் 10 ஆவது பாகையில், மார்கழி 20 ஆம் நாளை ஒட்டி உத்தராயணம் ஆரம்பித்தது..

இந்தக் கணக்கைப் பார்த்தாலே, உத்தராயணத்தைக் கொண்டு வருடத்தை ஆரம்பிக்கலாம் என்பது நடைமுறைக்கு உதவாது என்பது புரியும். ரிக் ஜோதிடத்தில் உத்தராயணத்தை மட்டும் குறிக்கவில்லை, தட்சிணாயனத்தையும் குறித்து வைத்தார்கள். காரணம் அவை புண்ணிய காலங்கள் எனப்பட்டன. உத்தராயண ஹோமம், தட்சிணாயன ஹோமம் ஆகியவற்றைச் செய்பவர்கள், மிகச் சரியாக அந்தக் காலத்தைக் கணக்கிட்டுச் செய்ய வேண்டும்.

 

மகர சங்கராந்தி வருடப் பிறப்பல்ல.

 

உத்தராயணத்தையும், தை முதல் தினத்தையும் (மகர சங்கராந்தி) ஒன்றாக இணைத்து அதுவே வருடப் பிறப்பென்றால், அதைப்போல அபத்தம் வேறு கிடையாது. சங்கராந்தி என்பது சங்கிரமணம் என்னும் சமஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்தது. சங்கிரமணம் என்றால் நுழைதல் என்று பொருள். ஒரு ராசிக்குள் சூரியன் நுழைவதைச் சங்கராந்தி என்பார்கள். உத்தராயணம் என்றால் உலகின் தென் பாகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சூரியன் வடக்கு நோக்கித் திரும்புகிறான் என்று அர்த்தம்.

 

12 ராசிகளிலும், சூரியன் நுழைவதால் 12 சங்கராந்திகள் உள்ளன. 12 சங்கராந்திகளிலும் கோயில் பூஜை, ஹோமம் ஆகியவை நடை பெறும். ராஜராஜன் காலத்தில் அவை நடந்தன என்பதைத் தஞ்சைக் கல்வெட்டால் அறிகிறோம். அதில் உத்தராயண ஹோமம் பற்றிய செய்தி இல்லை என்பதைக் கவனிக்கவும். ராஜராஜன் காலத்தில் உத்தராயணம் மார்கழியில் ஆரம்பித்து விட்டது. அதைக் கோயில் பூஜையாகச் செய்ததில்லை. தனிப்பட்டவர்கள் செய்திருக்கலாம்.

திருவலஞ்சுழிக் கல்வெட்டில் நீங்கள் பார்ப்பது, 12 சங்கராந்திகளில் முக்கியமான 4 சங்கராந்திகளாகும். இவை சித்திரை (மேடம்) ஆடி (கடகம்), ஐப்பசி (துலாம்), தை (மகரம்) மாத சங்கராந்திகளாகும், இவற்றில் சிறப்புப் பூஜை செய்வதற்கு ஆன்மீகம், ஜோதிடம் ஆகிய இரண்டு வகைகளிலும் முக்கியத்துவம் உண்டு. ஆன்மீகக் காரணத்தைத் திருச்செந்தூர் தல புராணத்தில் காணலாம். சித்திரை, ஐப்பசி சங்கராந்திகளில் ஸ்கந்த புஷ்கரிணியில் குளித்தால் முக்தி கிடைக்கும். ஆடி, தை சங்கராந்திகளில் குளித்தால் வாஜபேயம் செய்த பலன் கிட்டும் என்று அந்த நூல் கூறுகிறது.

 

ஜோதிடக் காரணத்தில் நோக்கினால் இந்த நான்கு சங்கராந்திகளுமே சர ராசிகளில் நிகழ்பவை. இவை ஒவ்வொன்றிலும் சூரியன் நுழையும் போது, அடுத்த 3 மாதங்களுக்கான பலனைக் கணித்துச் சொல்வார்கள். இதன் ஆரம்பம் மேட சங்கராந்திதான். மேட சங்கராந்திக்கு 'சர்வ உத்தியோகாதிபதி" என்ற பெயரும் உண்டு. ஒரு மனிதனின் பிறப்பு ஜாதகத்தின் லக்னம் போல இந்த மேட சங்கராந்தி உலகத்தின் லக்னமாகக் கருதப்படுகிறது. அதனால் அதை ஜக லக்னம் என்று கூறுவார்கள். அந்த லக்னத்தைக் கொண்டும், நவ நாயகர்கள் என்ற பிற கணிப்புகளைக் கொண்டும் வருட பலன் சொல்வார்கள். இது பொது பலன்.

இதைத் தவிர இந்த 4 சங்கராந்திகளிலும் அமையும் லக்னத்துக்குத் தனித்தனியாக 4 ஜாதகம் கணிப்பார்கள். அவற்றுக்கு அடுத்து வரும் 3 மாதப் பலன்களைக் கணக்கிட இவை உதவும்.  அதையொட்டி அந்த 4 சங்கராந்திகளிலும், விசேஷ பூஜைகள் நடத்தப்படும். இவற்றில் தலையாயது சித்திரையில் வரும் மேட சங்கராந்தியே. முன்பே நாம் நட்சத்திரத்தைப் பற்றிச் சொன்னது நினைவிருக்கும். சித்திரையில் முழு நட்சத்திரத்தில் சூரியன் நுழைகிறான். தை உட்பட மீதம் இருக்கும் 3 சங்கராந்திகளில் முழு நட்சத்திரம் கிடையாது. அவற்றில் இருக்கும் நட்சத்திரங்கள் இரண்டு ராசிகளிடையே பிரிந்திருக்கும். சித்திரையில் வரும் சங்கராந்தியில் மட்டுமே முழு நட்சத்திரத்தில்அதாவது நட்சத்திர ஆரம்பத்தில் சூரியன் நுழையும்.

 

முழு நட்சத்திரத்தில் நுழைந்தால் என்ன, பாதி நட்சத்திரத்தில் நுழைந்தால் என்ன, ராசியில் நுழைவதுதானே முக்கியம் என்று கேட்கலாம். சூரியனைப் பொறுத்த மட்டில் நட்சத்திர ஆரம்பத்தில் நுழைவதைக் கொண்டே பலன் சொல்ல முடியும். ஒரு நட்சத்திரத்தில் சூரியன் நுழையும் பொழுது, எந்த விதமான வானிலை ஓரிடத்தில் தென்படுகிறதோ, அந்த நட்சத்திரத்தை விட்டு சூரியன் நீங்கும் வரை அதே வானிலை தொடரும். இதை நாமே இயற்கையில் சரிபார்க்கலாம். மழைக் காலத்தில் இதை நன்கு கவனிக்க முடியும். தை மாதத்தில் சூரியன் நுழையும் போது அது செல்லும் உத்திராட நட்சத்திரத்தின் கால் பங்கு ஏற்கெனெவே மார்கழியில் முடிந்து விடும். மீதியில் தான் சூரியன் செல்லும். இதனால் தை மாதத்தில் வருடப்பிறப்பு என்பது நடக்கவே இயலாத ஒன்றாகும்.

 

ஒவ்வொரு சங்கராந்திக்கும் தனித்தனிப் பலன் இருக்கிறது. இவை ஒரு நாட்டின் விளை பொருளிலிருந்து, விலங்குகள், பாம்புகள், காடுகள் வரை, விவசாயிகள் முதல், பல தொழில் செய்வோர் வரை அனைத்து மக்களுக்கு நேரும் பலனை அறிய உதவுபவை. அதன் அடிப்படையில் அந்தந்த சங்கராந்திகளில் பூஜைகள் செய்யப்பட்டன. இவற்றைப் பற்றிய விவரங்கள் வேண்டுவோர் எனது கட்டுரையை இங்கே படிக்கலாம்:-

http://jayasreesaranathan.blogspot.in/2011/12/indian-astrology-is-more-scientific.html

 

வியாழ வட்டமும், 60 வருடங்களும்.

 

இப்பொழுது மீண்டும் லகத ஜோதிடத்தில் சொல்லப்பட்ட உத்தராயணத்துக்கு வருவோம். அதில் சொல்லப்பட்ட விவரங்கள் பிருஹஸ்பதயமானம் என்கிற வியாழன் சுற்றும் கால அளவைக் காட்டுகின்றன. வியாழன் என்னும் கிரகம் ஒரு ராசியைக் கடக்க ஏறத்தாழ 1 வருடம் ஆகும். இவ்வாறு 12 ராசிகளையும் கடக்க 12 வருடங்கள் ஆகும். இவ்வாறு 5 சுற்றுகள் முடிந்தால் அது ஒரு வியாழ வட்டம் ஆகும், அதற்காகும் காலம் 60 வருடங்கள். அந்த 60 வருடங்களின் பெயர்களே பிரபவ முதல் அக்ஷய வரை உள்ளவை. இந்த 60 வருட வட்டம், வியாழனும், சூரியனும் அவிட்ட நட்சத்திரத்தில் சேர்ந்த பிறகு, சூரியோதயத்துக்கு முன்னால் (HELIACAL RISING) வியாழன் தென் பட ஆரம்பிக்கும் போது ஆரம்பிக்கிறது. இதன்படி மாசி மாதத்தில் பிரபவ வருடம் ஆரம்பிக்கும். அப்பொழுது சூரியன் அவிட்ட நட்சத்திரத்தில் இருக்கும். அமாவாசை கழிந்த மறுநாளான பிரதமையில் வருடம் ஆரம்பிக்கும். இந்த விவரத்தின் மூலம் இந்த வியாழ வட்டம் வேறு, சித்திரை வருடப் பிறப்பு வேறு என்று புரிந்து கொண்டிருப்பீர்கள்.

