Wednesday, March 29, 2017

Vedic concept of Creation and Moksha (Tamil) – Part 2


வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்



வேதம் கூறும் பிரபஞ்சவியலில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகவும், ஒன்றையடுத்து ஒன்றாகவும் முடிவில்லாமல் (infinity) பலப்பல உலகங்கள் (Universes) வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன என்று பார்த்தோம். இவற்றில் எப்பொழுதுமே கால் பங்கு, தோற்றம் கொண்டவையாகவும் (manifest) மீதி முக்கால் பங்கு, தோற்றம் இல்லா நிலையிலும் (unmanifest) இருப்பதை நடராஜரின் தாண்டவம் எப்படிக் காட்டுகிறது என்றும் பார்த்தோம்.

இந்த அமைப்பில் மும்மூர்த்திகளும் ஓய்வு ஒழிவில்லாது இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தையும் தாங்கியும், ஊடுருவியும் இருக்கும் முழு முதல் பரப் பிரம்மம் நாராயணன் எனப்படுகிறான் என்று பிரமாண நூல்கள் கூறுகின்றன என்றும் பார்த்தோம். இந்த நூல்கள் உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என்பவை என்று அனைத்து ஆசார்ய புருஷர்களும் கூறியுள்ளனர். இவை constitution of India போன்றவை. இவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் இந்து மதத்தின் எல்லா வழிகளும், வழக்கங்களும் எழுந்துள்ளன.

கர்ம வினையால் பிறந்து, இறந்து, மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கும் உயிர்கள், இந்தப் பிரபஞ்சச் சக்கரத்தினின்று விடுதலை பெறுதலை ‘முக்தி’ என்கிறோம். விடுதலை என்பதால் அந்த நிலைக்கு வீடு என்னும் பெயர் ஏற்பட்டது. வீடு பேறு, முக்தி, மோக்ஷம் இவை எல்லாமே விடுதலை என்னும் பொருள் கொண்டவை.

முக்தி பெற சிவனை வணங்கினால் என்ன, விஷ்ணுவை வணங்கினால் என்ன, இதில் என்ன பேதம் இருக்கிறது என்று எண்ணலாம். அப்படி அல்ல, இந்தக் கடவுளை வணங்கினால்தான் முக்தி, அந்தக் கடவுளை வணங்கினால் முக்தி கிடைக்காது என்றும் எண்ணலாம். இதன் விளைவாக எந்தக் கடவுள் பெரியவர் என்ற சர்ச்சையும் பல காலம் நடந்து வந்திருக்கிறது. பல காலம் என்றேன், அப்படி என்றால் பல காலத்துக்கு முன், அந்த நாளில் இந்தச் சர்ச்சை இல்லையா என்றால், இல்லை என்று சொல்லலாம். காரணம், இவை குறித்த கருத்துகளை அந்த நாளில் தெளிவாக அறிந்திருந்தனர். அதற்கும் காரணம், பிரமாண நூல்கள் சொல்லும் கருத்துகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தனர்.
எனவே பிரமாண நூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

இந்த மூன்று நூல்களுள், பிரம்ம சூத்திரம் முழுவதுமே, பிறக்கும் உயிர்களின் நிலை, பரம் பொருள் என்னும் பரப் பிரம்மத்தின் நிலை, அந்தப் பரம் பொருளை அடையும் விதம் ஆகியவை பற்றி ரிஷிகள் கூறியுள்ள விஷயங்களை சூத்திரங்களாகக் கொண்டுள்ளது. அந்த நாளிலும் எழுந்துள்ள பல எதிர் விவாதங்களுக்கு பதில் அளிக்கும் விதமாகவும் அவை உள்ளன.

அவை கூறுவது என்னவென்றால், பரப் பிரம்மனையே தியானித்து வந்தால், அந்த பிரம்ம நிலையை ஒருவன் அடைவான். பிரம்மம் என்பதற்கு எளிமையான விளக்கம் சத்யம், ஞானம் அனந்தம் (எல்லை இல்லாதவன்)’ என்பதே. இந்த மூன்று குணங்களைக் கொண்டவனாக இறைவனை எந்நேரமும் நினைத்து வந்தால், முக்தி கிடைக்கும்.
இவை எல்லாம் சொல்வதற்கு நன்றாக இருக்கும். பரப் பிரம்மனது ரூபம் என்ன? நான் சிவனை வாங்குகிறேன். அவனை பிரம்மமாக தியானித்தால், எனக்கு முக்தி கிடைக்காதா
அல்லது ராமனை வணங்கும் நான் அவனைப் பிரம்மமாக நினைத்து தியானம் செய்தால் முக்தி கிடைக்காதா
நாராயணனை மட்டுமே தியானம் செய்தால்தான் முக்தி கிடைக்குமா? அப்படி என்றால், சிவனடியார்கள் பலரும் முக்தி அடைந்ததாக நூல்கள் கூறியுள்ளனவே, அவை பொய் என்று ஆகாதா? மேலும் எந்த ஒரு தெய்வ உருவையும் அல்லாது ஞான வடிவாகப் பல சித்தர்கள் தியானித்து பரம நிலை அடைந்துள்ளனரே, அது எப்படி? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நேரிடையான பதில் ஜோதிடத்தில் உள்ளது.


