Thursday, December 28, 2017

Vedic concept of path of the Earth covering Vaikunta Ekadasi & Maha Shivaratri (Tamil) - Part 5

முந்தைய கட்டுரைள் : 
Part 1:அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்
Part 2: வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்
Part 3: பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்
Part 4: பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்

பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்


நான்முகப் பிரம்மன் நான்கு திசைகளிலும் பார்த்து படைப்பை ஆரம்பித்தார். இவற்றுள் இரண்டு திசைகள் நிச்சயமானவை. அவை வடக்கும், தெற்கும் ஆகும். பொதுவாகவே அண்ட வெளியில் நாம் இருக்கும் மண்டலத்துக்கு மேல் புறம் இருப்பது உத்தரம் என்னும் வடக்கு. அதற்கு நேர் எதிரே இருப்பது, அதாவது நாம் இருக்கும் மண்டலத்துக்குக் கீழே இருப்பது தக்ஷிணம் என்னும் தெற்கு. நான்முகப் பிரமன் தனக்கு மேலும், கீழும் பார்த்த திசைகள் வடக்கு, தெற்கு என்று ஆயின.

பிரம்மம் என்ற சொல்லுக்கு பெரிதானது, வளர்ந்து கொண்டே போவது என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. தோன்றும் பிரபஞ்சத்தில் நுழைந்தவுடன், உப்பிக் கொண்டே போவதுபோல் படைப்பு வளரலாயிற்று. நான்முகப் பிரம்மனும் தானும் அப்படியே பயணிக்கிறார். மேல் எழும்ப எழும்ப அந்தத் திசை வடக்காயிற்று. அவர் கீழே விட்டுச் சென்ற பகுதி தெற்கு ஆயிற்று. இதையே வேறு விதமாகச் சொல்வதென்றால், முதலில் தெற்கில் அண்டங்கள் தோன்றி, அழிந்து, மீண்டும் சிதறலிருந்து உருவாகிக் கொண்டிருக்கின்றன. வடக்கு நோக்கிப் போகப் போக புதிதாகப் படைப்பு எழுந்து கொண்டே இருக்கின்றது.

ஆனால் ஒரேயடியாக வடக்கு முகமாகவே செல்ல முடியாது. குயவனின் சக்கரத்தைப் போன்ற ஆதார சக்தியின் இழுப்பினால், எப்பொழுதுமே கிழக்கு அல்லது வலப் புறம் நோக்கியே திரும்பி சென்று கொண்டிருக்க வேண்டும். கிழக்கு என்பது அவரும், அவரது படைத்தலும் பயணிக்க வேண்டிய திசை. நடராஜரது உருவத்தில் அந்த திசை உடுக்கையில் கிளம்பி, அக்னியை நோக்கிச் செல்வது. இது நேர்ச் சுற்று அல்லது வலச் சுழி, அதாவது clockwise direction ஆகும். நான்முகப் பிரம்மன் முதலில் மேல் முகமாகப் பார்த்து, பின் தான் பயணிக்க வேண்டிய திக்கை நோக்கி, அதற்குப் பின் கீழ் முகமாக நோக்கும் போதும் வலச் சுற்று வருகிறது. இப்படி இந்த சுற்று வடக்கிலிருந்து தெற்கை நோக்கிச் செல்வதால் இதைப் பிரதட்சிணம் என்கிறோம்.

இந்தப் பிரபஞ்சமும், நடுவில் ஆதார அச்சாக இருக்கும் பரம் பொருளான இறைவனைப் பிரதட்சிணம் செய்து வருகிறது. விநாயகப் பெருமான் தன் தாய் தந்தையைச் சுற்றி வந்ததாலேயே உலகைச் சுற்றி வந்ததாக அறிவுறித்தியது, அந்தப் பரம்பொருளான இறைவனை ஆதாரமாக வைத்து உலகங்கள் அனைத்தும் சுற்றி வருகின்றன என்பதைக் காட்டவும், அது மட்டுமல்லாமல் அவரைச் சுற்றுவதால் அனைத்து உலகங்களும், அனைத்து பிரபஞ்சங்களும் செல்லும் மாபெரும் முழுச் சுற்றினையுமே செய்வதற்கு ஒப்பாகும் என்பதை உள் பொருளாக உணர்த்தவும் எழுந்தது என்றும் சொல்லலாம்.அண்ட சராசரங்களும் அவனைச் சுற்றுவது போல, அண்ட சராசங்களுக்கும் அதிபதியான பரம்பொருளை நாமும் கோயிலில் பிரதட்சிணம் செய்கிறோம்.

பிரபஞ்சம் செல்லும் பாதையே பிரதட்சிணமானது என்று நாம் சொல்வதை, நாம் கண்கூடாகப் பார்க்கும் வான்வெளி அண்டங்கள் மெய்ப்பிக்கின்றதா? வானில் காணும் நட்சத்திரங்களும், அவற்றின் கூட்டங்களும் வேறு வேறு திசையில் சென்று கொண்டிருக்கின்றன அல்லவா என்ற கேள்வி எழுகிறது. தோன்றிப் பல காலம் ஆகவே (10 to the power of 17 வருடங்கள் ஆகிவிட்டன; இன்னமும் அவ்வளவு வருடங்கள் செல்ல வேண்டும் என்பது பண்டைய ஜோதிட- வான இயல் நிபுணரான பாஸ்கராச்சரியார் கணிப்பு.) அண்டங்கள் மோதி, உருண்டு, பிறழ்ந்து தற்சமயம் வேறு வேறு திக்கில் போவது போல் தோற்றம் அளிக்கிறது. மேலும் ஒவ்வொரு கலக்சி கூட்டமும் இன்னொரு கலக்சி கூட்டத்தைச் சுற்றுகிறது. ஆகையால் அப்படி உருமாறி வந்துள்ள மூன்றாம் தலைமுறை நட்சத்திரமான நமது சூரியக் குடும்பத்தில் உள்ள நம் பூமி இப்பொழுது உள்ள நிலையில் எது வடக்கு, எது கிழக்கு என்று எப்படிச் சொல்ல முடியும் என்ற கேள்வி வருகிறது. மனித சமுதாயத்தின் நன்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ரிஷிகள் வேத விஞானத்திலிருந்து நமக்கு இந்த விவரங்களை எடுத்துக் கொடுத்துள்ளனர்.

அவர்கள் வாயிலாக நமக்குக் கிடைத்துள்ள விவரம், நம் பூமி தன் சுழற்சிக்கு ஆதாரமாகக் கொண்டுள்ள வட துருவப் பகுதியே பிரம்மன் பயணிக்கும் வடதிசை என்பதாகும். நம் சூரிய மண்டலத்திலேயே மற்ற கிரகங்கள் சுழலும் அச்சு வேறு வேறு திசையில் உள்ளன. ஆனால் பூமி சுழலும் அச்சு வடதிசையில் உள்ள பிரம்ம லோகத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டது. நான்முகப் பிரம்மன் நம்மை விடாமல் பற்றிக் கொண்டு, பிடித்து இழுத்துச் செல்வது போல் நாம் இந்தப் பிரபஞ்சத்தில் பயணிக்கிறோம்.


தென் திசை என்பது முடிந்து போன விஷயங்கள் கொண்டவை. Re-cycling ஆகிக் கொண்டிருக்கும் இடம். தெற்கிலிருந்து உயர வேண்டும் என்றால் நாம் இருக்கும் பூ மண்டலத்துக்கு வர வேண்டும். இங்கிருந்து உயர வேண்டும் என்றால் பிரம்மனை நோக்கிய பயணம்தான்.

அதனால் மறு பிறவிக்குக் காத்திருக்கும் இறந்தோர் செல்லும் இடம் தென் புலம் என்றாயிற்று. அது செல்லும் மார்க்கம் பித்ருயானம் எனப்பட்டது. மீண்டும் பிறப்பெடுக்க வேண்டாத நிலையில் தெய்வீக நிலையை அடைவோரும், முக்தர்களும் செல்லும் திசை வட திசை ஆனது. அது செல்லும் மார்க்கம் தேவயானம் எனப்பட்டது.

முற்காலத்தில் வடக்கிருத்தல் என்று வட திசை நோக்கி த்யானத்தில் அமர்ந்து உயிரை விட்டதும், இந்த தேவயானத்தைப் பிடித்து பிரம்ம லோகத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே. பிதாமகர் பீஷ்மரும் அம்புப் படுக்கையில் படுத்து, சூரியனின் வடக்கு அயனத்திற்காகக் காத்திருந்தது இந்த தேவயான வழியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே. குறிப்பாக அந்த வழி எது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

நாம் இருக்கும் பகுதிக்கு வடக்கு முகமாக – அதாவது – துருவ நட்சத்திரப் பகுதியை நோக்கி, மேலாக ஏழு உலகங்கள் இருக்கின்றன. Realms of Existence என்று சொல்லலாம். நற் கர்மங்களைச் செய்தவர் அவரவர் நிலைக்கு ஏற்றவாறு இந்த பகுதிகளில் சஞ்சரிப்பர், இதில் முடிவான கடைசி நிலை பிரம்ம லோகம். நான்முகப் பிரம்மனும், பிரம்ம ஞானிகளும், முக்தர்களும் நிலை பெற்ற இடம்.