 

"பிறகு ஏன் ஒவ்வொரு சித்திரை முதல் தேதியிலும் ஒவ்வொர் ஆண்டு தொடங்குவதாகச் சோதிடம் கூறுகிறது?" என்று கேட்டீர்கள் அல்லவா? சித்திரையில் தான் நமது ஆண்டு துவங்குகிறது. வியாழ வட்டம் ஆரம்பிக்கும் மாசியில் அல்ல. அந்த வருடப் பிறப்பு, லகதர் காலத்திய வேத மக்கள் பின்பற்றியது. ஆனால் நீங்கள்தான் உத்தராயாணம் ஆரம்பித்த தை என்று வருடப் பிறப்பைத் தைக்கு மாற்ற ஆலாய்ப் பறக்கிறீர்கள். லகதரது காலத்தில், மேற்சொன்ன அதே இடத்தில் உத்தராயணமும் ஆரம்பித்தது. அதனால் உத்தராயணத்தில்தான் வருடம் ஆரம்பிக்கிறது என்று இன்றைக்கு அதைப் படித்தவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கொண்டு உத்தராயணமே தமிழரது வருடப் பிறப்பென்றால், தமிழ்ர் வேத வாழ்க்கையை வாழ்ந்தவர் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். அந்த உத்தராயணம் தையில் ஏற்படவில்லை என்பதையும் நீங்கள் அறியவில்லை.

 

அதுமட்டுமல்ல, 60 வருட குரு வட்டம் என்று தெளிவாக நானும், திரு எஸ். ராமச்சந்திரன் அவர்களும் சொல்லியிருக்கிறோம். (அவர் கட்டுரையை நான் படித்ததில்லை, உங்கள் கட்டுரை மூலமாகத்தான் முதன் முதலாகப் படித்தேன்). அவர் சொன்னதை ஓரிடத்தில் நீங்களும் எடுத்துக் காட்டியுள்ளீர்கள். அதை மறந்து, அதையே சொன்ன என்னுடைய வரிகளை மேற்கோளிட்டு, ஏன் இத்தனை முரண்பாடுகள் என்று கேட்டிருக்கிறீர்கள். மீண்டும் அந்தப் பகுதிகளைப் படித்துப் பாருங்கள். எதோ குறை சொல்ல வேண்டும் என்று சொலியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

 

குரு வட்டத்தில் வருடங்களை ஐந்தைந்தாகப் பிரித்தார்கள். ஏனெனில் முதல் வருடம் எந்த பாகையில் சூரியனும், சந்திரனும் சந்தித்துக் கொண்டனவோ, அதே பாகையில் 5 வருடங்களுக்குப் பிறகுதான் சந்தித்துக் கொள்கின்றன. சூரியனது வேகமும், சந்திரனது வேகமும் மாறபடவே இப்படி ஆகிறது. ஒரு பாகையில் ஆரம்பித்து, ஒரு சுற்று முடித்து அதே பாகையில் சூரியன் வருவதற்கு 365.25 நாட்கள் ஆகின்றன. இது ஒரு சூரிய வருடம். ஆனால் அதற்குள் சந்திரன் 12 சுற்றுகளை முடித்து விடும். 365.25 நாட்களில் சூரியன் முடிக்கும் தூரத்தை (360 பாகைகள்), சந்திரன் 354 நாட்களுக்குள் 12 சுற்றுகளில் முடித்து விடும். இதனால் 11. 25 நாட்கள் வித்தியாசம் வருகிறது. இப்படியே தொடர்வதால், 2-1/2 வருடங்களில் சந்திரன் 28. 15 நாட்கள் அதாவது ஏறத்தாழ ஒரு சந்திர மாதத்தை அதிகப்படியாக முடித்திருக்கும். 13 ஆவது மாதமாக வரும் இதை அதிக மாதம் என்பார்கள். மீண்டும் 6 ஆவது வருடம் ஆரம்பிக்கும் போதுதான் முதல் வருடம் ஆரம்பித்த இடத்தில் சூரியனும், சந்திரனும் சந்திப்பார்கள், அதற்குள் 2 அதிக மாதங்கள் வந்து விடும். நீங்கள் சொன்னீர்களே, கடந்த மார்கழியில் பௌர்ணமி திருவாதிரையில் வரவில்லை, புனர் பூசத்திலும், கொஞ்சம் பூசத்திலும் வந்தது என்றுஇந்த அதிக மாதத்தினால்தான் அது நிகழ்ந்தது. முதலாவது வருடத்தில் பௌர்ணமி அமையும் நட்சத்திரத்தின் பெயரால், மாதங்களின் பெயர்கள் உருவாக்கப்பட்டன. அடுத்த 4 வருடங்களில் சிறிது சிறிதாக வித்தியாசம் வரும். பிறகு மீண்டும் 6 ஆவது வருடத்தில் சரிவர வரும்.

 

இந்த ஐந்து வருடங்களில் முதல் வருடத்திற்கு சம்வத்சரம் என்று பெயர். வற்சரம் என்றால் ருதுக்கள் (பருவங்கள்) வசித்தலை உடையது என்று நிகண்டுகளில் போட்டிருப்பார்கள். அதை வைத்துக் கொண்டு வருடம் என்பது இந்த பருவத்தில் (ருது) ஆரம்பித்தது, அந்த பருவத்தில் ஆரம்பித்தது என்று வருடத்தின் அளவுகோலாகப் பருவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்கள், ஆனால் வருடத்தின் அளவுகோல் மாதம் என்றுதான் ஜோதிடத்தில் கருதப்படுகிறது.

 

அளவை வாய்ப்பாடுகளில்

10 மில்லி மீட்டர் = 1 சென்டிமீட்டர்,

10 சென்டிமீட்டர் =1 டெசி மீட்டர் என்பது போல,

60 நாழிகை = 1 நாள்,

30 நாள் = 1 மாதம்,

12 மாதம் = 1 வருடம் என்றுதான் கணக்கு இருக்கிறது.

இதையே, இத்தனை நாள் = 1 அயனம் என்றோ,

இத்தனை நாள் = 1 பருவம் என்றோ சொல்ல முடியாது.

 

அதனால் பருவமும், அயனமும், வருடத்துக்குள் அடங்கும் என்றாலும், தவறாத கணக்கீடு செய்வதற்கு நாளும், மாதமுமே பயன்படுகின்றன. அதனால் மாதத்திலிருந்துதான் வருடம் ஆரம்பிக்கும்அயனத்திலிருந்தோ, பருவத்திலிருந்தோ அல்ல.

 

மேற்சொன்ன ஐந்து வருடங்களும் ஒரே நாளில் ஆரம்பிப்பதில்லை. சூரிய சந்திர வேக வித்தியாசத்தால் இப்படி ஆகிறது. மீண்டும் ஒரே இடத்தில் சந்திக்க 5 வருடங்கள் ஆவதால், 5 வருடங்களை யுகம் என்றார்கள், இது முன் சொன்ன கலி யுகம் போன்ற மஹாயுகம் அல்ல. காலக்கிரமத்தில் வரும் சிறு யுகம் இது. யுகம் என்ற சொல் பலவித அடிப்படைகளில், பலவிதமாகச் சொல்லப்படுவதால், இவற்றின் அரிச்சுவடிகள் உள்ள ஜோதிடத்தை அறியாதவர்கள் தப்பும் தவறுமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு சொல்லும் 5 வருட யுகம் பஞ்ச வருஷாத்மிக யுகம் எனப்படும். யுகம் என்றால் இணை அல்லது சேர்தல் என்று பொருள். சூரியனும், சந்திரனும் ஒரே இடத்தில் சேர ஆகும் 5 வருடம் ஒரு யுகம். இப்படி வரும் 12 யுகங்கள் கொண்டது ஒரு வியாழ வட்டம்.  5 X 12 = 60 வருடங்கள் பிரபவ என்று பெயரில் ஆரம்பித்தன. 

 

லகதர் காலத்துக்குப் பிறகு எழுந்த எந்த ரிக் வேத ஜோதிடமும் நமக்குக் கிடைக்கவில்லை. லகத ஜோதிடம் எழுதப்பட்ட காலத்துக்கு சுமார் 250 வருடங்களுக்குப் பிறகு உத்தராயணம் படிப்படியாகப் பின் சென்று, அவிட்டத்திலிருந்து திருவோணத்துக்கு மாறியது. அதற்காக வியாழ வட்ட்த்தையும், அதன் வருடப் பிறப்பையும் திருவோணத்துக்கு மாற்றவில்லை. ஏனெனில் அந்த வட்டத்தின் அடிப்படையே, மகரத்தில் நீசம் அடைந்த வியாழன், சூரியனுடன் கூடின பிறகு, விடிகாலையில் தென்பட ஆரம்பிக்கும் காலமாகும். அதைக் கொண்டுதான் வியாழ வட்டம் ஆரம்பிக்கிறது.

 

வேத ஹோமம் செய்த சமுதாயத்தில் இந்த வியாழ வட்ட வருடங்கள் பயன்பட்டன. சம்வத்சரம், பரிவத்சரம், இடவத்சரம், அநுவத்சரம், இத்வத்சரம் என்னும் பெயர் கொண்ட ஐந்தைந்தான அந்த வருடங்கள் வேள்விகளை ஒட்டி எழுந்தவை. இந்த ஐந்து வருடங்களைக் கொண்ட ஒரு யுகத்தில் 60 சூரிய மாதங்கள், 61 சாவன மாதங்கள், 62 சந்திர மாதங்கள், 67 நட்சத்திர மாதங்கள் (ஒரு நட்சத்திரத்தில் ஆரம்பித்து, மீண்டும் அதே நட்சத்திரத்தில் வர சூரியன் எடுக்கும் கால அளவு), இவை தவிர எத்தனை திதி, நாழிகை, காலம், முஹூர்த்தம் என்றும் ரிக் ஜோதிடம் பட்டியலிடுகிறது. இவை எல்லாவற்றையும் ஒருங்கிணத்துத்தான், நேரம், காலம் பார்க்க முடியும். அதன் அடிப்படையில் வேள்விகள் செய்தார்கள். ஆனால் இவற்றின் பயன்பாட்டை அறியாத தற்காலத்தவர், சூரிய காலண்டர், சந்திர காலண்டர், இது நமக்கு, அது மற்றவர்களுக்கு என்றுப் பிரித்துச் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் இவை அனைத்தையுமே நடைமுறையில் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் வியாழ வட்டம் என்பது மட்டும் வழக்கொழிந்து போய்விட்டது. 