ஜோதிடம் காட்டும் முக்தி

ஜோதிடமா, அது புரட்டு, என்று சொல்லும் முன், இதைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஜோதிடம் என்றால் ‘ஒளியியல்’ (Science of Light) - ஜ்யோதி-இஷா என்று அர்த்தம். அந்தப் பரம் பொருள் கோடி சூர்ய ஒளி உடையவன். விராட புருஷனாக பிரபஞ்சத்தில் வியாபித்துள்ள அவன் உருவம் நட்சத்திரங்களின் உருவம் - நட்சத்த்ராணி ரூபம் என்று புருஷ சூக்தம் சொல்கிறது. அதாவது அந்தப் பரம புருஷன் நக்ஷத்திர ரூபத்தில் உள்ளான்.

நக்ஷ்’ என்னும் வடமொழி வேர்ச் சொல்லிலிருந்து நக்ஷத்ரம் என்னும் சொல் உண்டானது. நக்ஷ் என்றால் அடைதல் என்று பொருள். (to attain) எதை அடைய வேண்டுமோ அது நக்ஷத்ரம். மேலும் இது ‘ந- க்ஷீயதே’ - குறையாதது என்றும் பொருள்படும். குறையாததும், குறைவில்லாததும் அடையப்பட வேண்டியதும் பிரம்மம், எனவே நக்ஷத்ரம் அவன் ரூபமாகிறது.

அவனிலிருந்துதான் நாம் வந்தோம், அவனில்தான் முடிவில் ஐக்கியமாவோம் என்னும்படி, கண்ணுக்குத் தெரியும் நக்ஷத்திரமான சூரியனிலிருந்துதான் நம் பூமி வந்தது. முடிவில் சூரியனைத்தான் அது அடையப் போகிறது. ஒவ்வொரு நக்ஷத்திரமும் அது வந்த ஜ்யோதியில்தான் கடைசியில் ஐக்கியமாகப் போகின்றன.
நக்ஷத்ரங்களின் ஒளி இயல்தான் ஜ்யோதிஷம் - எவ்வாறு என்றால், சூரியன் காலை இதமாகக் காய்கிறான். மதியம் உஷ்ணமாகக் காய்கிறான். பின்மதியம், அவன் உக்ரம் தாங்க முடிவதில்லை. ஆனால் மாலை மிதமாகி, இரவில் நம் இயக்கத்தையே குறைத்து விடுகிறான். 

மேல்சொன்ன ஒவ்வொரு பொழுதிலும், கோடிக்கணக்கான விஷயங்கள் நடக்கின்றன. தாவரங்கள் உணவு உண்டாக்குவதிலிருந்து, கிருமிகள் அழிவதும், நீர் மேகம் உண்டாவதும், என்று பல செயல்களுக்கு அந்தச் 
சூரியன் காரணமாகிறான். ஆனால் உண்மையில் நடப்பது என்ன?

அவனா செய்கிறான்? அவன் எங்கோ நிலையாக இருக்கிறான். நாம்தான் - இந்த பூமிதான் சுழன்று சுழன்று, அவனிடமிருந்து வேறு வேறான பலனை, வேறு வேறான நிலையில், வேறு வேறான நேரத்தில் பெற்றுக் கொள்கிறோம். சூரியன் இருந்த இடத்தை விட்டு அசைவதில்லை. தனியாக ஒன்றும் செய்வதில்லை. அதே போல்தான் இந்த zodiac எனப்படும் வான் வெளி மண்டலத்தை நாம்தான் வெவ்வேறு நேர- கால- நிலையிலிருந்து பார்த்து, சூரியனிடமிருந்து வெவ்வேறான கிரணங்களை அனுபவித்தது போல, நம் நிலைக்கு ஏற்ப, வெவ்வேறான பலன்களை அனுபவிக்கிறோம். அவை என்னென்ன என்று சொல்வதுதான் ஒளியியல் எனப்படும் ஜ்யோதி- இஷம்.