நாம் இருக்கும் பகுதிக்குத் தென் முகமாக ஏழு உலகங்கள் அல்லது நிலைகள் உள்ளன. மீண்டும் உலகில் பிறந்து உழல வேண்டிய நிலையில் இருப்பவர்கள் சஞ்சரிக்கும் இடங்கள் இவை.

இந்த அமைப்பை நோக்கினால் நாம் வாழும் பூமி பரிவாரங்களுடன் பயணம் செல்லும் ஒரு பயணியைப் போல உள்ளது. நமக்குக் கீழே (தென்புலம்) உள்ளவர்களுக்கு பூமியே கதி. அவர்கள் பூமியில் பிறந்து, உய்ந்து, மேல் முகப் பயணத்திற்கு மாற வேண்டும். மேல்முகப் பயணத்தில் இருப்பவர்கள் மேலும் மேலும் உயர்ந்து முடிவான பிரம்ம பதத்தை அடைய வேண்டும். இதில் நாம் வாழும் பூமி நடுவானது – விசேஷமானது. இதுதான் transit zone.

இங்கே ஒரு கேள்வி வரலாம்.

பூமியில் மட்டும்தான் உயிரினம் உள்ளதா? வேறு கிரகங்களில் இல்லையா? 

வேத மதம் காட்டும் பிரபஞ்சவியலில், சரீரம் கொண்ட – அதாவது பௌதிகமான உருவில் உள்ள உயிரினம் என்பது எந்த ஒரு காலக் கட்டத்திலும், ஒரு இடத்தில் தான் இருக்க முடியும். நாம் இருக்கும் காலக் கட்டத்தில் நாம் இருக்கும் பூமியில் இப்பொழுது இருக்கவே, வேறு எங்கும் இருக்க முடியாது. விஞ்ஞானிகள் என்ன தேடினாலும் நம் அறிவுக்கு எட்டக்கூடிய உயிரினங்களை எங்கும் கண்டுபிடிக்க இயலாது.

ஆனால் நாம் இருக்கும் பூமியிலேயே, மேலும் கீழும் என்று ஏழும், ஏழுமான பதினான்கு உலகங்களைச் சொன்னோமே, அந்த உலக ஜீவர்கள் உலவலாம், அல்லது வந்து போகலாம். அவர்களும் நம்மைப் போன்ற ஜீவர்களே. நாமும் நம் நிலையிலிருந்து உயர்ந்தால் மேலுலக ஜீவர்களைப் போல ஆவோம். அவர்களை ஊனக் கண்ணால் காண இயலாது. நமது பௌதிக விதிகளுக்கு வேறுபட்ட விதிகளுக்கு உட்பட்ட நிலையில் உள்ளவர்கள் அவர்கள். தெய்வமாக, தேவதையாக, நல்லோராக, வழிகாட்டியாக, பித்ருவாக அவர்கள் வந்து போவதை சிலரால், சில நேரங்களில் உணர முடியும்.

பிரபஞ்சத்தின் வடக்கு – தெற்கைப் பார்த்தோம். இனி பூமி செல்லும் பிரபஞ்சப் பயணத்தைப் பார்க்கலாம். அதற்கு முன் நம் பூமியின் திசைகள் எவை, அவற்றின் மூலம் பிரபஞ்சம் செல்லும் திசை எது என்று அறிய முடியுமா என்று பார்ப்போம்.

பூமியின் திசைகள்
    பூமியின் அச்சு வட, தென் துருவங்களை இணைக்கிறது. இலங்கையும், உஜ்ஜயினி நகரும் இந்த அச்சுப்பாதையில் உள்ளன. வட துருவத்திற்கு நேர் தெற்கே இலங்கை இருக்கிறது. (விவரங்களை சூரிய சித்தாந்தம், சித்தாந்த சிரோமணி போன்ற நூல்களில் காணலாம்.) வட துருவப் பகுதியிலிருந்து வலச் சுற்றாகப் (clockwise) பார்க்கும் பொழுது இலங்கைக்கு 90 டிகிரி வலது புறம் கிழக்கு. 90 டிகிரி இடது புறம் மேற்கு. இந்த கல்பத்தின் முதல் நாள் சூரியன் மேஷ ராசி 0 டிகிரியில் இலங்கைக்கு 90 டிகிரி கிழக்கில் உதயமானது. உதயமான திசை பூமிக்குக் கிழக்கு என்றானது. அந்த திசை இன்று உலக வழக்கில் உள்ள கிழக்குத் திசையான ஜப்பான் உள்ள திசைதான். அங்கே யமகோடி என்னும் இடம் இருந்தது. தற்சமயம், இந்த இடம் பசிபிக் கடலுக்குள் உள்ளது.


    இலங்கைக்கு இடது புறம் 90 டிகிரி தொலைவில் இருந்த இடம் மேற்கு திசையைக் காட்டுவது. இது ரோமக தேசம் எனப்பட்டது. (தற்போதுள்ள ரோம் அல்ல. 0 டிகிரி க்ரீன்விச்சுக்கு சிறிது மேற்கே அட்லாண்டிக் கடலில் இந்த இடம் இருக்கிறது.) இந்த ரோமக தேசத்தில் இருந்த மயன் என்னும் தானவன், சூரியனிடமிருந்து ‘சூரிய சித்தாந்தம்’ என்னும் வான இயல் சாஸ்திரத்தை உபதேசமாகப் பெற்றான்.

    இலங்கைக்கு நேர் எதிர் புறம், 180 டிகிரி தொலைவில் இருந்த ஊர் ‘சித்தபுரம்’

    வட துருவம் காட்டும் திசை வடக்கு ஆகும். அதற்கு நேர் எதிரே தென் துருவம் காட்டுவது தென் திசை. இரு துருவங்களையும் இணைக்கும் அச்சு இலங்கை, உஜ்ஜயனி வழியாகச் செல்கிறது. இந்த அச்சு மேரு எனப்பபட்டது. மேருவின் உச்சி வட துருவம்.

    இப்படி பூமிக்குக் சொல்லப்பட்ட திசைகள் இன்றும் உலகெங்கும் பயனில் இருக்கவே, வேத மத வழக்கமே இதற்கு ஆதாரமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

    படைப்பு முன்னேறும் திசை
இனி பூமி செல்லும் திசை, அதாவது இந்தப் படைப்பு நகரும் திசை எது என்று பார்ப்போம். நாம் இருக்கும் பால்வெளி காலக்ஸியின் நடுவில் இருப்பது மார்கழி மாதம் சூரியன் உதிக்கும் தனுர் ராசி. இதை மையமாக வைத்து பால்வெளியும் (நமது கலாக்சியும்) , நமது சூரிய மண்டலமும் சுற்றி வருகின்றன. இந்த மையத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் முதியவை என்றும், நமது கலக்சியின் ஓரப் பகுதிகளில் இருப்பவை இளையவை என்றும் சொல்லலாம். ஓரப்பகுதியில் இன்னும் புதிதாக நட்சத்திரங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மார்கழி மாத தனுர் ராசி (Sagittarius )மையம் என்றால், ஆனி மாத மிதுன ராசி (Gemini) ஓரம். இது நாம் இருக்கும் பால் வெளி கலக்சியின் ஒரு பக்கம். இந்தப் பக்கத்தில், இந்தப் பாதையில் நாம் இருக்கும் சூரிய மண்டலம், இதன் மையப் பகுதியிலிருந்து முக்கால் பங்கு (3/4 ) தொலைவில் இருக்கிறது.

ஜாதகக் கட்டம் என்று நாம் சொல்வது உண்மையில் விண்வெளியின் அமைப்பைக் காட்டும் வரை படம். கீழுள்ள படத்தில் விண்வெளியின் திசைகள் காட்டப்பட்டுள்ளன. நாமிருக்கும் கலக்சீயையும் காணலாம்.


Sagittarius எனப்படும் தனுர் ராசி, நம் பால் வெளி கலக்சியின் மையப் பகுதி. சூரியன் இந்த ராசியில் மார்கழி மாதம் சஞ்சரிக்கும். வெளி ஓரம் Geminiஎன்னும் மிதுனம்.

மிதுனத்தில் உள்ள மிருகசீர்ஷம் என்னும் நட்சத்திரம் இருக்கும் பகுதியை நோக்கி நாமும், நம் பிரபஞ்சமும் முன்னேறிச் செல்லும் பாதை செல்கிறது. மார்கழி மாதத்தில் மிருக சீரிஷத்தில் பௌர்ணமி வரவே, அந்த மாதத்திற்கு மார்கழி என்னும் பெயரும், மார்கஷிர என்னும் பெயரும் வந்தது. பயணம் செல்லும் மார்க்கத்தைக் குறிப்பது என்பது இதன் பொருள்.