 

2 ஆம் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறிய வியாழ மாலை அகவல் என்னும் நூல் இந்த வியாழ வட்டத்தை விளக்கிச் சொல்வதாகக் கூறுகிறார்கள். அப்படி ஒரு நூல் அரங்கேறியது என்பதே, வேத வாழ்க்கையைத் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரமாகும். இதனால் 2 ஆம் சங்க காலத்தில் வியாழ வட்டம் புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.

 

இடைக்காடனாரும்  60 வருடங்களும்.

 

ஒரு காலக் கட்டத்தில் வியாழ வட்டம் வழக்கொழிந்த போது, அதிலுள்ள வருடப் பெயர்களை சித்திரையில் ஆரம்பிக்கும் வருடப் பிறப்புகளுக்கு மாற்றியிருக்கிறார்கள். அதை எப்பொழுது யார் செய்தார்கள் என்று தெரியாது. ஆனால் இடைக்காடனார், சித்திரை வருடப்பிறப்புக்கு அந்தப் பெயர்களைக் கொண்டு வருட பலனும் சொல்லவே அவர் காலத்திலேயே வியாழ வட்டப் பெயர்கள் சூரிய வட்டத்திற்கு வந்து விட்டன என்று தெரிகிறது.

இடைக்காடனார் எழுதிய பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, திருவள்ளுவ மாலை ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளதால், "ஆதி பிரபவத்தில் அம்புவியின் மானிடர்க்கு" என்று பிரபவத்தில் தொடங்கி இவர் எழுதிய பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவையே. இவர் எழுதிய சங்கப் பாடல்களில் மழையை பற்றிய செய்திகள் அதிகம், இவரது 60 வருடப் பாடல்களிலும் மழையைப் பற்றிய செய்திகளைத்தான் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இவர் எழுதிய 60 வருடப் பாடல்கள் இன்றும் பஞ்சாங்கங்களில் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ் நிலங்களுக்கும், அவற்றைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும், இடைக்காடனார் இந்தப் பாடல்களில் பலன் சொல்லியுள்ளார். சீன நாட்டைப் பற்றி இரண்டு பாடல்களிலும், சிங்களத்தைப் பற்றி ஒரு பாடலிலும் பலன்களைக் காணலாம். காவேரி, கோதாவரி, துங்கபத்ரை நதிக் கரை நாடுகள், சோழ தேசம், அனந்த தேசம், காஞ்சி, தெலுங்கம், கூர்ச்சரம், கொங்கு நாடு, வட தேசம், தென் தேசம் என்று பல இடங்களிலும் ஏற்படக்கூடிய மழை, பஞ்சம், நன்மை, தீமைகளை, வருடப் பலன்களாகச் சொல்லியுள்ளார். அருகருகில்  உள்ள வெவ்வேறு நாடுகளுக்குப் பலன்கள் மாறுபடுவதை இவரது பாடல்களின் மூலம் அறிகிறோம். உதாரணத்துக்கு, 52 ஆவது வருடமான காளாயுக்திப் பலன்களைப் பார்க்கலாம்.

 

"காளயுக்தி ஆண்டுதனில் காஞ்சியிலே பஞ்சம்மிகும்

காலமழை பெய்யாது காசினியில்மேலும்

தெலுங்கத்தில் கொஞ்சம்மழை தென்திசையில் இன்பம்

நலங்காணும் நன்றே நவில்."

 

இந்தப் பாடலில் காஞ்சியில் பஞ்சம், அதற்குச் சற்று வடக்கிலுள்ள தெலுங்கத்தில் சிறிது மழை, ஆனால் அதற்குத் தெற்கே மழையும், நலன்களும் என்று சொல்லியுள்ளதால், ஒவ்வொரு பகுதியையும் கவனித்துப் பலன் சொல்லியுள்ளது தெரிகிறது. இன்றைக்கும் இந்தப் பலன்கள் சரிவர இயங்குவதை அனுபவத்தில் காணலாம். அதனால்தான் சொல்கிறேன், இன்று சைய மலையில் மழை பெய்தாலும், நமக்குப் பஞ்சம் ஏற்படுகிறது. இந்த மாறுப்பாட்டினைக் கவனித்துச் சொன்ன இடைக்காடனார் கொடுத்துள்ள பிரபவ ஆண்டுகளையும், அவை ஆரம்பிக்கும் சித்திரை வருடப் பிறப்பையும் ஒதுக்கித் தள்ள எவருக்கும் அதிகாரமில்லை, அருகதையும் இல்லை.

 

அகத்தியரும், சித்திரை வருடப் பிறப்பும்.

 

மேடத்தில்தான் வருடப் பிறப்பென்று 'அகத்தியர் பன்னீராயிரத்தில்' அகத்தியர் கூறுகிறார். வருடத்தின் முதல் நட்சத்திரமான அசுவினி தேவர்கள் தனக்கு உபதேசித்ததைப் புலத்திய முனிவருக்குக் கூறுவதாக அகத்தியர் பன்னீராயிரம் அமைந்துள்ளது. அதில் அவர் தெள்ளத்தெளிவாக தமிழ் வருடப்பிறப்பு சித்திரையில் ஆரம்பிக்கிறது என்கிறார்.

 

"புத்தியுள்ள யெனதைய ரசுவினியாந்தேவர்

புகலவே யான்கேட்ட வரைபாட்டோடும்

கத்தான கலியுகத்து வாழ்க்கையெல்லாம்

காவலரே யாம்கேட்டு நுந்தமக்காய்

சத்தியமாய் யானுரைத்தே னன்புளானே"

 

"மேடமென்னும் ராசியாம் மதனிற்கேளு

மேலானா யசுவினி முதலாம்பாதம்

குலவியே கதிரவந்தான் வந்துதிக்க

வருச புருசன் அவதரிப்பானென்றே

பரிவுடன் உலகிற்கு நீசாற்றே"

என்கிறார் அகத்தியர்.

 

 

தட்சன் கதை காட்டும் ஜோதிடப் பின்னணி.

 

என்னுடைய கட்டுரைகளைப் பற்றிய உங்கள் விமரித்துக்கு வருவதற்கு முன் பத்துப்பாட்டு ஆராய்ச்சியில் ராசமாணிக்கனார் சொன்னதாக நீங்கள் மேற்கோளிட்ட புராணக் கதையின் உண்மைப் பின்னணி என்ன என்பதைக் காட்ட விரும்புகிறேன். தட்சப் பிரஜாபதிக்கு 27 பெண்கள். அவர்களைச் சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தார் என்கிறது புராணம். 27 பெண்களும் 27 நட்சத்திரப் பெயர்கள். நம் ஜோதிடத்தில் நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ளது என்று நான் முன்பு சொன்னதை நினவுபடுத்திக் கொள்ளூங்கள். சந்திரன் அவர்களை மணந்தான் என்பது அவற்றினூடே சந்திரன் செல்வதைக் காட்டுவதாகும். பிரஜாபதியின் மகள்கள் என்பதால், பிரஜைகள் எனப்படும் மக்கள் குலத்தை அந்த நட்சத்திர அமைப்புகள் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கின்றன என்பது பொருள். அதனால்தான் நாம் பிறந்த நட்சத்திரத்தை நமது அடையாளமாகச் சொல்கிறோம். பாடலுக்கும், பாட்டுடைத் தலைவனுக்கும் கூட நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றைப் பின்பற்றியே பாடல்களை இயற்றி இருக்கிறார்கள். புதிர் போன்ற அந்த நட்சத்திர அமைப்புகளைப் பின்பற்றி திருவள்ளுவர் சொன்ன 'ஆதி பகவன்' யார், கம்பர் சொன்ன அலகிலா விளையாட்டுடையவர் யார் என்பதைக் கண்டு பிடிக்கலாம். காலம் பல சென்றும் அவர்களது நூல்கள் நிலைத்து நிற்பதற்கு, அவர்கள் புகுத்திய நட்சத்திர மற்றும் ஸ்தானப் பொருத்தச் சொற்களே என்பதை நிகண்டுகள் காட்டும் சூத்திரங்கள் வாயிலாக அறியலாம். (சூடாமணி நிகண்டு 12- 31 & 102)

 

27 நட்சத்திரங்களை மணந்த சந்திரன், அவர்களுள் ரோஹிணியிடம் மட்டும் பிரியமாக இருந்தான் என்கிறது புராணம். அதன் உட் பொருள், சந்திரன் செல்லும் பாதையில் ரோஹிணி உள்ளது என்பதே. மற்ற நட்சத்திரங்கள் சற்று தள்ளி இருக்கின்றன. அதனால் ரோஹிணையை ஒட்டிச் சந்திரன் செல்வதை ஒரு கதையாகச் சொல்லியுள்ளார்கள். ரோஹிணியைச் சந்திரன் நெருங்கிச் செல்வதால், ரோஹிணியில் சந்திரன் செல்லும் நாள், புணர்ச்சிக்கு முக்கியத்துவம் பெறுகிறது. அந்த ரோஹிணியில் திருமணம் முடித்தார்கள் என்பதைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோமே, இயற்கையைப் பிரதிபலிக்கும் ஜோதிட விதிகளைச் சங்க கால மக்கள் பின்பற்றினார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.