இதைப் பற்றி முதன் முதலில் கூறியவர் நான்முகப் பிரமன். அவர் உபதேசித்த கருத்துகள் ‘பிரம்ம ரிஷி சம்வாதம்’ என்று சமஸ்க்ருதத்தில் இருக்கின்றது. சமீபத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு. ‘பிரம்ம ரிஷி வாக்கியம்’ என்னும் பெயரில் தற்சமயம் கிடைக்கிறது. அவரையும் சேர்த்து, 18 மகரிஷிகள் ‘ஜோதிட ப்ரவர்தகர்கள்’, (ஜோதிட சாத்திரத்தைத் தோற்றுவித்தவர்கள்) என்று சொல்லப்படுகிறார்கள். இவர்கள் தத்தமது பெயரால் உருவாக்கிய சமிஹிதைகளில் சொன்ன கருத்துகளைப் பல புராணங்களிலும் காணலாம்.

முந்தைய கட்டுரையில் சொன்னதுபோல பல கடவுளர்களும் தத்தமக்கென்று கொண்டுள்ள பணிகளை (jurisdiction or portfolio) தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள ஜோதிடம் உதவுகிறது. பிரபஞ்சத்தின் இயக்கத்தையும், அதை இயக்கிக் கொண்டிருக்கும் கடவுளர்களைப் பற்றியும் சொல்வதாலும், ஜோதிடம் என்பது வேத புருஷனின் கண் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஜோதிடத்தின் பயனைப் பற்றிய இந்த முன்னுரையுடன், நான்முகப் பிரமன் கூறும் முக்தி பற்றிய கருத்து என்ன என்று பார்ப்போம். அவர் தந்துள்ள பிரம்ம ரிஷி வாக்கியம் என்னும் உபதேசத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால், 73 யோகங்களைச் சொல்லி அவற்றுக்கான முன் பிறவிக் காரணத்தையும் கூறுகிறார். என்ன செயல் செய்தால் மறு பிறவியில் என்ன பயன் கிட்டும் என்று இவை தெளிவாக்குகின்றன. மும்மூர்த்திகள், அவர்தம் தேவியர் ஆகியோரை வணங்குவதால் என்ன பயன் என்றும் பிரம்மா சொல்கிறார்.

அவற்றுள் மும்மூர்த்தி பற்றிய குறிப்புகள், முக்தி பற்றி விவரிக்கின்றன. அவரது கூற்றுப்படி மும்மூர்த்திகளுமே முக்தியைத் தரக் கூடியவர்கள்.

மும்மூர்த்திகளும் முக்திக்கு சாதனம்

சீகண்ட யோகம் 

ஒருவன் சிவனடியார்களைத் துதித்து, அவர்களுக்கு வேண்டிய அனைத்து உபசாரங்களையும் செய்து வந்தால், மறு பிறவியில், சீகண்ட யோகத்தில் பிறந்து, ருத்ராக்ஷம் தரித்து, திருநீறு பூசி, அனவரதமும் சிவத் தியானத்தைச் செய்து, சைவ சித்தாந்தப்படி விரதங்களை அனுஷ்டித்து, சாதுக்களை உபசரித்து, சிவனையே முழுமுதல் கடவுளாகக் கொண்டு, மக்களால் மகாத்மா என்று துதிக்கப்பட்டு, மறு ஜன்மம் இல்லாத சிவபதம் அடைவான்.

லக்னாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியோர் கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது சீகண்ட யோகம் ஆகும்.

ஸ்ரீநாத யோகம் 

ஒருவன் நாராயணனையே முழு முதல் கடவுளாகக் கொண்டு, வைணவ அடியார்களை நன்கு உபசரித்து, அவர்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்து வந்தால் மறு பிறவியில் ஸ்ரீ நாத யோகத்தில் பிறந்து, நாராயணின் திருச் சின்னங்களைத் தரித்து, நாராயணன் ஒருவனையே தியானித்து, நல்ல குடும்பம், மனைவி, மக்கள், செல்வம் பெற்று அனைவராலும் கொண்டாடப் பட்டு, மறு ஜன்மம் இல்லாத பரமபதம் அடைவான்.

களத்ரகாரகனான சுக்கிரனும், பாகியாதிபதியான 9 -ஆம் வீட்டு அதிபதியும், புத்திர காரனான புதனும் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது ஸ்ரீ நாத யோகம் ஆகும்.

