Saturday, March 7, 2020

அரசியல் பிரவேசத்தில் அவதார புருஷராகும் ரஜினிகாந்த்


அரசியலில் அறம் என்றாலே என்னவென்று பார்க்காத மக்கள் நாம். ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்று என்று சிலப்பதிகாரத்தில் படித்ததுதான். பிழை செய்யும் எந்த அரசியல்வாதியையும் அறம் தாக்கவில்லை. ஆனால் இன்று அறவழி அரசியலை முன்னிறுத்தி ரஜினி தயாராகிக் கொண்டிருக்கிறார். அவரது அறவழி அரசியல்தான், நாசகார அரசியலாருக்குக் கூற்றாக இருக்கப் போகிறது.  அதைச் செய்ய விரும்பும் திரு ரஜினிகாந்த் அவர்களை மனதார வரவேற்கிறேன்.



அந்த அறவழி அரசியலுக்கு அடித்தளமாக இருப்பவை மூன்று கட்டளைகள். அவர் சொன்னதாக அந்த மூன்று கட்டளைகள் வலைத்தளத்தில் உலவி வருகின்றன. அவற்றைச் சொல்வதற்கே ரஜினி அவர்களை அரசியல் களத்தில் வரவேற்க வேண்டும். முதல் இரண்டும் அவர் ரசிகர்- தொண்டர்களுக்குச் சம்மதமே என்று தெரிகிறது. 

தேர்தலில் போட்டியிட 60% இளைஞர்களுக்கு முன்னுரிமை தர விரும்புகிறார். திறமை, அனுபவமும் முக்கியத்துவம் பெறும். இது நல்ல விஷயமே.

அடுத்து அவர் சொன்னது அன்று காந்தியடிகள் காங்கிரஸைக் கலைக்கச் சொன்னதற்கு ஒப்பானது. காந்தியடிகள் சுதந்திரம் பெற்றவுடன் காங்கிரசின் தேவை முடிந்து விட்டது, எனவே கட்சியைக் கலைத்து விட வேண்டும் என்றார். ரஜினி அவர்கள் தேர்தல் முடிந்தவுடன் கட்சிப் பதவிகளைக் கலைத்து விட வேண்டும் என்கிறார். கட்சிப் பொறுப்பாளர்களிடமிருந்து பெட்டி பெட்டியாக வசூல் செய்யும் இன்றைய அரசியல் சூழ்நிலையில், இப்படிப்பட்ட ஒரு கட்டளை இவர் வசூல் ராஜா இல்லை என்பதையும் தன் கட்சிக்காரர்களும் அவ்வாறு இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் என்பதையும் காட்டுகிறது. கண்டிப்பாக இது சிஸ்டம் சேஞ்சுக்கு அடிகோலும்.

அடுத்து அவர் சொன்னதாகச் சொல்லப்படுவதுதான் ரசிகர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. அவர் அரசியல், அரசாங்கம் இரண்டையும் பிரித்துப் பார்க்கிறார். இதுவரை தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் எல்லாம் இரண்டையும் கலந்தும், இரண்டுக்கும் ஒரே தலைவரே என்றும் நம்மைப் பழக்கப்படுத்தி வைத்திருந்தன. மேலும் தனி மனித வழிபாட்டையே பார்த்து நாம் வளர்ந்து விட்டோம். இப்பொழுது கம்பெனி ஒன்றை நடத்துவது போல, சேர்மனாகக் கட்சித் தலைவரும், அவர் வழி காட்டுதலில் தலைமை அதிகாரியாக, ஒரு சி-ஈ.ஓ-வாக (CEO) முதல் மந்திரியும் இருக்கக்கூடிய சூழ்நிலையைக் கொண்டுவர ரஜினி நினைக்கிறார். அது நல்லதுதானே!