 

சந்திரன் மட்டுமல்ல, ரோஹிணியைக் கோள்களும் கடந்து செல்கின்றன. பாவக்கிரகங்கள் என்று சொல்லக்கூடிய கிரகங்கள் ரோஹிணியைக் கடக்கும்போது கெடுதல்கள் ஏற்பட்டன. அவ்வாறு சனி கிரகம் சென்ற போது, பஞ்சம் வரும் என்பதால், தசரத மன்னன் சனியை நோக்கி, துதி செய்தான். ரோஹிணியைச் செவ்வாய் கடந்த போது உலகப் போர்கள் நிகழ்ந்தன. ரோஹிணியை சனி கிரகம் கடந்த போது, அமெரிக்காவில் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது. இவ்வாறு நட்சத்திர அடிப்படையில் அமைந்த நம் நாட்டு ஜோதிடம் எந்த காலக்கட்டத்திற்கும் பொருந்தக் கூடியது. இந்த ஜோதிடம்,  மேலை நாட்டு ஜோதிடத்திலிருந்து வந்தது என்பதை இன்னும் நம்பிக் கொண்டிருக்க வேண்டாம்.

 

நம் ஜோதிடத்தின் ஆரம்பம் தட்சப் பிரஜாபதி குறித்த புராணத்தில் கதையாகச் சொல்லப்ப்பட்டுள்ளது. ரோஹிணி தவிர்த்த பிற மகள்களைச் சந்திரன் அலட்சியப்படுத்தியதால், அந்தச் சந்திரன் தேய வேண்டும் என்று பிரஜாபதி சபிக்கிறான். அதனால் தேய் பிறை ஏற்பட்டது என்பதும், பிறகு சிவனருளால், வளர்பிறை ஏற்பட்டது என்பதும் இயற்கை நிகழ்வின் உருவகமே. ஆனால் தட்சனைப் பற்றி இன்னொரு ஒரு விவரம் இருக்கிறது. அதில் சிவனது கோபத்தின் காரணமாக தட்சன் உயிரை இழக்க நேரிடுகிறது. எனினும் பிறகு அவன் உயிர் பிழைக்கிறான். உயிர் பிழைத்த அவன் ஆட்டின் தலையை உடையவனாகிறான்!

 

தட்சனது மகள்கள் கதை, ஜோதிடத்தில் வரும் 27 நட்சத்திர மண்டலத்தையும், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையையும் சொல்கிறது. அதில் வரும் தட்சனுக்கு ஆடு தலையாக அமைகிறது என்றால், ஆடு ராசியான மேடத்தில் ஆரம்பித்து, 27 நட்சத்திர மண்டலத்தைப் பன்னிரண்டு ராசிகளாகப் பிரித்த காலக் கட்டத்தைக் காட்டுகிறது. ஜோதிட சாஸ்திரம் உண்டான விவரத்தைக் கூறுகிறது. இந்த விளக்கத்தை நீங்கள் தற்குறிப்பேற்றம் என்று எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால். ஜோதிடத்தின் விரிவான அமைப்பை அறிந்தவர்கள், அது உண்டாகப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அத்தகைய பழமையைத் தட்சன் கதை கூறுகிறது.

 

அதில் தட்சனுக்கு ஆட்டின் தலை ஏன் கொடுக்கப்பட்டது? வேறு ஏதாவது விலங்கின் தலையைக் கொடுத்திருக்கலாமே? அப்படிக் கொடுக்கவில்லை. காரணம், ஒவ்வொரு ராசியின் பெயரைக் கொண்டே அந்த ராசியில் பிறந்தவர் குணத்தைச் சொல்லும் வண்ணம் பெயர் சூட்டினார்கள். மேடம் என்றால் வருடை, வரையாடு எனப்படும் மலையாடு ஆகும். இது மலையுச்சியில்தான் காணப்படும். சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருக்கும் இதனைப் பற்றி "தகடோடு எகரேல்" என்ற பழமொழியும் உண்டு. அந்த ஆட்டின் சுபாவத்தைக் கொண்டே கிட்டத்தட்ட 100 விவரங்களை அந்த ஆடு ராசியில் பிறந்தவர்களைப் பற்றிச் சொல்லலாம். 

 

அஸ்வினி தொடங்கி 27 நட்சத்திரங்களுக்குத் தட்சன் தகப்பன் அல்லது தலைவனானதால், அவனுக்கு முதல் ராசியின் அடையாளமான ஆட்டின் தலையை வர்ணித்துள்ளார்கள். தலைவன் என்ற சொல் தலை அல்லது 'முதன்மையான' என்ற பொருளில் அமைவது. மேடத்தை வடமொழியில் 'அத்ய ராசி" என்றழைப்பார்கள். அத்ய என்றால் தலை அல்லது முதன்மை என்பது பொருள். . சி. கந்தையா பிள்ளை எழுதிய "செந்தமிழ் அகராதி'யிலும், மேடம் என்பதற்கு 'ராசி மண்டலத்தின் முற்பகுதி' என்றே பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

 

தட்சன் கதையைச் சொல்லி விட்டு, இதில் புத்தாண்டு எங்கே வருகிறது? என்று கேட்டிருக்கிறீர்கள். ஒரு ஆண்டை ராசி மண்டலத்தின் முற்பகுதியில் ஆரம்பிக்காமல் பிற்பகுதியில் ஆரம்பிப்பார்களா?.

 

அது மட்டுமல்ல, ராசி மண்டலத்தைக் 'கால புருஷன்' (விஸ்வ புருஷன் என்று திரு எஸ் ராமச்சந்திரன் அவர்கள் சொல்வது)  என்னும் பெயரில், மனிதனது உருவில் பிரித்துள்ளார்கள். அதில் மேடம் = தலை, இடபம் = முகம், மிதுனம் = கழுத்து, கை, கடகம் = இதயம் / நுரையீரல், சிம்ம்ம் = மார்பு, கன்னி = வயிறு, உணவுப் பாதை, துலாம் = இடுப்பு, விருச்சிகம் = பிறப்புறுப்பு, தனுசு = குதம், மகரம் = தொடை, கும்பம் = முட்டி, மீனம் = கால் / பாதம்.

ஒருவருக்கு ஏற்படும் நோயை அதைக் காட்டும் ராசியைக் கொண்டு சொல்வார்கள். அது மேட ராசியானால், தலை சம்பந்தப்பட்ட நோய் என்று அர்த்தம்.

 

தலையில் ஆரம்பித்துத்தான் எல்லா உறுப்புகளும் இயங்குகின்றன. எண்ஜாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்துவதுதான். 'ஆடு தலையாக' என்று சொன்னதில் உண்மையாகவே தலை இருக்கிறது. உங்கள் 'தற்குறிப்பேற்றமான" கோகுல் முதலான' என்பது போன்று கிடையாது.

 

அதனால் தலையைக் காட்டும் ராசியான, தலை ராசியான மேடமே வருட ஆரம்பமாகும். மேடத்தில் தலை என்றால், தை மாதம் வரும் மகரத்தில் தொடை! அதில் வருடம் ஆரம்பிக்கும் என்கிறீர்கள்! மேலும் "மேட ராசியே தலையாயது என்று சொன்னால், ஆநிரை கவர்தலுக்கு இதை விட பல நேரடிச் சான்றுகள் உள்ளன. அவற்றை முன் வைத்து இடபராசிதான் முதல் ராசி என்றும், வைகாசியில்தான் தமிழ்ப் புத்தாண்டு என்றும் சொல்லலாமா?" என்ற ஒரு அற்புதமான வாதத்தை வைக்கிறீர்கள்! இடபம்  என்றால் என்ன? இடபமும் ஆவும் ஒன்றா? ஆனிரைக்கான ஒரு ராசியைப் புதிதாக உருவாக்கினால்தான் உண்டு. இடப ராசி என்ற பெயர்க் காரணமே, ஒரு எருதைப் போல சுபாவமும், தளராத உழைப்பும், அவ்வப்பொழுது சிலிர்த்துக் கொண்டு முட்ட வருதலும் என்னும் குணங்களைக் கொண்டவர் என்பதே. அதில் ஆனிரையை எப்படிப் பொருத்த முடியும்? ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள் காலக் கணிதத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் அற்புதமான, அசைக்க முடியாத லாஜிக் இருக்கிறது. மனம் போனபடி அது சொல்லப்படவில்லை.

 

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்.

 

தட்சனிடத்தில் ஆட்டுத்தலை என்றால், ஆடுகோட் பாட்டுச் சேரலாதனிடத்திலும் ஒன்றல்ல பல ஆடுகள் இருந்தன. அவை வருடை எனப்படும் மேடத்துக்கான அபூர்வ ஆடுகள். அவற்றைத் 'தொண்டியுள் தந்து, கொடுப்பித்துப் பார்பார்க்குக் கபிலையொடு, குடகு நாட்டில் உள்ள ஓரூர்'  ஈந்தான் என்று காக்கைப் பாடினியார் எழுதியுள்ளார். அதாவது , இந்த ஆடுகளுடன், பசுக்களையும், ஒரு ஊரையும் பார்ப்பார்க்குக் கொடுத்துள்ளான் என்று தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளார்,. அப்படியும் அதை ஆடு என்று ஏற்றுக் கொள்ள முடியாமல், ஆடு, யாடு என்று வெற்றி பெற்றதையே அவ்வாறு கூறினார் என்று கூறுகிறீர்களே, இது தற்குறிப்பேற்றம் மட்டுமல்ல, தகாத குறிப்பும்தான். யாடு என்று எங்கே புலவர் கூறியிருக்கிறார்? மூலத் தரவைப் படிக்காமல், உங்கள் மனத்துக்குகந்த உரையாளர் நம்பும் கருத்தை அல்லவா சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?