விருஞ்சி யோகம் 

ஒருவன் வேதம் கற்ற பிராமணர்களைப் போஷித்து, வைதீக காரியங்களுக்கு உறுதுணையாக இருந்தால், மறு பிறவியில் விருஞ்சி யோகத்தில் பிறந்து, பிரம்ம ஞானமும், அறிவும் பெற்று, நல்ல குடும்பம், மனைவி, குழந்தைகளைப் பெற்று, சிறந்த சீடர்களைப் பெற்று, ச்ரேஷ்டன் என்று பெயர் பெற்று, பிரம்ம தேஜசுடன் ஜொலித்து, மறு ஜன்மம் இல்லாத பிரம்ம லோகம் அடைவான்.

குரு, சனி, லக்னாதிபதி ஆகியோர் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது விருஞ்சி யோகம் ஆகும்.

இந்த மூன்று யோகங்களும், மூன்று மூர்த்திகளைப் பரப் பிரம்மமாக வழிபடுவதால், அவ்வாறு வழிபட்டவர் பிறவாமை என்னும் முக்தி நிலையை அடைவர் என்று காட்டுகின்றன. இதைச் சொன்னவர் நான்முகப் பிரமனே.மேலும் முக்திக்கு சாதனமாக ஒருவன் செய்ய வேண்டியதையும் இந்த யோகங்கள் காட்டுகின்றன.

சிவன் - விஷ்ணுவில் யார் பெரியவர்?

இந்த யோகங்கள் காட்டும் மற்றொரு விளக்கம் யார் பெரியவர் என்ற பேதம் சிவன், விஷ்ணுவுக்கு இருக்கிறதா என்பது. அது எப்படி என்று பார்ப்போம்.

எந்தக் கடவுளைப் பரப் பிரம்மம் என்று வணங்குகிறோமோ, அந்தக் கடவுள் மீதே உடல், பொருள், ஆவி என்று அனைத்து செயல், எண்ணங்களைச் செலுத்த வேண்டும். அப்படி, இப்படி என்று கவனச் சிதறல் இல்லாமல், முழு முனைப்புடன், இரவு பகலாக தியானம் இருக்க வேண்டும். எனவே ஒரு கடவுளை மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்ட ஒருவன், வேறு கடவுள் என்று கவனம் சிதறாமல் இருக்க அந்தந்தக் கடவுளே முக்கியம், அவனே உயர்ந்தவன் என்றெல்லாம் சொல்லி கவனம் கொள்ள வைத்துக் கொள்ளும் பொருட்டு பெரியோர் கூறியிருக்கின்றனர்.

சிவனை வணங்குபவர்கள், அவனையே ஒரே கடவுள் என்று கவனம் செலுத்தி பரம்பொருளாக வணங்குங்கள் என்று ஊக்குவித்திருக்கிரார்கள். அதேபோல் விஷ்ணுவே ஒரே கடவுள் என்று அவனை வணங்குபவர்கள், வேறு கடவுளர் என்று கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். நடுவில் இந்தக் கடவுளை வேண்டிக்கொண்டேன், அந்தக் கடவுளை வேண்டிக் கொண்டேன் என்றால், அந்தந்தக் கடவுளர் தரும் நன்மைகளில் நாட்டம் வருகிறது என்றும் அல்லது, பரப் பிரம்மனையே அடைய வேண்டும் என்ற சிந்தையிலிருந்து விலகி, தோன்றும் உலகிலுள்ள பிற பயன்களை மனம் நாடுகிறது என்றும் ஆகி, தீவீர வழிபாட்டை நீர்க்கச் செய்து விடும். இந்தக் கோட்பாடுகள், முக்தி மார்க்கத்தில் செல்பவர்களுக்குத் தேவை.

முக்தியில் நாட்டம் இல்லாதவர்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்றபடி, எந்தெந்த தெய்வங்கள் எந்தெந்த பலன்களுக்கு தேவதையோ, அந்தந்த தெய்வங்களை வணங்கிக் கொள்ளலாம். அல்லது மனம் விரும்பும் தெய்வங்களை வணங்கிக் கொள்ளலாம்.

இந்த விஷயத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் மறந்தும் புறம் தொழா மாந்தர்கள். அவர்கள் தீவீர முக்தி சிந்தனையைக் கொள்கையாகக் கொள்கிறவர்கள். இன்றைக்கு அவர்கள் எல்லோருமே அப்படி என்று சொல்ல முடியாது, ஆயினும், முக்தி மார்க்கத்தை நாடுபவர்கள், இன்னும் இருக்கிறார்கள். நாராயணனே நமக்கு என்று தீவீர நாட்டம் கொள்வதால், அவர்கள் கொள்கை தவறல்ல. அவர்கள் பிற கோயில்களுக்குப் போகாததால், அவர்களுக்கு துவேஷம் என்று சொல்வது சரியல்ல. 