இந்தப் பயணம் செல்லும் திசை மார்கழி வடமேற்கு — ஆனி தென்கிழக்கு. அதாவது பிரபஞ்சப் பாதை வடமேற்கிலிருந்து தென் கிழக்கு நோக்கிச் செல்கிறது. அதர்வண வேதத்தின் உபவேதமான வாஸ்து சாஸ்திரத்தின்படி தென் கிழக்கு அக்னியையும், வட மேற்கு வாயுவையும் குறிப்பது. இதன் காரணம் பிரபஞ்சத்தின் பயணம் நடராஜர் கையிலிருக்கும் அக்னியை நோக்கிச் செல்கிறது. இந்தப் பயணம் ஆரம்பித்தது, வாயுவில் (பராவஹன்) தாங்கி, வாயுவால் செலுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

இந்த அமைப்பில் வடகிழக்கு நோக்கி நமது துருவப் பகுதி அமைந்துள்ளது. அதாவது, பிரபஞ்சத்தின் வடக்கு திசையானது, பயணத்தில் திரும்பிச் செல்லும் போது வடகிழக்கைக் காட்டி அமைகிறது. இந்த விவரங்களைக் கொண்டு பிரபஞ்சத்தின் அடிப்படைகளையே கொடுத்துள்ளனர் நம் முன்னோர்.



இந்தப் படத்தில் வட மேற்கில் தனுர் ராசியில் சூரியன் வரும் போது மார்கழி மாதம்.

தென் கிழக்கில் மிதுன ராசியில் வரும் சூரியன் வரும்போது ஆனி மாதம்

இந்தப் பாதைக்குச் செங்குத்தான கோடு வட கிழக்கையும், தென் மேற்கையும் இணைக்கிறது. இதில் வட கிழக்கில் மீன ராசியில் சூரியன் வரும் போது பங்குனி மாதம். இந்தப் பாதையைத் தொடர்ந்து மேல் நோக்கிப் போவது தேவ யானம் என்னும் தெய்வ உலகுக்கான, பிரம்ம லோகத்துக்கான திசை.

இதன் எதிர் புறம் வரும் தென் மேற்கில் கன்னி ராசி உள்ளது. புரட்டாசி மாதம் சூரியன் இந்த திசையில் சஞ்சரிக்கும். இந்த வழி பித்ரு யானம் எனபப்டும். இன்று வரையில் அறிவியல் தெரிந்துகொண்டுள்ள விவரம், நாம் இருக்கும் பால் வெளி கலக்சி, மற்ற கலக்சீகளுடன் சேர்ந்து, கன்னி ராசி தென்படும் Virgo Super Cluster என்னும் பெரும் பகுதியை மையமாகக் கொண்டு சுற்றி வருகிறது. இந்த விவரம் வேதம் கூறும் பிரபஞ்சஇயலுடன் ஒத்துப் போகிறது. பிரபஞ்சவியலின் படி நாம் தென்புறத்தவர். மீண்டும், மீண்டும் பிறந்திறந்து நாம் இன்னும் இங்கேதான் இருக்கிறோம். இங்கிருந்து மீளும்போது, வடதிசைப் பயணம் மேற்கொள்வோம்.

இந்த அமைப்பில் முக்கியப் பாதைகள் வருகின்றன.
1. பிரபஞ்சமும், படைப்பும் முன்னேறும் பாதை.

இது வ.மே – தெ.கி நோக்கிச் செல்வது.
வாயுவிலிருந்து அக்னி நோக்கிச் செல்லும் பாதை.

2. ஜீவர்கள் போய் வரும் பித்ருயான – தேவயானப் பாதை.
இது தெ. மே -வ. கி பாதை.

இந்தப் பாதை ஒரே நேர்க் கோட்டில் இருந்தாலும் எதிர் எதிரே செல்லும் தன்மை உடையவை.

இந்தப் பாதையில் நிகழும் போக்குவரத்து காந்த மண்டலக் கோடுகள் போல இருக்கும். தேவ யானத்தில் சென்றவர்கள் செயல்களில் குறைவு ஏற்பட்டால், பூமிக்கு வந்து நிவர்த்தி செய்து விட்டுப் போக வேண்டும். பீஷ்மர் முதலானோர் பூமியில் பிறந்து இப்படியே.

கீழ் புறம் உள்ள பித்ருயானத்தில் சென்றோர், பூமியை அடை வேண்டும். சிறந்த கர்மங்களைச் செய்தால், அவர்கள் பயணம் மேல்நோக்கி அமையும். மேலும் கீழுமானவை ஜீவர்கள் செல்லும் பாதை. குறுக்காகச் செல்வது பிரபஞ்சம் செல்லும் பாதை.

முக்கிய விரத நாட்களான வைகுண்ட எகாதசி , மகா சிவராத்திரி போன்றவை வரும் போது இருக்கும் விண்வெளி அமைப்பைப் பார்த்தால், நாம் சரியாகவே இந்தப் பாதையைக் கணித்துளோம் என்று அறியலாம். இந்த விரதங்களின் தாத்பரியத்தின் அடிப்டையை வைத்துப் பார்க்கும் போது, நாம் கண்டுள்ள பிரபஞ்சவியல் கூறும் பாதையும், அதில் நான்முகப் பிரம்மனின் செல்லும் பயணம் என்று நாம் கூறுவதும் சரியே என்று தெரிகிறது.

இந்தப் படத்தில் மார்கழி மாத அமைப்பு காட்டப்பட்டுள்ளது. மார்கழியில் சூரியன் தனுர் ராசியிலும், சந்திரன் மிதுனத்திலும் இருக்கும்போது பிரபஞ்சம் செல்லும் பாதையில் சூரியன், பூமி, சந்திரன் வருகின்றன. இது பிரபஞ்சப் பாதை. அதற்குச் செங்குத்தான பகுதியில் வருவது பங்குனி மாதம் வரும் மீன ராசி. இது மோக்ஷ ஸ்தானம் எனப்படும். இது தேவயான வழி. இதை ஈசான திசை என்றும் சொல்கிறோம். காரணம் என்னவென்று இப்பொழுது எளிதாகப் புரியும் என்று நினைக்கிறேன். பிரம்ம லோகம் இந்தத் திசையில் இருக்கவே, இந்த திசை தெய்வீகத்தைக் குறிப்பது. இந்தத் திசை வழியே இந்தக் கர்மச் சக்கரத்தை விட்டு முக்தர்கள் செல்லவே, திரும்பி வராமல் நிலைத்து இருக்கும் பரமபதம் அடையவே, வைகுண்ட ஏகாதசி இந்த அமைப்பில் வருகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று சந்திரன் தேவயானப் பகுதியைக் கடக்கிறான். அப்பொழுது பரமபத வாயில் திறந்து, நாம் பிறவா நிலையைத் தரும் பெரும் பதத்தை அடைகிறோம் என்கிறோம்.

அதே மார்கழி மாதம் பௌர்ணமியன்று சந்திரன் மிருக சீரிஷத்தில் இருக்கிறான். அப்பொழுது பிரபஞ்சம் செல்லும் வட மேற்கு- தென் கிழக்குப் பாதையில் சூரியனும், சந்திரனும், பூமியும் வருகின்றன. இங்கு மிருக சீரிஷத்திலும் சில சிறப்புக்கள் நம் வேத மதம் கூறுகிறது.

மிருகசீரிஷத்தின் நக்ஷத்திர தெய்வம் சோமன் என்னும் சந்திரன். சோம பானம் பற்றிப் பல இடங்களிலும், பல தத்துவங்களுடனும் சொல்லப்பட்டிருந்தாலும், இங்கே சோமன் என்பது சாவாமை தரும் அமிர்தம். இறவாமல் மேலும் மேலும் உற்பத்தி ஆகிக் கொண்டே போகும் வழி என்பதால் இந்தப் பகுதியில் தெரியும் இந்த நட்சத்திரம் சோமனது அருளால் உண்டான நட்சத்திரம் எனப்பட்டது. தலையைத் துருத்திக் கொண்டு துள்ளி ஓடும் மான் போன்று இது இருக்கிறது என்பதால் இந்தப் பெயர். மிருக சீரிஷம் என்றால், மானின் தலை என்று பொருள்.

நாம் மிருகசீரிஷம இருக்கும் திசையை, அல்லது பகுதியை நோக்கினால் அதுவே நமது பிரபஞ்சமும் முன்னேறும் பாதை என்று தெரிந்து கொள்ளலாம். இந்தப் பாதையைக் காட்டும் மார்கழி பௌர்ணமி தினத்தின் போது நம் தமிழ் முன்னோர் பாவை நோன்பை ஆரம்பித்தனர். இரண்டு நோக்கங்களுடன் பாவை நோன்பு செய்யப்படுகிறது. ஒன்று, மழை வேண்டி, மற்றொன்று, கொண்ட கணவனை இந்தப் பிறவி மட்டுமல்லாமல், வரப் போகும் பிறவியிலும் கணவனாகப் பெற வேண்டும் என்பதே.


இவை இரண்டும் எதிர் காலம் பற்றியவை. மழையின் சிறப்பு உயிர்களுக்கு ஆதாரமாக இருப்பது. உயிர்களை வளர்க்க ஏதுவாக இருப்பது. வளர்ந்து செல்லும் படைப்பை வழி நடத்திச் செல்லும் – சோமன் காட்டும் – இந்தப் பாதையைக் காட்டிலும் வேறெந்தப் பாதை இதற்குத் தகுதியாக இருக்கும்?