 

மேலும், பதிகத்தில் மட்டும்தான் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, பிற பாடல்களில் சொல்லப்படவில்லை என்கிறீர்களே, தான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மை, உண்மை என்று மூன்று முறை ஒரே கருத்தைப் புலவர் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வீர்களா?

 

இந்த ஆடு கோட்பட்டதற்கு வேறு சான்றுகள் இருக்கின்றன என்பதை அறியக் கூட முடியாத குறுகிய வட்டத்தில் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்பதை நினைக்க வருத்தமாக இருக்கிறது. 

 

புலவர் சொன்ன சொற்களை நன்கு கவனியுங்கள். இந்த ஆடுகளுடன், பசுக்களையும், ஒரு ஊரையும் அரசன் கொடுத்திருக்கிறான். அது எந்த ஊர் என்று கண்டு பிடிக்க முயன்றால் அது ஆராய்ச்சி. அந்த ஊர் சேர நாட்டில் மட்டுமே இருந்திருக்க வேண்டும், அது மலைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும். 'குட நாட்டு ஓரூர் ஈத்து" என்று சொன்ன கையுடன் அவன் 'வான வரம்பன் ' என்னும் பெயர் பெற்றான் என்றும் அந்தச் செய்யுள் கூறுகிறது. அதனால், அவன் வானத்தை முட்டும் ஒரு மலைப் பாங்கான இடத்துக்குச் சென்றிருக்கிறான் என்று தெரிகிறது. அந்த இடத்தில் தண்டகாரண்யம் இருந்தது என்றும் சொல்லவே, அவன் சென்ற இடம் விந்திய மலை என்று தெரிகிறது. தண்டகாரண்யம் என்னும் காடு விந்திய மலையின் தெற்குச் சரிவில் ஆரம்பித்து, துங்க பத்திரை வரை பரவியிருந்தது. அதனூடே மஹாநதி, கிருஷ்ணா நதிகள் சென்றன என்று ராமாயணம், மஹாபாரதம் ஆகியவை கூறுகின்றன. இன்றைக்கும் அதன் பெரும் பகுதி, ஆந்திரா, சாடிஸ்கர், ஒடிசாவில் இருக்கிறதே தவிர பம்பாய் மாகாணமாக இருந்த பகுதியில் அல்ல.

 

அங்கு அவன் போர் நிமித்தமும் சென்றிருக்கலாம். ஆனால் புலவர் அதற்கான எந்த சாட்சியையும் தரவில்லை. மாறாக இந்த ஆடுகளைப் பிடித்ததையும், வான வரம்பன் என்று பெயர் பெற்றதையுமே சொல்லியுள்ளார். செல்வதற்குக் கடினமான விண்ணை முட்டும் மலையுச்சியை அடைந்ததையும், அங்கிருந்த அபூர்வ ஆடுகளைக் கொணர்ந்ததையுமே இது காட்டுகிறது. வருடைகள் மலையாடுகள்  என்பதும் இதனுடன் பொருந்துகிறது. வருடைகள் அபூர்வ ஆடுகள் என்பதை, 'மாவும் புள்ளும்' என்னும் தொல்காப்பியச் சூத்திரத்துக்குப் (பொ- 576) பொருள் கண்ட பேராசிரியர் அவை 'எண்கால் வருடை' என்று சொல்வதிலிருந்தும் தெரிகிறது. எட்டு கால்களுடைய விலங்கு அபூர்வமானதுதான். ஆனால் இயற்கையில் அப்படிப்பட்ட விலங்குகள் கிடையாது. நாலு கால் விலங்கு எட்டு கால் பாய்ச்சலில் ஓடியிருந்தால் அப்படி ஒரு பெயர் வந்திருக்கும். தமிழ் மண்ணில் காணப்படாத விலங்காக இருந்ததாலும், அதைப் பற்றிக் கேள்விப்பட்டதைக் கொண்டு எண்கால் வருடை என்று சொல்லியிருக்கிறார்கள்.

 

அப்படிப்பட்ட அபூர்வமான வருடைகளை பார்ப்பனர்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும்? அபூர்வ ஆடுகளைத் தன் பராமரிப்பில் அல்லவா வைத்திருக்க வேண்டும்? மேலும் அவை மலையாடுகள். குளிர்ந்த மலையுச்சிக் காடுகளில் வளர்பவை. அவற்றை வளர்க்க அப்படிப்பட்ட மலையுச்சியில் தகுந்த ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, தன் பணியாளர்கள்து பராமரிப்பில் அல்லவா அவற்றைக் கொடுத்திருக்க வேண்டும்?. ஆனால் பார்ப்பனர்களிடம் கொடுக்க அவை என்ன சாவா மூவாப் பேராடுகளா? ஒவ்வொரு முறையும் அவற்றின் எண்ணிக்கை குறையக் குறைய, தண்டகாரண்யத்துக்குச் சென்று ஆடுகளைப் பிடித்துக் கொண்டு வந்தானா? அங்குதான் நாம் சிந்திக்க வேண்டும். அவற்றை அவன் ஒரு மலைப் பகுதியில் குடியேற்றியிருக்கிறான். அவற்றுக்கு வேத மரபில் ஒரு முக்கியத்துவம் இருக்கவே அவற்றைப் பார்ப்பனர் பராமரிப்பில் கொடுத்திருக்கிறான்.

 

அந்த ஆடுகள் உண்மையில் இருக்கின்றனவா என்று தேடுகையில், அவற்றைச் சிலப்பதிகாரக் காலத்தில் காண்கிறோம். மலை வளம் காண விரும்பி சேரன் செங்குட்டுவன் ஒரு ஆற்றங்கரையில் இருந்த மணல் குன்றில் தங்கியிருந்தான். அவனைக் காண வந்த மலைவாழ் வேடர்கள் "வரையாடு வருடையும் மடமான் மறியும்" தோளில் சுமந்து, அவனிடம் கொடுக்க வந்தார்கள் என்கிறது சிலப்பதிகாரம். (காட்சிக் காதை, வரி ,51)

 

வரையாடு என்றும் வருடை என்றும் சொல்லப்படும் இந்த அபூர்வ ஆடுகள் இன்றும் மூணாறு பகுதியில் காணப்படுகிறன. NILGIRI TAHR  எனப்படும் இந்த ஆடுகள் இமய மலையில் காணப்படுபவை. அங்கிருந்து இவ்வளவு தொலைவில் அவை எப்படி வந்தன என்று உயிரியல் நிபுணர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் பெயர்க் காரணம் அறிந்த நமக்கு, அவை ஒரு சமயம் விந்திய மலையில் இருந்திருக்க வேண்டும் என்றும், அவற்றை அங்கிருந்து கொண்டு வந்து மூணாறு பகுதியில் அந்த அரசன் குடியேற்றியிருக்கிறான் என்றும் தொடர்பு காண முடிகிறது. ஆங்கிலேயர் காலத்தில் மூணாறு பகுதியில் இருந்த இந்த ஆடுகள் வேட்டையாடப்பட்டு அழிவை நெருங்கி விட்டன. அவ்வாறு இருக்க, விந்திய மலைப் பகுதியில் மீதமிருந்த ஆடுகளும் என்றோ அழிவைக் கண்டிருக்கும். இன்று அவை அங்கு இருந்த சுவடே இல்லாமல் போய் விட்டது. அதை எடுத்துக் காட்ட நம்மிடம் மட்டுமே சான்று இருக்கிறது என்ற மிகப் பெரும் பொறுப்பு நமக்கிருக்கிறது. (வரையாடு பற்றிய விவரங்களுக்கு :- http://www.nilgiritahrinfo.info/index.htm )

 

இனி வருடப் பிறப்புக்கும், இந்த வரையாட்டுக்கும் உள்ள தொடர்பைக் காண்போம். இந்த ஆடுகள் இன்று மூணாறு பகுதியில் ஒரு சரணாலயத்தில் பாதுகாக்கப்படுகின்றன. அந்த இடத்தின் பெயர் 'இரவி குளம்'. ரவி குளம் என்பதை இரவி குளம் என்று சொல் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட இடப்பெயரின் மூலம் முற்காலத் தமிழரின் தொடர்பு தெரிகிறது. ரவி என்றால் சூரியன் என்று பொருள். சூரியக் குளத்தில் இந்த ஆடுகளை வளர்த்திருக்கிறார்கள். எதனால் அந்தப் பெயர்? சூரியன் தன் வருடாந்திரப் பயணத்தை மேடத்திலிருந்து ஆரம்பிக்கவே, அந்த மேடத்தில் உச்சம் பெறவே, அந்த மேடங்கள் வளர்க்கப்படும் இடத்துக்கு இரவி குளம் என்று பெயர் வைப்பது பொருத்தம் தான்.