அதேபோல்சர்வம் சிவ மயம் என்று எவன் ஒருவன் சிவ பக்தியில் முக்தி பெற விரும்புகிறானோ, அவன் பிற தெய்வங்களை நாடக் கூடாது.
அதேசமயம், பிற தெய்வங்களை துவேஷிக்கவும் கூடாது. பிற தெய்வங்கள், தான் வணங்கும் தெய்வத்திற்குக் குறைந்தவை என்றும் எண்ணக்கூடாது. அது ஏன் என்று உணர சாதாரண லாஜிக் போதும். அவனே எங்கும் பரவிய பரம் பொருள் என்றால், பிற தெய்வங்களிலும் இருப்பவன் அவன்தானே? அப்படி என்றால், பிற தெய்வங்கள் எப்படிக் குறைந்தவை ஆகும்? அப்படி அவை குறைந்தவை என்று சொன்னால், இவன் முழு முதல் என்று வணங்கும் அந்தத் தெய்வமும் குறைந்தது என்றாகுமே?

இதைச் சுட்டிக் காட்டும் வண்ணம் கீதையில் கண்ணன் கூறுகிறான். (7-16).
நான்கு விதமானவர்கள் இறைவனை வழிபடுகின்றனர்.

  • செல்வத்தை வேண்டி வழிபடுகின்றனர்.
  • துன்பத்திலிருந்து விடுபடவேண்டி வழிபடுகின்றனர்.
  • வேறு சிலர் இந்த இறைவன் எப்படிப்பட்டவன் என்று ஆச்சர்யப்பட்டு அவனைப் பற்றி அறிய ஆவல் கொண்டு வழிபடுகின்றனர். (அப்படிப்பட்டவரை ஜின்ஞாசு என்பர்.)
  • மெய்ஞானம் பெற்ற ஞானியும் வழிபடுகிறான்.

இப்படிச் சொல்லிவிட்டு, கண்ணன் சொல்கிறான், இவர்கள் எல்லாருமே சிறந்தவர்கள் என்றாலும், இவர்களுள் ஞானிதான் எனக்குப் பிரியமானவன். ஏனென்றால், என்னுடைய உண்மையான சொரூபம் இவனுக்குத்தான் தெரியும். “வாசுதேவம் சர்வம் இதி’ - எல்லாவற்றுக்குள்ளும் வசிப்பவன் வாசுதேவன் என்னும் நானே என்று என் சுய ரூபத்தை இவன் அறிவான், அதனால் இவனும் என் ரூபத்தில் இருக்கிறான் என்று கண்ணன் சொல்லும் கீதை நமக்குப் பிரமாண நூல்.

எந்த ரூபத்தை ஒருவன் முக்தி மார்க்கத்தில் வணங்கினாலும், அந்த ரூபத்தில் உள்ள பரம் பொருள்தான் அனைத்து தெய்வங்களிலும், அண்ட சராசரங்களிலும் உள்ளான் என்று ஆத்ம பூர்வமாக உணர்வதே சரியான மார்க்கம். இந்த மார்க்கத்தில் ஒருவன் நிலைத்திருக்கும்போது, கவனச் சிதறல் கூடாது என்ற நோக்கத்தில் பெரியோர் சொன்னவை, சமயச் சண்டைகளுக்கு வழிகோலி விட்டன.

முக்தியில் நாட்டமுள்ளவர்களானாலும் சரி, அப்படிப்பட்ட நாட்டமில்லாதர்களும் சரி, பிற தெய்வங்களைக் குறைத்துச் சொல்லுதல் என்பது - ஜோதிட பாஷையில் சொல்வதானால் - பாவ கர்மாவை உண்டு பண்ணும். அப்படிப்பட்ட கதைகளைப் பற்றிப் பேச ஒருவர் விரும்பினால், கவனமாகக் கையாள வேண்டும். அதனால் வரக்கூடிய பிற தெய்வ நிந்தனையும், அதனால் புண்படும் பக்தனின் அவதியும், கர்மாவை உண்டு பண்ணக்கூடியவை. அன்றைக்கு அவர்கள் சொல்லவில்லையா என்றால், முக்தி மார்க்கத்திற்குச் சொன்னார்கள். முக்தியில் நிலை பெற்றவன் அப்படிப் பேசலாமே என்றால், உண்மையிலேயே முக்தியில் நிலைபெற்றவன், பரம் பொருளின் சொரூபத்தை உணர்ந்திருப்பான். அவன் அப்படிப் பேச மாட்டான்.