பாவை நோன்பு எதிர்காலத்தைப் பற்றி வேண்டப்படுவதாக உள்ளது. வீடு பேறு பெறுவதுதான் நம் மதத்தின் குறிக்கோள். ஆனால் அதைப் பெற வேண்டும் என்றால், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று இயல்களிலும் நாம் நம் வாழ்க்கையைச் செம்மையாகக் கழிக்க வேண்டும். இவற்றை தனியாகச் செய்ய முடியாது. ஒருவருக்கொருவர் நிறை செய்வதாக, (complementary role) ஆண், பெண் இருவருமாக மனையறத்தில் இருந்தால்தான் முடியும். இதில் இந்த மூன்று இயல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இவற்றைச் செயலாற்றப் போகும் அங்கங்களான ஆணும், பெண்ணும் சிறந்த ஜோடியாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இப்பிறவியில் அவர்கள் அன்னியோனியம், அது மட்டுமல்ல, பிறவி தோறும் தொடரும் அன்னியோன்னியம் தேவை என்று எங்கேயோ போய் விட்டார்கள் நம் முன்னோர்!

இந்தக் கருத்தை, செயலை ஆயிரம் வருடங்கள் முன் வரை கடை பிடித்து வந்தவர்கள், பாரத வரலாற்றிலேயே நம் தமிழ் மக்கள்தான். இந்த மண்ணிலேதான் குஷ்பூ-கொள்கைகளும் காலூன்றி வருகின்றன. நம் பாரம்பரியம் நினைத்தபோக்கில் உருவாக்கப்பட்டவை அல்ல. நாம் இதுவரை கூறிய பிரபஞ்சக் கொள்கை கண்ணோட்டத்தில் பார்த்தால் நம் பாரம்பரியத்தின் ஆழமும், இந்து மதத்தின் தொலை நோக்கமும் விளங்கும்.


மீண்டும் மிருகசீர்ச நட்சத்திரத்துக்கு வருவோம்.

இதன் முந்தின நட்சத்திரம் ரோஹிணி. ரோஹிணியின் தெய்வம் பிரஜாபதி என்னும் உயிர்களை உண்டு பண்ணும் பிரம்மன் ஆவார். இதன் பிந்தின நட்சத்திரம் ருத்திரனைத் தெய்வமாகக் கொண்ட திருவாதிரை ஆகும். ரோஹிணி, மிருக சீரிஷம், திருவாதிரை என்னும் மூன்று நட்சத்திரங்களும் பிறப்பு, நடப்பு, முடிவு என்பவற்றைக் குறிப்பவை. மிருகசீரிஷம் காட்டும் பாதை, முடிவில் ருத்திரனில் ஐக்கியமாகி விடுகிறது. தோன்றும் பிரபஞ்சம் முடியும் இடத்தில் ருத்திரன் காட்சி தருகிறார். அதை நினைவு படுத்தி மார்கழி மிருக சீரிஷம் முடிந்த அடுத்த நாள் ஆருத்ரா தரிசனம் வருகிறது. இவை அனைத்துக்கும் பல கதைகள் உள்ளன. ஆனால் பிரபஞ்சவியலில் இவை எல்லாம் சில முக்கிய அமைப்புகளைக் குறிப்பதைக் காணலாம். அதனால் மீண்டும் மீண்டும் சொல்லத் தோன்றுகிறது – ஏனோ தானோ என்று எழுந்ததல்ல இந்து மதம்.

மேல் சொன்ன விவரங்களின் தொடர்பாக மேலும் சில விவரங்கள்:

மார்கழி பௌர்ணமியின் போது நமது தென் துருவம் புரட்டாசி மாதம் காட்டும் கன்னி ராசியை நோக்கி உள்ளது. அது பித்ருயானம். புரட்டாசியில் சூரியன் கன்னி ராசிக்கு வரும்போது, சூரியன் இருக்கும் திசையை (ராசியை , மாதத்தை) முன்னிட்டு அந்த மாதம் பித்ருக்களுக்கு முக்கியமாகிறது. அப்பொழுது பித்ருக்கள் பூமிக்கு வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் அது.
இதைப் போன்ற ஒருங்கிணைப்பு வரும் மற்றொரு மாதம் பங்குனி மாதம். பங்குனி மாதத்தில் சூரியன் தேவ யானம் காட்டும் வட கிழக்கு திசையில் வருகிறது. இதனால் பங்குனி மாதம் எல்லாக் கோயில்களுக்கும் விசேஷமாகிறது. பங்குனியில் சேர்த்தியும், தெய்வங்களின் கல்யாணமும் நடப்பது, அந்த தெய்வத்துடன் ஒரு நாள் நாமும் இணைய வேண்டியதை நினைவு படுத்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. பாவை நோன்பின் பயனாக நோன்பு முடிந்து எண்ணம் கை கூடும் மாதமும் பங்குனி தான். பங்குனி உத்தரத்தில், பிரமம் லோகமும், நமது வட துருவமும், சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க் கோட்டில் வருகின்றன.

மகாசிவராத்திரி வரும் நேரத்தில் இந்தப் பாதைகள் அமையும் விதத்தைப் படத்தில் காணலாம்.


தேவயான அமைப்புக்குச் சற்று முன்னதாகவே மாசி மாத தேய்பிறை சதுர்தசி வந்து விடுகிறது. சில டிகிரி வித்தியாசம் வருகிறது. (அதைக் கணக்கிட முடியும்) . அதே போல இந்த அமைப்புக்குச் செங்குத்தாக வரும் கோடு பிரபஞ்சப் பாதையில் அமைகிறது. அங்கும் அந்த அளவு டிகிரி வித்தியாசம் வரும். இந்த வித்தியாசம்தான் பிரபஞ்சம் வளையும் அளவாக (curvature) இருக்க முடியும்.

இப்படி அமைவதில் ஒரு சிறப்பைக் காணலாம். மகாப் பிரளயம் நடக்கும்போது, பிரம்ம லோகம், பிரபஞ்சப் பாதையில் இன்னும் முன்னேறி விட்டிருக்கும். பிரளயம் நடக்கும் நேரத்தில், பிரம்மனும் அவரது உலகை அடைந்த முக்தர்களும் பிரபஞ்சப் பாதையை விட்டு நீங்கி விட்டிருப்பார்கள். அவரோடு நீங்குபவர்களில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவர் அருளாலும் மறு பிறவியைக் கடந்தவர்கள் அடங்குவர்.

சிவனுக்கு இன்னும் வேலை முடியவில்லை; வேலை என்றும் முடியாது. Conveyor belt -இல் வருகிறார்போல அண்டங்கள் வந்து கொண்டே இருக்கும். அவற்றை தோற்றமில்லாப் பிரபஞ்சத்தில் அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதும் தோன்றும் பிரபஞ்சத்தில் படைப்பு ஆரம்பித்துக் கொண்டே இருக்கும். உடுக்கையும், அக்னியும் தூக்கின இரண்டு கைகளுக்கும் ஓய்வே கிடையாது. தூக்கினது தூக்கினபடி இருந்தால்தான் அண்டங்கள் இயங்க முடியும்.

தோன்றும் பிரபஞ்சத்திலும், எங்கெல்லாம் அழிவிலிருந்து ஆக்கம் வருகிறதோ, அங்கெல்லாம் சிவனது உடுக்கை ஒலி கேட்கும். இமயமலை வளர்ந்தபோது அப்படித்தான் ஓயாமல் உடுக்கை ஒலி கேட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. அப்பகுதியில் இருந்த கடலை முட்டி, அப்பால் இருந்த நிலப்பகுதியை மோதி, மேற்கொண்டு போக வழியில்லாமல் போகவே, மலையாக வளர்ந்தது இமய மலை என்று புவி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடலை அழித்து, மலை வந்தது. அது உடுக்கை ஒலி காட்டும் படைப்பு. அதனால் அங்கு சிவன் அம்சம் இருக்கிறது. அவனை அடைய விரும்பும் சித்தர்களும் அங்கு தான் சித்தி பெறுகின்றனர். இமய மலையில் சித்தாஷ்ரமம் இருந்தது என்றும், அங்கு விஸ்வாமித்திரர் போன்ற ரிஷிகள் வசித்தனர் என்றும், வாமன அவதாரம் அங்கே தோன்றியது என்றும் வால்மீகி ராமாயணம் கூறுகிறது.

எங்கெல்லாம் அழிவிலிருந்து ஆக்கம் வருகிறதோ அது சித்தி பெரும் இடமாகிறது. அப்படிப்பட்ட மற்றொரு இடம் திருவண்ணாமலை. அந்த மலை அணைந்த எரிமலை என்று புவியியலார் கருதுகின்றனர். ஒருகாலத்தில் பிரளய கால அக்னியைப் போல விண்ணளவு உயரும் நெருப்பைக் கக்கிகொண்டிருந்த இடம் அது. அந்த அக்னி அழிக்கவில்லை. சித்தி பெரும் இடமாக ஆக்கி விட்டிருக்கிறது.

இன்றைக்கு நாம் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு இருக்கிறோம்?


    இந்தக் கேள்விக்கு சிவபெருமானே காலக் கடிகாரமாக உதவுகிறார்.



    நாம் இருக்கும் இந்தக் காலக்கட்டம் நான்முகப் பிரம்மனின் ஆயுளில் பாதி முடிந்து, அதாவது 50 வருடங்கள் முடிந்து, 51 ஆவது வருடத்தின் முதல் நாள் மதியம் உச்சிப்பொழுது தாண்டி இருக்கும் நேரம் (இந்த விவரங்களைப் பிறகு பார்ப்போம்). நடராஜர் தாண்டவக் கோலம் காட்டும் பிரபஞ்சப் பயணத்தில், அவர் முடி மேல் நம் இப்பொழுது இருக்கிறோம். அதை இவ்வாறு காட்டலாம்.பாதையைத் தெரிந்து கொண்டோம்.