 

இரவிகுளத்தை ஒட்டி இருக்கும் பகுதியில் 'அஞ்சு நாடு' என்னும் பெயரில் ஐந்து ஊர்கள் உள்ளன. அவற்றின் பெயர்கள் நமக்கு ஆச்சரியத்தை ஊட்டுகின்றன. அந்தப் பெயர்கள் காந்தளூர், கீழந்தூர், கரையூர், மறையூர், கோட்டகுடி என்பன. (http://en.wikipedia.org/wiki/Marayoor ). இவையெல்லாம் உடுமலைப்பேட்டைப் பெருவழியில் உள்ளன. இவற்றுள் மறையூரில் 10,000 வருடங்களுக்கு முன்பே மனிதன் வாழ்ந்த தடங்கள் கிடைத்துள்ளன. இதனால் சேரமன்னர்கள் காலத்தில் இது நன்கு வளர்ந்த இடமாக இருந்திருக்க வேண்டும்,

 

மறையூர் என்பதில் உள்ள மறை, வேத மரபோர் வாழ்ந்த அடையாளமாகவும் இருக்கலாம். இந்தப் பகுதி வரையாடு காணப்படும் பகுதியாக இருப்பதால், ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் பார்ப்பார்க்குக் கொடுத்த ஊர் இந்தப் பகுதிகளைச் சார்ந்ததாக இருக்க்கூடிய சாத்தியக்கூறு அதிகம். ராஜராஜன் கலமறுத்தருளிய காந்தளூர் இந்த இடமாகவும் இருக்கலாம். பார்த்திவசேகரபுரம் செப்பேடு காட்டும் செய்தியின் அடிப்படையில், காந்தளூர் ஒரு பாடசாலையாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது. பார்த்திவசேகர புரமும் வேத பாடசாலையே தவிர, போர்ப் பயிற்சிக்கூடமல்ல. பரிசு என்று அந்தக் கல்வெட்டில்,வழங்கும் சொல், தானம் என்ற பொருளில் பல கல்வெட்டுகளில் வந்துள்ளது. அதனால் அங்கு பரிசு கொடுக்கப்பட்ட போர்ப்பயிற்சி எதுவும் நடக்கவில்லை. "அறங்கரைந்து வயங்கிய" நாவை உடைய மாணாக்கர்கள் வேத சாகைகளை ஒன்பது முறை உருப்போட்ட தகைமையே அங்கு சொல்லப்பட்டுள்ளது.

 

அதைப் போன்ற ஒரு சாலையாகக் காந்தளூர்ச் சாலை சொல்லப்பட்டுள்ளதால், அந்த அடையாளங்கள் உடுமலைப் பெருவழியில் உள்ள இந்த மறையூரிலும், வரையாடுகள் வளர்க்கப்பட்ட இரவி குளத்திலும், காந்தளூரிலும் மறைந்திருக்க வேண்டும். வேதக் கல்வி பயிற்றுவிக்கும் இடமாக இருந்தால், விஷுவிலும், சங்கராந்திகளிலும் செய்யப்படும் ஹோமங்களை இங்கு கற்றுக் கொடுத்திருப்பார்கள். வரையாடு என்பது மேடம் என்னும் ஆட்டையே சுட்டுவதால், இமயத்தில் காணப்படும் அந்த அபூர்வ ஆட்டினைத் தன் நாட்டிலும் கொண்டு வந்து வைத்துக் கொள்ள அந்த அரசன் நிச்சயம் ஆசைப்பட்டிருப்பான். அவற்றை இங்கே கொடுத்து வேத பாட சாலையை அமைத்து, அந்த ஆடுகளையும் அங்கு உலவ விட்டிருப்பான். காந்தளூரும், மறையூரும் அவ்வாறே ஏற்படுத்தப்பட்டிருக்கும். 

 

அபூர்வ வருடையும், அருமையாக வேத பாட சாலையுமாக இருக்கவே, காந்தளூர்ச் சாலையைத் தன் வயம் கொண்டு வர ராஜராஜன் விரும்பியதில் ஆச்சரியமில்லை. திருமகளையும், பெருநிலச் செல்வியையும் தனக்கே உரிமை பூண்டவன், அவர்களுக்கு அடுத்தபடியாக தலை சிறந்த வேத பாடசாலையைத்தான் தனக்கு உரிமையாக ஆக்கிக் கொள்ள ஆசைப்பட்டிருப்பான். கலம் என்பதற்கு 'ஓலைப் பத்திரம்' என்ற பொருளும் உண்டு. (செந்தமிழ் அகராதி. .சி. கந்தையா பிள்ளை, 1950 வெளியீடு, பக்கம் 132). அறுத்தல் என்றால் அறுதியிடுதல் என்ற பொருள் தரும். அறுதி என்றால் முடிவு, உரிமை, வரை, எனப்படும். அறுதியிடுதல் என்றால் தீர்மானித்தல் எனப்படும். (மேற்படி அகராதி, பக்கம் 27) செங்கம் நடுகல் மூலம் மலைஆளர்கள் தலை சீவிக் காந்தளூர்ச் சாலையைத் தன் வயம் கொண்டு வந்தான் என்று தெரிகிறது. அங்கு தன் உரிமையை நாட்டக் கலம் என்னும் ஓலைப் பத்திரம் அறுத்துத் தன்வயம் கொண்டு வந்து, இந்தக் காந்தளூர்ச் சாலை உருவாக்கும் வேத விற்பன்னர்கள் மூலம் தான் கட்டிய கோயில்களில் 34 திருவிழாக்களை அவனால் நத்த முடிந்திருக்கிறது. ராஜராஜன் காலத்தில் அதிகப்படியாகக் காணப்படும் கோயில் விழாக்களுக்கு, இந்தக் காந்ளூர்ச் சாலை காரணமாக இருந்திருக்கிறது. அதன் பெருமைக்கு அங்கு உலவிய வரையாடும் ஒரு காரணம்.

 

இதைச் சொல்ல ஒரு ஆதாரமாக, இந்த வரையாடுகள் பொதிகை மலையிலும் காணப்படுகின்றன என்ற நிலவரத்தைச் சொல்லலாம். கண்ணகிக்குக் கோயில் எழுப்பிய சேரன் செங்குட்டவன் வருடையை மலை நாட்டில் கண்டிருக்கிறான். அங்கிருந்த அது பொதிகைக்கு எப்படிப் போனது என்றால், பராந்தக பாண்டியனும் காந்தளூர்ச் சாலையில் கலமறுத்திருக்கிறான். கோக்கரு நந்தடக்கன் போல அவனும் தன் நாட்டில் சாலையை நிறுவி, வருடைகளை அங்கு குடியேற்றியிருக்க வேண்டும்.

 

மேடம் என்னும் வருடைகளைப் பார்ப்பனருடன் இணைக்கவே, அவற்றுக்கும் ஜோதிட ரீதியாகச் செய்யும் பூஜைகளுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. வேதம் பயிலும் இடத்தில் வருடைகளுக்கென்ன வேலை என்கிறீர்களா? அந்திக் காலத்தில் அந்தணர்கள் செய்யும் முத்தீ விளக்கின் கண்ணே மான் பிணைகள் துஞ்சும் என்று முரஞ்சியூர் நாகராயர், கூறவில்லையா (பு-நா- 2) பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே வேள்விச் சாலைகளின் கண்ணே மான்கள் துஞ்சும், அது போல வருடைகளும் மலையுச்சியின் குளிருக்கு இதமாக காந்தளூர், மறையூர்ப் பார்ப்பனர்கள் செய்த வேள்விச் சாலைகளின் கண்ணே துஞ்சியிருக்கும்.

 

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்னும் பெயருக்குப் பின்னால் எத்தனை சம்பவங்கள் இருக்கின்றன! முக்கியமாக இமயத்தில் வாழும் வருடைகள், மூணாறில் காணப்படும் அதிசயத்துக்கு ஒரு துப்பு கிடைத்துள்ளதே, அப்படிப்பட்ட ரகசியங்களை உள்ளடக்கிய சங்கப் பாடல்களை, அவை நேரிடையாகச் சொல்ல வேண்டும், ஒரு தடவை சொன்னால் போதாதுஎனபது போன்ற மூடிய மனதுடையவர்களுக்கு எது வருடப் பிறப்பு என்பது என்றைக்குமே கண்ணில் தென்படாது.

 

இமயமும், பொதியமும்.

 

இமயமும், பொதியமும் நினைத்தாலே இனிக்கும் இடங்கள் என்பது பல இடங்களில் சொல்லப்பட்டும், அது உங்கள் கண்ணில் படாதது அதிசயம்தான். வெறும் அனுமானம்தான் என்று என்னைக் குறை கூற வந்து விட்டீர்கள். மேலே சொன்ன முரஞ்சியூரார் பாடலில் "பொற்கோட்டிமயமும் பொதியமும் போன்றே" என்று மான் பிணைகள் வேள்விச் சாலையில் உறங்குவதைக் கண்டு பரவசமாகிறார். இமயத்தை நினைவு கூற்கிறார். இதைப் படிக்காத தமிழறிஞர் இருக்கிறார் என்பது எனக்கு இப்பொழுதுதான் தெரிகிறது!

 

அவ்வளவு ஏன்? சில்லப்பதிகாரத்தைப், பிரித்தால் முதல் பக்கத்திலேயே 'பொதியிலாயினும், இமயமாயினும் பதியெழு வறியாப் பழங்குடி' என்று பொதியத்தையும், இமயத்தையும் பூம்புகாருடன் ஒப்பீடு செய்கிறாரே இளங்கோவடிகள் அதையுமா பார்த்ததில்லை?

 

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல, கண்ணகிக்குக் கோயில் எழுப்ப வேண்டும் என்று சேரமான் "நூலறி புலவரைப்" பார்க்கிறானே, அப்பொழுது அந்தப் புலவர்தமிழறிந்த புலவர்அவர் என்ன சொல்கிறார்? பொதிகையில் கல்லெடுத்து, காவிரியில் நீராட்டினாலும், அல்லது இமயத்தில் கல்லெடுத்து, கங்கையில் நீராட்டினாலும், அது கடவுள் தான் என்கிறாரே இதையெல்லாம் நீங்கள் படிக்கும் அறிஞர்கள் சொன்னதேயில்லை போலிருக்கிறது. அவர்கள் கருத்துக்களைப் படிக்காமல் ,மூலநூல்களைப் படிக்கப் பழகுங்கள்.

 

பரிபாடல்

 

நல்லந்துவனார் எழுதிய அருமையான பரிபாடல்அதில் புதைந்திருக்கும் விவரங்கள் புரியாமல் தவறு, தற்குறிப்பு என்று என்னவெல்லாம் சொல்கிறீர்கள்! த்தகைய அறிவியல் அந்தப் பாடலில் இருக்கிறது.! அது காட்டும் கோள்நிலையை ஆராய்ந்தால் அந்தப் பாடல் பாடப்பட்ட காலத்தை அறியலாம். அகத்திய நட்சத்திரத்தை அறிந்தால், பூமியின் சாய்மான மாறுபாடுகளையும், அந்த மாறுபாடுகள் ஏற்பட்ட காலக்கட்டத்தையும் அறியலாம். மழைக்குறிகள் ஒன்றா, இரண்டா? எத்தனை இருக்கின்றன?