நான்முகப் பிரமன் தரும் முக்தி

முக்தி மார்க்கத்திற்கு சிவன், விஷ்ணு ஆகிய இரண்டு கடவுளர்களையும் எவ்வாறு வழிபட வேண்டும் என்று மேற்சொன்ன யோகங்கள் காட்டுகின்றன. ஆனால் நான்முகப் பிரமன் விஷயம் அப்படிச் சொல்லப்படவில்லை. இருப்பதிலேயே, நான்முகன் பக்திதான் எளிதானது. வேதத்தைப் போற்றுதலும், வேதம் ஓதுதலை வளர்த்தலும், வேதம் ஒதுவோரை நன்முறையில் காத்தலும், அவர்களுக்குச் சேவை புரிதலும் பிரமனுக்குச் செய்யும் பக்தி என்று சொல்லப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கல்பத்திலும் வேதத்தை நினைவுக்குக் கொண்டு வந்து உலகைப் படைத்து, வேதத்தை நிலை நிறுத்துபவன், நான்முகப் பிரமனாக இருக்கவே, வேதத்தைப் போஷித்தலே முக்திக்கு வழி என்றாகிறது. நான்முகப் பிரமனே வேத உருக் கொண்டவன் என்றும் ஆகிறது. அதனாலும் அவனுக்கென்று தனிக் கோயில் இல்லாமல் இருக்கலாம். அதனாலும், ஒவ்வொரு உற்சவத்திலும், முதலில் வேத கோஷம் செய்துகொண்டு கற்றோர் செல்லவேண்டும். அவர்களைப் பின்தொடர்ந்து தான் மற்றோர் செல்வர்.

வேதத்திற்குத் தரும் முதல் மரியாதை, படைத்த பிரமனுக்குச் செய்யும் மரியாதை. அதுவே அவனை வணங்குதலுக்கு ஒப்பாகும். இடை விடாது அதைச் செய்துக் கொண்டு, வேதம் தழைக்க உதவுபவன், நான்முகப் பிரமனது அருளால் முக்தி அடைவான். இதில் தமிழன், வேறு நாட்டவன் என்றெல்லாம் இல்லை. எவனொருவன் வேதம் தழைக்க உதவுகிறானோ அவன் முக்தி அடைவான். வேதத்தையும், அது பரப்ப உதவும் சமஸ்க்ருதத்தையும் வெறுக்கும் திராவிடத் தலைவர்கள் எப்பேர்பட்ட அறிவிலிகள் என்று இதிலிருந்து தெரிகிறது. இவ்வளவு எளிய வழியை அழித்துவிட்டார்களே!

தோன்றும் பிரபஞ்சத்தில் முக்தன் நிலை

மும்மூர்த்திகள் மூலமும் முக்தி கிடைக்கும் என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் பல முக்தர்கள், சித்தர்கள் வரலாறுகள் இருக்கின்றன.

முக்தி பெற்ற இவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

இதைப் பற்றி ஜைமினி, பாதராயணர் போன்றோர் விவாதித்த கருத்துகள் பிரம்ம சூத்திரங்களாக உள்ளன. மறு பிறவி என்னும் கர்மப் பிணைப்பிலிருந்து இந்த முக்தர்கள் விடுபட்டு விடுகிறார்கள். ஆனால் நான்முகப் பிரமனின் 100 வருட ஆயுளாக இருக்கும்  இந்தத் தோன்றும் பிரபஞ்சத்தின் கால் பகுதியைவிட்டு இவர்களால் வெளியேற முடியாது என்று பிரம்ம சூத்திரம் கூறுகிறது. நான்முகப் பிரமன் இருக்கும் பிரம்ம லோகத்தில் இவர்கள் நிலை பெற்று, அந்த நான்முகனின் ஆயுள் முடியும்போது அவனுடன், இந்தச் சக்கரத்தை விட்டு வெளியேறி, பிரபஞ்சத்தையே தன் கருவில் தாங்கும் பரம் பொருள் என்னும் அந்தப் பிரம்மனிடம் (Supreme Brahman) லயிப்பர்.