அவர் கட்சியை பலப்படுத்தவும், அவர் கொண்டு வர விரும்பும் - நமக்குத் தேவையான - சிஸ்டம் சேஞ்சையும் உருவாக்கவும் அவரது நேரமும், எண்ணமும் அங்கு இருக்க வேண்டும். முதன் மந்திரி பதவியில் இருந்து கொண்டே அத்தனையும் செய்வது சிரமம். புது இலக்கை நோக்கி அவர் முதல் அடியெடுத்து வைக்கும் போது, கட்சி, ஆட்சி இரண்டையுமே பலப்படுத்த ஆரம்பப் படி இவ்வாறு இருப்பது அவர் கட்சிக்காரர்களுக்குத்தான் நல்லது. ஆரம்பிக்கும் கட்சி என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டாமா?

மேலும் இன்றைய நாட்டு நடப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். சிஸ்டத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும், வேசி சினிமாக்காரர்களும், சிவப்பு விளக்கு ஊடகங்களும் அவரை ஒரு வில்லனாகத்தான் பார்க்கின்றன. அவர் மட்டும் முதலமைச்சர் வேட்பாளராக நிற்கட்டும், மோடியை விட அதிகமாகவே இவர் மீது காழ்ப்பு காட்டி எதிர்ப்பு அரசியல் செய்வார்கள். அதற்கெல்லாம் தலைவர் அசரமாட்டார். ஆனால் அவர் கொண்டு வர விரும்பும் மாற்றத்துக்கு அது வழி வகுக்காது. அவரை மட்டுமல்ல, அவரது குடும்பத்தினைரையும் இழுப்பார்கள். ரஜினி அவர்களது வேகத்துக்கு இவையெல்லாம் முட்டுக்கட்டை  போடும்.

மேலும் இன்றைய தமிழக அரசியல் சூழலில் பிரித்தாளும் சூழ்ச்சி அமோகமாக நடந்து கொண்டு வருகிறது. ஜெயலலிதா இருந்த போது அது அவ்வளவாக பலிக்கவில்லை. எனினும் அவ்வ பொழுது ஜெயலலிதாவும் சில சமரசங்களைச் செய்ய வேண்டியிருந்தது. நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று புரிந்திருக்கும். சில தினங்களுக்கு முன்தான் இசுலாமியர்களை ரஜினி கூப்பிட்டுப் பேசியிருக்கிறார். என்ன பேசினார் என்று தெரியாது. ஆனால் சிறந்த தேசியவாதியான ரஜினி அவர்கள் இசுலாமியர் தேசிய நீரோட்டத்தில் கலப்பதையே விரும்புவார். அதற்காகத்தான் பாடுபடுவார். இன்றைய சூழநிலையில் ரஜினி என்னும் அரசியல் புதுமுகத்தால் அந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியும்.

அதனால் அவர் எடுக்க விரும்பும் ரோலை திறமையாகச் செய்ய உதவுங்கள். வெற்றி பெறும் ஒவ்வொரு தொகுதியும் அவருக்கு கிடைக்கபோகிற பெர்சனல் வெற்றிதான். அவர்தான் சூத்திரதாரி. அதில் சந்தேகமே இல்லை. ஆட்சிப் பொறுப்பில் அமர போகிறவருக்கும் மேலே அவர் கண்காணிப்பாளராக இருக்கப் போகிறார். ஒரு முறை அவர் ஆட்சியைப் பிடித்து விடட்டும். கட்சியையும், மக்களையும் தன் வசப்படுத்திக் கொண்டபின் அடுத்த முறை, அல்லது அதற்கு முன்பே கூட அவரே முதல்வர் பதவியில் அமரட்டும். இன்றைய சூழலில் அவர் அவதார புருஷராக உருவெடுக்கட்டும். பிறகு அட்மினிஸ்ட்ரேட்டராக ஆகட்டும்.

அந்த நாளில் 'நான் மகான் அல்ல' என்னும் ரஜினி திரைப்படம் வந்தபோது அந்தத் தலைப்பைக் குறித்து சர்ச்சை எழுந்தது. மகான் அல்ல என்பது சினிமாவுக்குத்தான். இன்று அரசியல் மகானாக அவர் உருவெடுக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. அதற்கு உறுதுணை செய்வோம்.