 

'எரிசடை எழில் வேழம்" என்பதற்கு அவை குறிக்கும் நட்சத்திரங்களைத்தான் பார்த்தீர்களே தவிர, சோமசுந்தரனார் உரையில் விளக்கப்பகுதியில் குறிக்கப்பட்டுள்ள ராசிகளைக் கவனிக்கவில்லை போலும்.  படித்த வரையிலும், சரியாகப் படிக்கவில்லை. கார்த்திகையை உடைய இடப ராசி என்றும், திருவாதிரையை உடைய மிதுன ராசி என்றும், பரணியை உடைய மேட ராசி என்றும் எழுதியிருப்பதை, கார்த்திகைக்குரிய இடப வீதி என்றும், திருவாதிரைக்குரிய மிதுன வீதி என்றும், பரணிக்குரிய மேட வீதி என்றும் எழுதியிருக்கிறீர்களே, இவை இரண்டுக்கும் பொருள் வேறுபாடு உண்டு என்று தெரிகிறதா?

 

அந்தப் பாடலில் மொத்தம் மூன்று வீதிகளைக் குறிப்பிட்டிருப்பார் புலவர். சித்திரையில் பயணத்தைத் தொடங்கும் சூரியன் மூன்று வீதிகளில் செல்கிறான். அவை மேடவீதி, இடபவீதி, மிதுனவீதி என்பவை. வைகாசி முதல் ஆவணி மாதம் வரை மேடவீதி என்றும், கார்த்திகை முதல் மாசி வரை மிதுன வீதி என்றும், மீதியுள்ள பங்குனி, சித்திரை, புரட்டாசி, ஐப்பசி ஆகிய மாதங்களை இடப வீதி என்றும் கூறுவார்கள். இதைப் பின்வருமாறு காட்டலாம்.

 


இதையே பலரும் அறிந்த ஜோதிடக் கட்டம் வாயிலாகப் பின் வருமாறு காட்டலாம்.


இந்தப் படத்தில், வைகாசி துவங்கி, சூரியன் செல்லும் போது, பூபாகத்தின் வட பகுதியில் நாம் இருக்கும் பகுதியில் பகல் வளரும். பகல் பொழுது  அதிகப்படியாகக் கிடைக்கும் காலம் முக்கியமாகக் கருதப்படுகிறது. பகல் பொழுதைச் சேமிக்கும் DAY LIGHT SAVING இருக்கும் நாடுகளில் இருப்பவர்களுக்கு இதன் அருமை தெரியும். இந்த மாதங்களில் சூரியன் பூமியின் வட பாகத்தில் சஞ்சரிக்கிறான். அதனால் இதற்கு வடக்கு வீதி என்ற பெயர் கொடுக்கப்பட்டது. இந்தக் காலம்தான் முக்கியமானது என்பதால், ராசி மண்டலத்தின் முதல் பெயரான மேடத்தை இதற்கிட்டு மேடவீதி என்று அழைத்தார்கள். இங்கு வீதிகளைக் கணக்கில் எடுக்கிகிறார்களே தவிர, ராசிகளை அல்ல. முதல் என்றாலே மேடத்தில் ஆரம்பிக்கும், முதல் வீதி மேட வீதி ஆகும்..

சூரியன் மிதுன வீதியில் செல்லும் போது நமக்கு இரவுப் பொழுது வளரும். பகம் பொழுது குறையும், அது சூரியனின் தென் பகுதிப் பயணமாதலால், அதற்குத் தெற்கு வீதி என்றும் பெயர். இது மூன்றாம் வீதியாதலால், ராசி மண்டலத்தின் மூன்றாவது ராசிப் பெயரான மிதுனத்தின் பெயரால் இதை அழைத்தார்கள்.

இவை இரண்டுக்கும் இடைப்பட்ட வீதியில், மேட வீதியைத் தாண்டியவுடன் சூரியன் பயணிப்பதால், அது இரண்டாவது வீதியாகக் கருதப்பட்டு,, இரண்டாவது ராசியின் பெயரை அதற்குச் சூட்டினார்கள்.  சூரியன் இடப வீதியில் செல்லும் போது, நமக்குப் பகலும், இரவும் சமப்படும். இதனால் இதற்கு நடு வீதி என்றும் பெயருண்டு.

 

மிதுன வீதியை தாண்டி மேட வீதிக்கு மீண்டும் வருவதற்கு முன், சம பகல்- இரவு காலம் இருக்கும் மீன, மேடத்தைச் சூரியன் கடக்கிறான். உண்மையில் அப்பொழுது சூரியன் பூமியின் மத்திய ரேகையைக் கடப்பான். அந்த வீதியில் வடக்கு நோக்கிய பயணத்தின்  போது, மீனமேடத்தையும், தெற்கு நோக்கிய பயணத்தின் போது கன்னி, - துலாத்தையும் சூரியன் கடப்பான்.

இங்கு இரண்டிரண்டு ராசிகளாக ஏன் கொடுக்கப்பட்டுள்ளன என்றால், 23- ½ பாகைகள் சாய்ந்திருக்கும் பூமியானது, இதே சாய்மானத்தில் எப்பொழுதும் இருப்பதில்லை. இடை விடாமல் சுழன்று கொண்டே இருப்பதால், ஒரு தலையாட்டி பொம்மையைப் போல பூமியும் அப்படியும் இப்படியும் ஆடுகிறது. இதனால் இந்தச் சாய்மானம் 22 பாகைகள் முதல் 25 பாகைகள் வரை வேறுபடும். இதை இன்று அறிவியலும் நிரூபித்திருக்கிறது. மாறும் இந்தச் சாய்மானத்தினால், பூமியின் மீது நேரடியாக விழும் சூரிய ஒளியும் பூமியின் வடக்குக்கும், தெற்குக்குமாக நகர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் கடக ரேகையும், மகர ரேகையும் மேலும் கீழும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. விஷு என்னும் சம பகல் இரவு நாளும் மாறிக் கொண்டே இருக்கின்றன.

கடகரேகையும், மகரரேகையும் நகர்கின்றன என்றால், உத்தராயணமும், தட்சிணாயனமும் நகர்கின்றன என்று அர்த்தம். அதனால்தான், லகதர் காலத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் இருந்த உத்தராயணம், இன்று மூல நட்சத்திரத்துக்கு வந்து விட்டது.

ஆனால் இந்த நகர்வு குறிப்பிட்ட எல்லைக்குள்தான் நடக்கும். ஏனெனில் 22 முதல் 25 பாகைக்குள் தான் பூமியின் ஆட்டம் இருக்கிறது. இந்த நகர்வை நம் நாட்டு ஜோதிடத்தில் என்றோ கணித்து விட்டார்கள். மேடம் பூஜ்ஜியம் பாகை, அதாவது அஸ்வினி பூஜ்ஜியம் பாகையை மையமாகக் கொண்டு, முன்புறம் மேடத்தில் 27 பாகைகள் வரையிலும், பின் புறம் மீனத்தில் 27 பாகைகள் வரையிலும் இந்த நகர்வு ஏற்படுகிறது. இதைப் பின்வருமாறு காட்டலாம்.


 

தற்சமயம் சூரியன் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறான். மீனம் 6 ஆவது பாகையில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கிறான். இன்னும் 3 பாகைகள் பின்னோகிச் சென்று பூரட்டாதி 4 ஆம் பாதத்தைத் தொடுவான். அதன் பிறகு முன்னோக்கிச் செல்ல ஆரம்பித்து, மேடம் பூஜ்ஜியம் பாகையைக் கடந்து, மேடத்தில் கார்த்திகை நட்சத்திரம் வரை செல்வான். மீண்டும் திரும்புவான். இந்த இரண்டு ராசிகளில் சூரியன் சஞ்சரிக்கும் போதுதான் உச்சியில் வரும் விஷு வருகிறது. இது நிகழும் நடு வீதியில், மீன மேடம் பார்த்து, அவற்றின் நடுப்பகுதியான மேடம் பூஜ்ஜியம் பாகையில் வருடத்தை ஆரம்பிக்கிறோம். 

இந்த வீதி அமைப்பைப் பரிபாடல் கூறுகிறது. ஒவ்வொரு வீதிக்கும், வீதிப் பெயர்களைத் தரும் 3 ராசிகளிலும் உள்ள ஒரு நட்சத்திரத்தைக் கொண்டு அடையாளம் காட்டுகிறார் புலவர்.

புலவர் மேட வீதியில்தான் ஆரம்பிக்கிறார். ஆனால் உங்கள் உரையாசிரியர்தான் வரிசையை மாற்றி விட்டார்.

புலவர் சொல்வது என்ன? 'எரி சடை எழில் வேழம்'

எரி என்னும் கார்த்திகை இருக்கும் இடப ராசி = இது மேட வீதி..

சடை என்னும் திருவாதிரை இருக்கும் மிதுன ராசி = இது மிதுன வீதி.

வேழம் என்னும் பரணி இருக்கும் மேட ராசி, = இது இடப வீதி என்கிறார்.

அதாவது வடக்கு வீதி, தெற்கு வீதி, நடு வீதி என்ற கணக்கில் புலவர் கொடுத்துள்ளார். எரி என்னும் கார்த்திகையைச் சொல்லி இடபத்தைக் காட்டினாலும், அவர் அது இருக்கும் மேட வீதியைத்தான் உண்மையில் சுட்டுகிறார். கோள்களைச் சொல்ல ஆரம்பிக்கும் போது, முதலில் மேட வீதியில் இருக்கும் கோளைச் சொல்லி விட்டி, பிறகு கோள்களின் வரிசைப்படி சொல்கிறார்.