இந்தக் கால் பகுதி பிரபஞ்சத்தில் முக்தி அடைந்த உயிர்கள், எங்கு வேண்டுமானாலும் சஞ்சரிக்கலாம், எதை நினைத்தாலும் சாதிக்கலாம். படைத்தல் தொழில் தவிர, பரம் பொருள் செய்யும் எந்தச் செயலையும் செய்யக்கூடிய நிலையையும் ஆற்றலையும் அவர்கள் பெறுகிறார்கள்.
இதோ வேதம் காட்டும் பிரபஞ்சத்தைப்பாருங்கள்
 
 நாம் பயணிக்கும் பிரபஞ்சம் இது

முக்தர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றால் என்ன அர்த்தம்? பல்வேறு காலக் கட்டங்களில் தோன்றிய அகத்தியரால் எப்படி அப்படித் தோன்ற முடிந்தது என்று இது காட்டுகிறது அல்லவா? அவர் என்றோ முக்தி அல்லது சித்தி அடைந்திருப்பார். வெவ்வேறு யுகங்களில் தேவை ஏற்படும்போது, அப்பொழுதே அப்படியே அவரால் தோன்ற முடியும். கருவில் பிறந்து, வளர்ந்து வர வேண்டிய அவசியமில்லை. எங்கெங்கு தேவையோ, அங்கங்கு தோன்றி, செய்ய வந்த செயலைச் செய்திருப்பார். ஆனால் கர்மப் பிணைப்பு அவருக்கு ஏற்படாது. அதுதான் இந்த முக்தி தரும் விசேஷச் சலுகை.

இறைவன் திடீரென்று தோன்றி ஆட்கொண்டான் என்றெல்லாம் புராணங்கள் சொல்கின்றனவே, அவை கட்டுக்கதை அல்ல என்றும் இது காட்டுகிறது. முக்தர்களாலேயே, இஷ்டப்படி வந்து போக முடியும் என்றால், இறைவன் வருவதில் என்ன அதிசயம்? அது எப்படி கட்டுக் கதையாக இருக்கும்?

அவ்வாறே, நாரதரும் வந்து போய்க் கொண்டு இருக்கிறார். பல ரிஷிகளும், பெரியோரும் நம் கண்ணில் பட முடியும் - நாம் அந்த அளவு ஆத்ம சாதனை கொண்டிருந்தால். இதன்படி ஆதி சங்கரரோ, அல்லது இராமானுஜரோ மீண்டும் தோன்றுவதற்கு வாய்ப்புண்டு. கர்ம வினையால் அவர்கள் பிறக்க மாட்டார்கள். உலக நன்மைக்காக, ஆண்டவன் ஆஞ்ஞையால் அவர்கள் அவதரிப்பார்கள்.

வெவ்வேறு காலக் கட்டத்தில் பிரபந்தங்களைப் பாடிவிட்டுப் போய் விட்டார்கள் ஆழ்வார்கள். நம்மாழ்வார் அருள, நாத முனிகள் அவற்றைப் பெற்றாரே, அது எப்படி - என்பதும் இந்த அமைப்பில் தெரிகிறது. இன்றும் நாத முனிகள் அளவுக்கு ஒருவன் தியானம் செய்தால், அவனுக்கு முன் நம்மாழ்வார் தோன்ற முடியும். திவ்யப் பிரபந்தத்தை எடுத்துக் கொடுக்க முடியும்.

இதையெல்லாம் சொன்னோம் சரி, இந்த மும்மூர்த்திகள் தவிர வேறு தெய்வங்களைப் பூஜிப்பவர்களுக்கு முக்தி கிடைக்காதா? பிரம்ம சூத்திரம் அதையும் சொல்கிறது.

பிற மதம், பிற தெய்வம் மூலம் முக்தி உண்டா?

ஒருவன் எதை உபாசிக்கிறானோ அதை அடைவான். இதை ‘தத்க்ரது’ என்று பிரம்ம சூத்திரம் கூறுகிறது. பரம் பொருள் என்னும் அந்த முழு முதற் கடவுளைத் தியானித்து மும்மூர்த்திகளில் ஒருவரை உபாசித்தால் முக்தி கிடைக்கும். வேத மதத்தில் பிற மூர்த்திகளை உபாசித்தாலும், முடிவில் இந்த மும்மூர்த்திகளுக்குத்தான் ஒருவன் செலுத்தப்படுவான். 

அவையெல்லாம் பரிவார தேவதைகள். சிவன் அல்லது விஷ்ணுவுடன் சேர்பவர்கள். அவர்கள் மூலம் முக்திக்கு வழி பிறக்கும்.