    இனி படைப்பு எப்படி நடந்தது, நடக்கிறது என்று இந்தப் பிரபஞ்சவியல் கூறுவதைப் பார்ப்போம்.



(தொடரும்)

Vedic concept of Path of the Universe (Tamil) - Part 4

பிற கட்டுரைள் : 
Part 1:அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்
Part 2: வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்
Part 3: பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்
Part 5: பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்

பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்


கொப்பூழ் தாமரையில் அமர்ந்த நான்முகப் பிரம்மன் படைத்தலைத் தொடங்குகிறார். இந்தத் தொடக்கத்திலேயே இரண்டு விஷயங்கள் முடிவாகி விடுகின்றன. ஒன்று, ஆரம்பம் முதல் முடிவு வரை என்னென்ன, எப்படி எப்படி இருக்க வேண்டும் என்கிற ப்ரோக்ராம். மற்றொன்று, எவ்வளவு காலம் இந்த ப்ரோக்ராம் நீடிக்க வேண்டும் என்பது.

ப்ரோக்ராமை அமைத்துக் கொடுப்பது வேத அறிவு. இது அழியாத விஞ்ஞான விதிகள் கொண்ட அறிவு. எவ்வளவு முறை இந்தப் பிரபஞ்சம் அழிந்து, மீண்டும் தோன்றினாலும், இந்த அறிவைக் கொண்டு மீண்டும் மீண்டும் ப்ரோக்ராம் அமைத்துக் கொள்ளலாம். அந்த அறிவை, படைப்பின் ஆரம்ப கட்டத்தில், நாராயணன் தன் கொப்பூழில் தோன்றிய பிரம்மனுக்கு உபதேசம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. பிறகு எப்பொழுதெல்லாம் உலகங்கள் அழிந்து, மீண்டும் பிறப்பிக்கப்பட வேண்டுமோ, அப்பொழுதெல்லாம் இந்த அறிவை நான்முகப் பிரம்மன் நினைவுக்குக் கொண்டு வந்து படைத்து விடுகிறார். இந்தக் காரணத்தினாலேயே, வேத மத அறிவை, நாமும் ஓரளவேனும் புரிந்து கொண்டால், நாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே, ஆரம்பம் முதல் முடிவு வரை சொல்லிவிட முடியும்.

மற்றொரு விஷயம், எவ்வளவு காலம் இந்தப் பிரபஞ்சம் ஓடிக் கொண்டிருக்க முடியும் என்பது. பிரபஞ்சங்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் ஒவ்வொரு பிரபஞ்சமும், நான்முகப் பிரம்மனின் ஆயுள் வரைதான் ‘தோன்றும்’ (manifest) பிரபஞ்சமாக இருக்க முடியும். நான்முகப் பிரம்மனின் ஆயுள் முடியும்போது, அவர் படைத்து வரும் பிரபஞ்சத்தின் ஆயுளும் முடிந்து விடும். நான்முகப் பிரம்மனின் ஆயுள் முதலிலேயே முடிவாகி விடுகிறது. அது நூறு வருடம்.

ஆயுள் காலம் நூறு

தோற்றத்தின் போதே பிரம்மனின் ஆயுள் முடிவாகி விடுகிறது என்பதால் இந்தப் பிரபஞ்சம் தோன்றும்பொழுதே எப்பொழுது முடிந்துவிடும் என்பதும் முடிவு செய்யப்பட்டு விடுகிறது என்று புலனாகிறது. இதெல்லாம் அறிவுக்கு உகந்ததல்ல என்று தள்ளி விடுவதற்கு முன்னால், இன்றைய விஞ்ஞானம் இதுவே மனிதனுக்கும் பொருந்தும் என்ற சாத்தியகூறைக் காட்டும் மரபணுவை அறிந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

சாலமன் மீன்களும், தேனீக்களும் தங்களது அடுத்த தலைமுறையை உருவாக்கியவுடன் இறந்து விடுகின்றன. இதற்குக் காரணம் ஒரு மரபணு. எப்பொழுது இறப்பு நேரிடும் என்ற செய்தி இந்த மரபணுவில் உள்ளது. இந்த மரபணு வேலை ஆரம்பித்தால், இறக்கும் நேரம் வந்து விட்டது என்று பொருள். இப்படி ஒரு செய்தியைத் தாங்கியுள்ள மரபணு ஒன்று நம் உடலிலும் இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பிட்ட கால அளவே வாழவேண்டும் என்னும் Apoptosis அல்லது Programmed cell death என்ற ஒரு விஷயம் செல்களுக்கு உண்டு. அதன் விவரம் நம் உடலில் மரபணுவுக்குள் ஒளிந்துள்ளது. கருவில் இருக்கும்போதும், வெளியில் நடமாடும்போதும், அவ்வப்பொழுது இதற்கு வேலை உண்டு. இந்த மரபணுவுக்கு மனிதனின் இறப்பை நிர்ணயிப்பதிலும் வேலை இருக்கிறதா என்ற ஆய்வு நடந்து கொண்டிருக்கின்றது. கருவிலேயே மரபணுவில் ஆயுள் நிர்ணயம் செய்யப்படுவது சாத்தியமானதுதான் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மரபணு கொண்டுள்ள செய்தியை நம்மால் மாற்ற முடிந்தால் இறப்பை வெல்ல முடியும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள்.

இமயமலைக் குகைகளில் இன்றும் கூட சிலர் முன்னூறு, நானூறு வருடங்கள் வாழ்ந்து கொண்டிருகிறார்கள் என்று சொல்கிறார்கள். சித்தர்கள் பலரும் பல நூறு, ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. சித்தர்கள் என்றாலே சித்தி அடைந்தவர்கள்; அதாவது நினைத்தது கைகூடப் பட்டவர்கள் என்று பொருள். அவர்கள் பெற்ற சித்தி வல்லமையால் பௌதிகமான மரபணுவை மாற்ற முடிந்திருக்கிறது.

பல நூற்றாண்டுகள் அவர்கள் உடலுடன் வாழ்ந்திருந்தாலும், பிரம்மனின் ஆயுளைத் தாண்டி யாரும் வாழ முடியாது. ஆயுள் முடிந்தவுடன், ‘ஆட்டம் க்ளோஸ்’ என்று அவரும் புறப்பட்டு விடுவார். முக்தியும் சித்தியும் அடைந்தவர்களும் அவருடன் இந்தச் சக்கரத்தை விட்டே நீங்கி விடுவார்கள். அதற்கப்புறம், பரம்பொருளுடன் ஐக்கிய நிலைதான்.

நான்முகப் பிரம்மன் ஆயுள் நூறு என்பதால், நூறு என்னும் ஆயுள் கணக்கு மனிதனுக்கும் விசேஷமாகிறது.  பிரம்மனின் நூறு வயதை ஒட்டியே, வேத நூல் பிராயம் நூறு என்கிறார்கள். இதை ஒட்டியே நூறு ஆண்டுகள் வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனர். நூறு வருடங்கள் ஜீவிக்க வேண்டும், நூறு வருடங்கள் சூரியனைப் பார்க்க வேண்டும், நூறு வருடங்கள் புகழும், மகிழ்ச்சியும் பொங்க வாழ வேண்டும் என்று மந்திரங்கள் உள்ளன. ராம தூதனாக வந்த அனுமனைப் பார்த்ததும் சீதைஇவ்வாறு கூறுகிறாள் – “ஒருவன் பிழைத்து மாத்திரம் இருந்தால், நூறு வருடங்களுக்குப் பிறகாவது சந்தோஷத்தை அனுபவிக்காமல் இருக்கமாட்டான் என்னும் உலக வழக்கு என் விஷயத்தில் உண்மை ஆயிற்று,” என்று நூறு வருஷம் பிழைத்திருப்பது பற்றிக் கூறுகிறாள். (வால்மீகி ராமாயணம்- 5-34-6)

இங்கு ஒரு கேள்வி வருகிறது. ராமர் 11,000 வருடங்கள் வாழ்ந்ததாக வால்மீகி கூறுகிறார். தசரதன் போன்றோரும் பதினாயிரம் ஆண்டுகள், அறுபதனாயிரம் ஆண்டுகள் என்று ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்ந்தனர் என்று சொல்லியிருக்கிறார்களே. இவையெல்லாம் எப்படிச் சாத்தியமாகும்? ஆகாது. எனவே இவை கட்டுக்கதைகள் என்று எண்ணத் தோன்றும்.

ஆனால் சீதை கூறியிருப்பதைப் பாருங்கள். மனிதனின் உடல் தாக்குப் பிடிக்கும்படியான நூறு வயது வாழ்க்கைதான் உலக வழக்கில் அன்றும் இருந்திருக்கின்றது என்பது அவள் கூறுவதிலிருந்து தெரிகிறது. அப்படியிருக்க ஆயிரக்கணக்கான வருடங்கள் என்று கூறியது கற்பனையா?