அடுத்து "பொதியில் முனிவன் புரைவரைக் கீறி'. அகத்திய நட்சத்திரம் என்னும் இந்த நட்சத்திரம் நகராது. நீங்களும், உங்கள் உரையாசிரியரும் நினைப்பது போல அது உயர்ந்த இடத்தைக் கடந்து, மிதுனத்துக்குப் போகாது. அது எப்போதும் போல ஒரே இடத்தில்தென் திசையில்தான்  இருக்கிறது. அது மிதுன ராசியில் இல்லை. மிதுன ராசி இருக்கும்  திசையில் தெரியும். இந்த நட்சத்திரத்தைப் பொறுத்தமட்டில், இது பூமி முழுவதும் தெரியாது. பூமியின் வட பாகத்தில் 37 பாகை – 17 கலை அட்சரேகைக்கு வடக்கே இது தென்படாது. நம் நட்டைப் பொறுத்த வரையில் இந்த எல்லை விந்திய மலைக்குச் சற்று வடக்கே அமைகிறது.

வைகாசி மாதத்தில்  சூரியன் ரிஷபத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்தவுடன்,

அகஸ்திய நக்ஷத்திரம் நம் கண்ணில் தென்படாமல் போகும். சூரியனது ஒளியால், அது 'அஸ்தமனம்' ஆகி விடும். பிறகு ஒவ்வொரு ராசியாக சூரியன் செல்லச் செல்ல, விடியலுக்கு முன் அந்த நக்ஷத்திரம் தெரிய ஆரம்பிக்கும். விடியலுக்கு முன் தெரிய ஆரம்பிக்கும் நக்ஷத்திரத்தை

HELIACAL RISING என்பார்கள்.  பரிபாடலில் உள்ள விவரத்தின் படி அது HELIACAL RISING  என்று தெரிகிறது.

 

சூரியன் உத்தர நட்சத்திரத்தில் நிற்க, இன்னும் சில மணி நேரத்தில் சூரிய கிரஹணம் ஆரம்பிக்க இருக்கையில், பொழுது புலர்வதற்குச் சற்று முன் இருந்த வான அமைப்பைப் புலவர் விவரிக்கிறார். அந்த அமைப்பில் அதுவரை கண்ணுக்குத் தெரியாமல் இருந்த அகத்தியர், சூரியனுக்கு மேல்- அதாவது சூரியன் உதயமாவதற்கு முன் தோன்றுவதால், சூரியனுக்கு உயர்ந்த இடம் என்று புரைவரைக் கீறி என்ற சொற்றொடரை அமைத்துள்ளார். ஆவணி தொடங்கி, படிப்படியாக சூரியன் முன்னேற முன்னேற, தமிழ் நாடு துவங்கி அதற்கு வடக்கில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் உள்ளவர்களுக்கு அகத்திய நட்சத்திரம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும். அப்படிச் தெரிய ஆரம்பிக்கையில் மழையும் வரும். இதைப் பற்றிய விரிவான விளக்கம் வேண்டுவோர் என் கட்டுரையை இங்கே படிக்கலாம்:- http://thamizhan-thiravidana.blogspot.in/2011/09/72.html

 

மழை சரியான நேரத்தில் வந்ததா என்பதைப் புலவர் காட்டுகிறார் என்று நான் சொன்னதை தவறான புரிதல் என்றும், தற்குறிப்பேற்றம் என்றும் எழுதியுள்ளீர்கள். மூல நூலைப் படிக்காமல் கருத்து எழுதுகிறீர்கள் என்று தெரிகிறது. மூலத்தில் கோள் அமைப்புகளைச் சொல்லிவிட்டு, அகஸ்தியர் கண்ணில் படும் உயரம் வந்ததைச் சுட்டிக் காட்டி விட்டு, "விரிகதிர் வேனில் எதிர்வரவு மாரி இயைகென இவ்வாற்றால் புரைகெழு சையம் பொழி மழை தாழ ' என்று அந்தக் கோள் அமைப்பினால் மழை பொழியும் என்பது இயல்பு என்று சொல்லியுள்ளார். உங்களது உரையாசிரியரும், "மழை பெய்க என்ற இவ்விதி வழியாலே" மழை பெய்த்தது என்கிறார் என்பதைப் படிக்கவும்.

 

முடிவாக, சிரபுஞ்சியில் மழை பெய்யவில்லையா, கவுகாத்தியில் மழை இல்லையே என்றெல்லாம் கேட்டிருக்கிறீர்கள். அந்த இடங்கள் மட்டுமல்ல, தானே புயலால் கடலூர் பாதிப்படைந்ததே, அது ஏன் நடந்தது என்று கேளுங்கள். இடத்துக்கிடம் வானிலை மாறுகிறது. நான் எழுதியுள்ள 3 வித காரணிகள் எந்நேரமும் மாறிக் கொண்டிருக்கின்றன. அவை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே இடத்திலும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சென்னையையே எடுத்துக் கொள்ளூங்கள், சென்னைக்குள்ளேயே, வடபழனியில் மழை பெய்யும், பக்கத்தில் சாளக்கிராமத்தில் சுளீரென்று வெயில் காய்ந்து கொண்டிருக்கும். இதெல்லாம் இயற்கை என்பீர்கள், அந்த இயற்கையைக் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு இடத்தின் இயற்கையையும் இடைவிடாமல் கவனித்து அவற்றின் அடிப்படையில் மழை பெய்வதையும், பெய்யும் அளவையும் சொல்ல முடியும். இவையெல்லாம் வெறும் நம்பிக்கைகள் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால் இவற்றைக் கொண்டுதான் இந்த நாட்டில் பல்லாண்டுகளாக விவசாயம் நடத்தி வந்திருக்கிறார்கள். சித்திரையில் சொல்லப்படும் வருட பலன் என்பதே மழை, பஞ்சம், விளைச்சல் ஆகியவற்றைப் பற்றியதே.

 

 

பழமையான இந்த அறிவின் சிறப்பை அறிந்த குஜராத் மாநிலத்தவர்கள், இந்த அறிவுச் சுரங்கத்தைத் தேடிப் பிடித்து வருகிறார்கள். குஜராத்தில் உள்ள ஆனந்த் வேளாண் பல்கலைக் கழகத்தினர், கோள்களின் அமைப்பைக் கொண்டு மழை பொழியும் தினங்களைக் கணித்து அவற்றை 'நட்சத்திர சரண்' என்னும் காலண்டராக வெளியிடுகிறார்கள். ஹைதராபாதிலும் இப்படி ஒரு முயற்சி நடந்து வருகிறது. இதைப் பற்றிய செய்தி இங்கே:- http://www.littleindia.com/life/6904-i-heard-the-crows-call-for-rain.html

 

குஜராத்திலும், ஹைதராபாதிலும் கணித்தது, தமிழ் நாட்டுக்கு உதவாது, சிரபுஞ்சியில் உள்ள காரணிகள் தமிழ் நாட்டில் நிகழாது. ஒவ்வொரு இடத்திலும் உள்ள புவியியல் மற்றும் காற்று மண்டலத்தில் நிகழும் மாறுதல்களைக் கவனிக்க வேண்டும்,. அவற்றுடன் கோள் நிலைகளையும் கவனித்து, மழை பொழியும் காலத்தையும், அளவையும் கண்டு பிடிக்க வேண்டும். இந்த மழைஅறிவியல் கடல் போன்றது. தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டியது. அப்படிக் கவனித்துத்தான் நல்லந்துவனார் எழுதியிருக்கிறார். இன்று அந்த அறிவை இழந்து நிற்கிறோம்.

 

 

இந்த நீண்ட கட்டுரையைப் படித்ததற்கு நன்றி. இந்தக் கட்டுரையில் ஜோதிடத்தைத் தவிர என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் புத்தாண்டு என்பது ஜோதிடத்தின் மூலம் கணிக்கப்படும் விவரம். அதைப் பாட்டசு வெடித்தோ, புதுத் துணி உடுத்தியோ யாரும் கொண்டாடுவதில்லை. அது வரப்போகும் வருடம், என்ன தரப்போகிறது என்பதை அறிவதற்கும், என்ன வந்தாலும் இடரில்லா வாழ்க்கையைத் தர வேண்டும் என்று தெய்வத்தை வேண்டுவதற்கும், கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்களேநாம் குடியிருக்கும் ஊரில் உள்ள கோயிலில் வீற்றிருக்கும் தெய்வத்துக்கு ஆராதனையும், அபிஷேகமும் கண்டு மன நிறைவு பெறுவதற்குமான ஒரு நாள். 

 

ஜோதிடத்தால் அறியப்படும் அந்த நாளை, ஜோதிடத்தைச் சேர்ந் அதன் விவரத்தை, அதன்  அடிப்படையே தெரியாமல் பேசிக் கொண்டும், அது ஜோதிடத்தில் இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ளாமல், சங்க நூல்களில் தேடிக் கொண்டும், அந்த நூல்களில் தெரிய வரும் விவரங்களை இகழ்ந்து கொண்டும், தடாகத் தாமரையை, நிலத்தில் தேடி, ஆனால் முடிவில் தாமரை அல்லாத மற்றொரு பூவை அடைந்தது போ, தையைப் பற்றியிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்களா?

 

இங்ஙனம்,

ஜெயஸ்ரீ சாரநாதன்

 

1 comment:

Jayasree Saranathan said...

Senior journalist Mr BR Haran wrote:-

Simply Brillinat.

அருமையான வாதம் ஜெயஸ்ரீஜி. வரலாறு இதை எப்படி வெளியிடும்? [(:-)))

அவர்கள் வெளியிடாததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

மனமார்ந்த பாராட்டுகள்!

அன்புடன்

ஹரன்