ஆனால் படைக்கப்பட்ட உலகில் தோன்றின உயிர்களை முழு முதற் கடவுளாக எண்ணுபவர்கள் அந்த உயிர்களையே அடைவார்கள். இங்கே வைணவ சம்பிரதாயத்தில் அனுசரிக்கப்படும் ஒரு நம்பிக்கையைச் சொல்ல வேண்டும். ஆசார்யர் இராமானுஜர் சம்பந்தம் இருப்பவர்கள் அனைவருக்குமே முக்தி உண்டு என்று கடவுளே கொடுத்த உறுதிமொழி இந்தச் சம்பிரதாயத்தில் உண்டு. அதனால் ஆசாரியனுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முக்திக்குத் தேவையான தியானம் இல்லாவிட்டாலும்கூட, முக்தரான இராமானுஜரைத் தியானிப்பதால், முன் கூறிய தத்க்ரது’ கோட்பாட்டின்படி, வைணவர்கள் இராமானுஜரை அடைந்து, தாமும் முக்தி அடைவர். தெய்வம் கொடுத்த உறுதிமொழி இப்படி நடைமுறைப்படுத்தப்படும்.

ஆனால் பிற மதங்களில் இவ்வாறு அல்ல. 
அம்மதங்களில் தெய்வம் என்று போற்றப்படுபவர்கள், ஆன்மிக விழிப்படைந்த உயிர்களாக இருந்தாலும், முழு முதற் கடவுளான பிரம்மத்தை உபாசிக்காமையால், முக்தி அடைந்தவர் இலர். எனவே அவர்களுக்கு மறு பிறவி உண்டு. அதுவரை அவர்களை உபாசித்த உயிர்களும் அவர்களிடமே நிலைத்து, மீண்டும் அவர்கள் பிறக்கும்போது பிறக்க வேண்டும். அல்லது ஒரு கல்பம் முடிந்து பிரளயம் வந்து படைக்கப்பட்ட எல்லாம் அழியும்பொழுது அவையும் அழிந்து மீண்டும் பிறக்க வேண்டும். இதை பிரம்ம சூத்திரம் வாயிலாக அறிகிறோம்.

இன்றைக்குப் பிற மதங்கள் இருக்கின்றனவே அவர்களுக்கு வேறு கதியில்லையா என்று கேட்டால், என்னிடம் இரண்டு பதில்கள் இருக்கின்றன.

ஒன்று ஜோதிடம் வாயிலாக அறிவது. நன்னடத்தை, ஒழுக்கம், தர்மத்தில் நிலைத்தல், முக்கியமாக ஆபத்தில் இருப்பவனுக்கு உதவுதல் அல்லது கருணையோடு இருத்தல் இவை ஒருவனிடம் இருந்தால், அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும்.

மற்றொன்று, இந்து மதத்தைக் காப்பியடித்து இப்பொழுதெல்லாம் முத்தொழிலோனே நமஸ்காரம் என்று கிறிஸ்துவுக்கு நமஸ்காரப் பாட்டு பாடுகிறார்களேகிறிஸ்துவை வேத முதல்வன் என்றாக்கிக் கும்பிடுகிறார்களேஇது எங்கே கொண்டுபோய் விடும்
இவர்கள் நம்மைக் காப்பியடித்து நம்மைப் போல ஆக முயல்கிறார்கள். 
ஆனால் இங்கே இருப்பவர்கள்நம் விரத நாள்களில் வயிறு முட்ட உண்டுவிட்டுஅவர்கள் விரதத்தை முடித்துவைக்ககஞ்சி குடிக்கிறார்கள்.

என்ன அபத்தம் இது?

காப்பியடித்தாலும், அல்லது உல்டாவாக செய்தாலும், அதனதன் பலன்களே வந்து சேருமே  தவிர, முக்திக்கு ஆதாரமான ஆத்ம ஞானம் வராது. 

ஆத்மா என்பதையே ஏற்றுக் கொள்ளாத அந்த மதங்களைப் பின்பற்றினால் ஆத்ம ஞானம் எங்கிருந்து வரும்? 

ஆத்மா என்ற ஒன்று இருப்பதையே ஒருவன் அறியவில்லை என்றால் ஆத்மாவுக்கு விடுதலை என்னும் முக்தியை ஒருவன் எப்படி அடைய முடியும்

இந்த நிலையில், ஒரே ஒரு வழி தான் புலப்படுகிறது. பிற மதத்தில் இருப்பவருக்கு அந்த மதக் கடவுளிடம் ஆழ்ந்த நம்பிக்கையும், பற்றும் இருந்தால், அந்த பற்று பின்னுமொரு பிறவியிலும் தொடரும். அது ஆத்ம  ஞானத்தைத் தேடும்படி, பின்னொரு பிறவியில் செலுத்தும். 

அவ்வாறு ஆத்மாவைத் தேடினால் அவன் வேதாந்தி. 
இன்றைய மொழியில் அவன் ஹிந்து!

 (தொடரும்…)