இல்லை. அற்புதமான இந்த வேத மதத்தில், பல ட்ரில்லியன் வருஷங்கள் ஓடும் ‘தோன்றும்’ பிரபஞ்சத்தில், பலவிதக் கணக்கு வழக்குகள் இருக்கின்றன. அதில் ஒன்று ராம ராஜ்ஜியம் சொல்லப்பட்ட வருடக் கணக்காகும். இந்தக் கணக்கின் அடிப்படையில் நூறு வருட மனித ஆயுளில், ஆயிரக்கணக்கான வருடங்கள் எப்படி சொல்லப்படுகிறது என்று விளக்கலாம். அதைப் பிறகு பார்ப்போம். வேறு சில அடிப்படைகளைத் தெரிந்து கொண்டால் அதை விளக்குவது சுலபம். அதனால் அடிப்படைகளிலிருந்து ஆரம்பிப்போம்.

அடிப்படைப் பரிமாணக் கூறுகள்

நாராயணனின் கொப்பூழில் தோன்றிய பிரம்மன் படைப்பை ஆரம்பிக்கிறார். வேத அறிவின்படி, தன் தியானத்தில் உற்பத்தி செய்த படைப்பு, எல்லாத் திசைகளிலும் சரியானபடி சென்று கொண்டிருக்கிறதா என்று சரிபார்க்க நான்கு திசைகளிலும் பார்க்கிறார். இதைக் காட்டவே அவருக்கு நான்கு பக்கங்களிலும் முகங்கள் உள்ளனவாக சித்தரிக்கப்படுகிறது. எல்லாம் திருப்தியாகச் சென்று கொண்டிருக்கிறது என்று மீண்டும் தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார். 


இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், திசைகள். விண்வெளியில் திசைகள் எப்படி இருக்கும்? சூரியனை முன்னிட்டு, பூமியில் திசைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆகாயத்தில் போனால் திசை ஏது என்ற கேள்வி வருகிறது.

ஆகாயத்திலும் திசை இருக்கிறது. எப்படி என்று பார்ப்போம்.

கால, தேச (இட), பரிமாணம் என்பதை மட்டுமே இன்றைய விஞ்ஞானம் அறிந்துள்ளது. வேத மதப் பிரபஞ்சவியலில் இது முக்கூட்டுப் பரிமாணமாக உள்ளது. அது திக்கு, தேச, காலம், பரிமாணம் எனப்படும். இதை ‘த்ரிப்ரச்னாதிகாரம்’ என்பர். திக்கு இல்லாமல் தேசம் அதாவது இடம் கிடையாது. இடம் என்றால் அதற்கு ஒரு திக்கு இருக்கும். இடம் என்றால் கூடவே காலப் பரிமாணமும் வந்து விடும். இவை மூன்றும் ஒன்றுக்கொன்று இயைந்தவை.

திக்கு என்றால் நாம் திசை என்று பொருள் கொண்டு விடுகிறோம். திக்கு என்பது அதற்கும் அப்பாற்பட்டது. ஒருவன் வழி தெரியாமல் தவித்தால், எப்படி, எங்கு போவது என்று தெரியாமல் விழித்தால் அவனை ‘திக்கற்றவன்’ என்கிறோம்; ‘திக்கற்று நிற்கிறான்’ என்கிறோம். ஆகவே திக்கு என்பது வழி அல்லது செல்ல வேண்டிய பாதை என்பதாகும். பாதை வகுக்காமல் பயணத்தை எப்படி பிரம்மன் தொடங்க முடியும்?

இந்தத் திக்கை இன்றைய அறிவியலார் யோசிக்கவில்லை. ஒளிக்கீற்று தேச-காலப் பரிமாணத்தில் வளைந்து செல்கிறது. அந்த வளைவு அதன் பாதை- அதன் Direction– அதை திக்கு எனலாம். ஈர்ப்பு விசை உள்ள ஓர் இடத்தை நெருங்கும் ஒளிக்கீற்று பாதையை மாற்றிக்கொள்கிறது. திக்கு, தேச, காலம் இவை ஈர்ப்பு விசையால் மாறுபாடு அடையக்கூடியவை என்னும் அடிப்படை விதியில் வேதம் கூறும் பிரபஞ்சவியல் அமைந்துள்ளது.

இதை ஒட்டியது பிரபஞ்சங்களின் அமைப்பும் சுழற்சியும். பல பிரபஞ்சங்கள் (Multiverses) இருப்பதை இன்றைய அறிவியலார் ஒத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அவை எப்படிப் பயணிக்கின்றன என்பதைக் கற்பனையாகத் தான் சொல்லியுள்ளனர். ஒவ்வொரு பிரபஞ்சமும் ஒரு குமிழியாக உப்பிக்கொண்டே போகின்றன என்பது அவர்களது சமீபத்தியக் கருத்து. குமிழியாக ஆக்கும் மூல காரணம் எப்படியிருக்கும்? தெரியாது. குமிழி எத்தனை காலம் உப்பிக் கொண்டே போகும்? ஒரு நாள் வெடித்துவிடும் அல்லவா? அப்பொழுது என்ன ஆகும்? அவர்களிடம் விடை கிடையாது. அந்தக் குமிழிகள் போகும் வழிப்பாதை என்ன? விடை இல்லை.

வேதம் கூறும் பிரபஞ்சவியலில் விடை இருக்கிறது. மேல்சொன்ன இரண்டு விஷயங்களையும் (திக், தேச, காலம், மைய ஈர்ப்பு விசை + பிரபஞ்சங்கள்) ஒன்றே இணைக்கிறது இந்தப் பிரபஞ்சவியல்.
சக்கரத்தில் பயணிக்கும் பிரபஞ்சத்தில் திக்கு இருக்கிறது.

முன்பு நடராஜர் ரூபத்தில் காட்டிய சக்கரத்தில் எண்ணிலடங்கா பிரபஞ்சங்கள் சுழலுகின்றன என்று பார்த்தோம். இந்த அமைப்பை குயவனின் பானை வனையும் சக்கரத்திற்கு ஒப்பிடலாம்.

அந்தச் சக்கரத்தின் நடுவில் ஓர் அச்சு உண்டு. அதை ஆதாரமாகக் கொண்டு சக்கரம் சுழலும். குயவனின் சக்கரத்தில் எண்ணிலடங்கா வட்டங்களை இணைத்துக் கொள்ளுங்கள். சக்கரத்தின் ஒவ்வொரு வட்டமும் ஒவ்வொரு பிரபஞ்சம் செல்லும் பாதை. அதில் ஒரு வட்டத்தில் நம் பிரபஞ்சம் இருக்கிறது என்று கொள்வோம். இந்தச் சக்கரத்தில் பல வட்டங்கள், முன்னும் பின்னும், மேலும் கீழும் என்று கணக்கில் அடங்காமல் இருக்கும் அமைப்பே பல பிரபஞ்சங்களின் அமைப்பாகும்.


குயவன் சுழற்றி விடுவது போல, இந்தச் சக்கரம் அச்சான இறைவனால் எந்நேரமும் சுழற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதைத்தான் அவன் எந்நேரமும் கர்மம் செய்து கொண்டே இருக்கிறேன் என்று கீதையில் கூறுகிறான். இந்த அச்சான ஆதாரம்தான் ஈர்ப்பு மையம். சுழலும் வட்டங்களில் நாமிருக்கும் பிரபஞ்சங்களும் பயணிக்கின்றன.

இங்கே ஒரு செய்தி மறைந்திருக்கின்றது. பிரபஞ்சங்கள் பயணிப்பது வட்டத்தில். அப்படியென்றால், பிரபஞ்சங்கள் அந்தரத்தில் பயணிக்கவில்லை. ஓர் ஆதாரத்தில், அதாவது base ஒன்றில் பயணிக்கின்றன என்றாகிறது. வட்டம் சுழல, அதன் மீது பிரபஞ்சமும் ஓடுகிறது. இந்தக் கருத்தில், இன்றைய அறிவியலாரின் குழப்பம் ஒன்று தீர்கிறது.

Big Bang என்று வெடித்துச் சிதறலினால் அண்டங்கள் உருவாகி சென்று கொண்டேயிருக்கின்றன என்பது பிரசித்தமான கருத்து. வெடிப்பினது வலிமையைப் பொருத்துதான் சிதறலின் ஓட்டமும் இருக்கும். அதன்படி, போகப்போக அண்டங்களின் ஓட்டம் குறைய வேண்டும். அப்படிக் குறையக் காணோம், குறையும் என்ற சாத்தியமும் இருக்கக்காணோம். இதுவே அந்தக் குழப்பம்.

நாம் எடுத்துக்கொண்ட குயவன் சக்கரத்தைப் பார்ப்போம். குயவன் சக்கரச் சுழற்சியில், வட்டம் இடை விடாமல் சுழன்று கொண்டிருக்கிறது. வட்டங்களைச் சுழலச் செய்வது அச்சு. அந்த அச்சு போல் ஆதாரமாக இருக்கும் சக்தியை இறைவன் என்கிறோம். சக்கரத்தின் வேகத்தை நிர்ணயம் செய்வது இறைவன் என்னும் அச்சு. ஆதாரமான அச்சின் (இறைவனின்) இயக்கத்தால் எழும் வேகம், வட்டங்களையும் (base) அவற்றில் பயணிக்கும் அண்டங்களையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போகிறது. சுழலும் அண்டங்களுக்கும் உள்ளிடை சக்தி (charge) இருந்தால், அந்த சக்தியுடன்,  base- ஆக அமைந்த வட்டத்தின் சுழலும் வேகமும் சேர்த்து, இப்பொழுது இருப்பது போல் எப்பொழுதும் ஓடிகொண்டே இருக்கும்.

இதில் தெரியும் இன்னொரு சமாசாரம், வட்டங்கள் திரவத் தன்மை (fluidity) கொண்டதாக இருக்க வேண்டும் என்பது. அதில்தான் இந்த அண்டங்கள் அடித்துச் செல்லப்படுவதைப் போல் அமைய முடியும். இந்த ஆதாரத் திரவத் தன்மை வாயு ரூபத்தில் இருப்பதாக பிரபஞ்சவியல் கூறுகிறது. இந்த வாயு, ஸப்த வாயு என்று ஏழு வாயுக்களாக உள்ளன. அவற்றில் ஐந்து பூமியில் உள்ளன. மீதி இரண்டும் பிரபஞ்சச் சுழற்சியில் உதவுகின்றன.

அவை:
(1) ஆவஹன் :- மேகங்கள் மிதக்க ஆதாரமாக இருப்பது.
(2) ப்ரவஹன் :- உயிர் தரும் பிராணனாக இருப்பது.
(3) உத்வஹன் :- கடல் நீரை ஆவியாக்கி மேகமாக்குவது.
(4) சம்வஹன் :- மேகங்களுக்கு இடையே இருந்து மழை பொழிய ஏதுவாவது
(5) விவஹன் :- சூறாவளி போன்ற வேகக் காற்றில் நிலை பெற்றிருப்பது.
இனி வருபவை உலகிற்கு வெளியே இருப்பவை.
(6) பரிவஹன் :- பால் வெளி என்னும் நாம் இருக்கும் கலக்சிகள் போன்றவை செல்ல ஆதாரமாக இருப்பது.
(7) பராவஹன் :- பிரபஞ்சம் முழுவதையுமே தாங்கிக் கொண்டு செல்லும் ஆதார வாயு இது. உடுக்கையில் ஆரம்பித்த பிரபஞ்சத்தை அக்னி வரை இழுத்துக் கொண்டு செல்கிறது இந்த வாயு. இதில்தான் மொத்தப் பிரபஞ்சமும், அதன் இயக்கமும் நடைபெறுகின்றன.

பராவஹன் சென்று கொண்டிருப்பதால் அதில் பயணிக்கும் பிரபஞ்சங்களும் அது செல்லும் திக்கிலே செல்கின்றன! இது சுழல் பாதை என்று பிரபஞ்சவியல் கூறுகிறது.

எப்படி இது சுழல் பாதை என்பதை இன்றைய அறிவியல் மூலமாகவும் சொல்லலாம். இங்கே வேலை செய்வது Centripetal force போன்ற சக்தி.

இந்தப் படத்தில் உள்ள நபர் போல் இறைவனை அச்சாக உருவகிக்கலாம். நடுவில் நிற்கும் நபர் ஆதாரமான அச்சு போன்றவர். அவரது கையில் தான் சுழற்றுகின்ற வலிமையையும் ஆதாரமும் இருக்கிறது. அவர் கயிற்றைச் சுழற்றும் போது அது வட்டப் பாதையில் சுழல்கிறது. சுழற்றும் கயிற்றின் நுனியில் இருப்பது அண்டங்கள். இந்த அமைப்பை பிரம்மச் சக்கரம் என்றும் அதில் உள்ள ஆரங்கள் (spokes) என்று பலவற்றையும் உபநிடதங்கள் விவரிக்கின்றன.


நடுவில் உள்ள மைய சக்திக்கு செங்குத்தாக உள்ள ஆரங்களில் அண்டங்கள் என்னும் charged particleசெல்லும்போது, பாதை வட்ட வடிவில் அமைகிறது. எனவே இடைவிடாது சுழலும் பிரம்மச் சக்கரத்தில் அண்டங்கள் அந்தச் சுழல் பாதையில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கின்றன.

இங்கேயும் ஒரு கேள்வி வருகிறது. ஆதார அச்சு இறைவன் என்று சுழற்றும் அவன் சக்தியைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் சுழலும் அண்டத்திற்கும் ஓர் உள்ளிடை சக்தி இருக்க வேண்டும். அது எங்கிருந்து வருகிறது?

இதை விளக்க, குழந்தை பிறப்பில் நிகழ்வதை உதாரணமாகக் காட்டலாம்.

சிசேரியன் ஆபரேஷன் மூலமாகக் குழந்தை பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வயிற்றைத் திறந்தாயிற்று. குழந்தை, கர்பப்பை நீரில் இன்னும் மூழ்கி இருக்கிறது. சில நேரங்களில், சிக்கலான பிரசவங்களில் பல நிமிடங்கள் திறக்கப்பட்ட வயிற்றில் குழந்தை இருக்கும். ஆனால் அக்குழந்தை பிறப்பது எப்போது என்று சொல்கிறோம்? சாதாரண பிரசவமானால் தலை தெரிவது, பூமியில் விழுவது, வெளிக் காற்று படுவது, அழுவது என்று பலரும் பல வித பதில்கள் வைத்திருப்பார். முடிவான பதில் என்ன என்று ஆராய்ந்தால், மூச்சு நிற்பது என்பது இறப்பு என்றால் மூச்சு ஆரம்பிப்பது பிறப்பு ஆகும். அந்தக் குழந்தையை வெளியே எடுத்து, அது அழ ஆரம்பித்தவுடன், காற்று நுரையீரலை அடைந்தவுடன் உயிர்க் கணக்கு ஆரம்பிக்கிறது.

இங்கே ஒன்றைப் பார்க்க வேண்டும். அக்குழந்தை வயிற்றைத் திறந்தும் பல நிமிடங்கள் இருந்ததே, அப்பொழுது உயிர் இல்லையா? அப்பொழுதும் அது ஜீவிதத்தில்தானே இருந்தது? ஆம். அதுவரை ஜீவிதத்தைத் தந்தது கொப்பூழ்க் கொடி! படைப்பு ஆரம்பிக்கும் வரை இறைவனின் கொப்பூழில் காப்பாற்றப்பட்ட பிரபஞ்சம் போல், அந்தக் குழந்தையும் தாயின் கொப்பூழ்க் கொடியின் மூலம் ஜீவிதத்தில்தான் இருந்தது. கொப்பூழைவிட்டுப் பிரிந்தவுடன் தோன்றும் பிரபஞ்சம் போல் அதுவும் பிறக்கிறது. அங்கேயும் ஜீவிதத்தை அதுவாக உண்டாக்கிக் கொள்ளவில்லை. வெளியில் இருந்த காற்று (ப்ரவஹன்) கொப்பூழ் தந்த சத்துக்கு ஒரு substitute ஆக ஜீவிதத்தைத் தருகிறது.


பிரபஞ்சப் படைப்பில், கருவறையில் இருக்கும் வரை இறைவன். வெளியில் வந்தவுடன் வாயு தேவன்! இறைவனின் கொப்பூழ் தந்த ஜீவிதத்தைத் தருவதால், காற்றும் ப்ரத்யக்ஷ பிரம்மம் ஆகிறது. காற்றை கண்ணுக்குத் தெரிந்த கடவுள் அல்லது பிரம்மம் என்கிறோம். இதை எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம், பரம்பொருள் திருமாலாகப் பாம்பணையில் படுத்துக்கொண்டு, கொப்பூழ் கொடி வெளிப்பட, அதில் முதல் பிறப்பாக நான்முகப் பிரம்மனைக் காட்டுகிறார். அந்த பிரம்மன் தோன்றும் பிரபஞ்சத்தின் சுவாசம் போன்றவன். தோன்றும் பிரபஞ்சம் அவர் கட்டுப்பாட்டில் வந்து விடுகிறது- மூச்சுக் காற்று நம் ஜீவிதத்தை நடத்துவது போல.

குழந்தையைப் போல, தோன்றும் பிரபஞ்சத்தின் அத்தனை படைப்புகளுமே இப்படி இறைவன் கருவிலும், கருவை விட்டு வெளியே இருக்கும் போது (தோன்றும் பிரபஞ்சத்தில்) அவனது மற்றொரு பிம்பமான பராவஹன் என்னும் வாயுவாலோ, அல்லது நாம் அறியாத ஏதோ ஒரு வஸ்துவினாலோ charged– ஆகப் போய்க் கொண்டிருக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

நாம், நமக்கு என்று எதுவும் இல்லை. இருப்பவை எல்லாம் அவன் உண்டாக்கி (கருவில் இருப்பதுபோல), அவன் உமிழ்ந்து (தோன்றும் பிரபஞ்சத்தில் பிறப்பித்து), அவன் நடத்திச் சென்று, அவனே அதை உள்வாங்கி என்றென்றும் பிரம்மச் சக்கரத்தில்- அந்தப் பிரம்மச் சக்கரம் அமைந்த தன் கர்ப்பத்தில் வைத்திருக்கிறான்.

இதிலிருந்து தெரியும் மற்ற வேத மதக் கருத்துகள்:-
  • அவனன்றி ஓரணுவும் அசையாது. அவன்தான் ஒவ்வொரு அசைவையும் செய்பவன். அவன்தான் பிரபஞ்சச் சக்கரத்தைச் சுழலச் செய்பவன். அதில் அண்டங்களைச் செலுத்துகிறவன. அங்கே நம்மையும் பிறப்பித்து, நம் ஜீவிதத்தையும் நடத்துபவன்.

  • பிறக்கும் முன் அவனில் நாம் நிலை பெற்றிருக்கிறோம். பிறந்த பின்னும், அவன் நம்முள் நிலை பெற்றும் (சுவாசக் காற்றாக), நம்மைச் செலுத்தியும், நமக்கு ஆதாரமான அடித் தளமாகவும் இருக்கிறான். நம்மை அவன் விடுவதில்லை – ஒழிக்க ஒழியாத உறவாக நமக்கும் அவனுக்கும் இருக்கிறது.

  • இந்த உறவை நாம் மறந்து விடலாம். அவன் மறப்பதில்லை. மறப்பது அவன் மரபணுவில் இல்லை எனலாம், அவனுக்கு மரபணு என்பவை இருந்தால்!!

  • நம்மை விடாமல் பிடித்துகொண்டிருப்பது அவன். அதனால நம்மைச் செம்மைப் படுத்தி எப்படியேனும் தன்னிடம் சேர்த்துக் கொண்டு விடுவான்.
மேல்சொன்ன உதாரண விளக்கத்தின் மூலம் தெரியும் மற்றொரு முக்கிய விஷயம் பித்ரு காரியம் ஏன் செய்ய வேண்டும் என்பது. ‘பெற்றோர் இறந்தவுடன் அவர்களுக்கு பித்ரு காரியம் செய்கிறேன் என்றால் அவர்களுக்குத் தெரியவா போகிறது? அது அவர்களை அடையப் போகிறதா என்ன? அதற்குப் பதிலாக அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை நன்றாகக் கவனித்துக் கொண்டால் போதும். இறந்த பிறகு ஸ்ராத்தம் என்று சடங்குகள் செய்யத் தேவையில்லை. அப்படிச் செய்யவில்லை என்றால் அதனால் நம் பிள்ளைகளையும், பேரன்களையும் பாதிக்கும் என்பதெல்லாம் சும்மா புருடா.’– இதுவே இன்றைக்குப் பரவலான கருத்து.

பெற்றவர்கள் உயிருடன் இருக்கும் வரை அவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. இங்கே கொடுக்கல்-வாங்கல் (give and take) என்னும் இயற்கையின் நியதி வருகிறது. அக்னி ஹோத்திரம் ஹோமத்திலும் இந்தக் கொடுக்கல்-வாங்கல் இருப்பதைக் காணலாம். நல்ல காற்றை நாம் எடுத்துக் கொள்கிறோம். அதற்குப் பதிலாக அசுத்தக் காற்றைத் திருப்பித் தருகிறோம். இங்கே இயற்கையின் சமன்பாடு (equilibrium) பாதிப்படைகிறது. திருப்பிக் கொடுத்த காற்றை சுத்தப்படுத்தவில்லை என்றால், நமக்கு மட்டுமல்ல நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் கிடைப்பது அசுத்தக் காற்றுதான். அதைத் தவிர்க்க அக்னி ஹோத்திரம் செய்யப்படுகிறது.

அதைப் போல பெற்றோர் நமக்குச் செய்வதால் நாம் பட்ட கடனை, நாம் திருப்பிக் கொடுக்க வேண்டும். பெற்றோர் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் அவரிடமிருந்து ஒன்றைப் பெற்றால் அதைத் திருப்பித் தர வேண்டும். இல்லை என்றால் நாம் கடன் பட்டவர்களாகி விடுவோம். கடன்பட்ட ஒருவனால், மற்றோருவனுக்குக் கடன் அளிக்க முடியாது. உயிருடன் உலவும் காலத்தில் யாரிடம் கடன் பட்டாலும், அந்தக் கடனைத் திருப்பித் தரவில்லை என்றால், வேறொரு பிறவியிலாவது அந்தக் கடனை அடைத்து விட முடியும்.

இவையெல்லாம் பிறந்தபிறகு – அதாவது வாழும் காலத்தில் நடப்பது.

ஆனால் பிறக்கும் முன் பட்ட கடனுக்கு நாம் எப்பொழுது, எப்படித் திருப்பி அடைக்கிறோம்?

தாய், தந்தையரது செல்களின் ஒடுக்கத்தில் நுழைந்து பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்கிறோமே, அப்பொழுது கடன் படவில்லையா? அவர்களது மரபணு மூலமாக, ஐம்பூதங்களிளிருந்தும், சத்தினை இழுத்து நம் உடலை வளர்க்கிறோமே, அந்த ஐம்பூதங்களுக்கும் கடன் படவில்லையா? இழுக்கும் மூச்சுக் காற்றுக்கே, திருப்பித் தந்தால்தான் நம் வாழ்கை நோயற்று இருக்கும். பலப் பலவிதமான உடல் பகுதிகளுக்காக ஐம்பூதங்களிலிருந்து ஓயாது பத்து மாதங்கள் தேவையானவற்றை தாயின் கொப்பூழ் கொடி மூலமாகப் பெற்றிருக்கிறோமே, அது கடன் இல்லையா? அதை எப்படி, எப்பொழுது திருப்பித் தருகிறோம்?

அங்குதான் வேத மதத்தின் மிக உயர்த்த இயற்கை சமன்பாடு சிந்தனை தெரிகிறது. பிண்டமாக, உதகத்தில் (நீரில்) நிலைபெற்று கர்ப்பத்தில் நாம் பெற்றதை, உதகத்தில் பிண்டத்தை இணைத்து, பிண்டோதகக் கிரியையாக, யார் மூலமாகப் பெற்றோமோ, அவர் மூலமாக, அவர் நாம் பிறக்கும் முன் இருந்த நிலையை ஒத்த நிலையை இறப்பில் அடைந்தவுடன், திருப்பித் தருகிறோம்.

இங்கே கடனைத் திருப்பிச் செலுத்த உதவும் Medium பெற்றோர். கடன் பட்டது இயற்கைக்கு.

உதகத்தில், பிண்டம் வளரக் கடன் வாங்கினோம். பிண்டத்தை உதகத்தில் கரைத்து அதைத் திருப்பிச் செலுத்துகிறோம்.



நம் பெற்றோர், பாட்டன்கள், அவர்தம் பெற்றோர் என்று குறைந்தது மூன்று தலைமுறை வரை மரபணுவை கருவில் கடன் வாங்குகிறோம். அதன் அடிப்படையில் இயற்கையிலிருந்து நமக்குத் தேவையானதை எடுத்துக்கொள்கிறோம். அதைத் திருப்பித் தரவில்லை என்றால், நம்மிடம் உள்ள இருப்பு குறைந்து விடும். குறைந்த இருப்பிலிருந்து நம் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் எந்த அளவு எடுத்துக் கொள்ள முடியும்? சொத்து இருந்தால்தானே அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க முடியும்? கடன் வைத்திருந்தால் கடன் கொடுத்தவன் (இயற்கை) நம் பிள்ளைகளை விடுவானா? அல்லது அவர்கள் கடன் கேட்டால் கொடுப்பானா? இல்லையே! இயற்கை நமக்குத் தருவது நோயற்ற வாழ்வு. நாம் இயற்கைக்குக் கடன் பட்டால், நம் பிள்ளைகளுக்குக் தேவையான கடன் (நோயற்ற வாழ்வு) இயற்கையிலிருந்து கிடைக்காமல் போகும்.

மேலே கூறப்பட்ட சிசேரியன் குழந்தை உதாரணத்தைப் பாருங்கள். வயிற்றைத் திறந்தும், அது ஜீவிதத்தில் இருக்கிறது. அந்த ஜீவிதம் வளர இடம் தந்தது தாய் வயிறு. ஜீவிதம் பெற்றது அவள் கொப்பூழ் கொடி மூலமாக; அது அவள் இயற்கையிலிருந்து பெற்ற உணவு. இன்றைக்குப் பரிசோதனைக் குழாயில் கருவை உண்டாக்கினாலும், கரு வளர வேண்டியது தாயின் கர்ப்பத்தில். அதற்கு மாற்று என்றுமே வர இயலாது.

பெற்றோர் மூலமாக நாம் பஞ்ச பூதங்களுக்கும் பட்ட கடனை, தீவிர சிந்தனையுடன் (ஸ்ரத்தையுடன்) பிண்டம் வைத்து நீர் மூலமாகத் திருப்பித் தருகிறோம்.

பிரபஞ்சங்களை கர்ப்பத்தில் வைத்துள்ள இறைவனை இதே எண்ணத்தில் பாருங்கள். அவனுக்கும் நாம் கடன் படவில்லையா? நம்மை உருவாக்கி, பிறப்பித்து, கர்ம வினையை முடிக்க உதவி, இந்தக் கர்மச் சக்கரத்திலிருந்து விடுபட உதவுகிறானே, அவனுக்கு என்ன திருப்பிச் செய்கிறோம்?

அவன் எதிர்பார்க்க மாட்டான்; எதிர்பார்க்கக் கூடாது என்றெல்லாம் சொல்லலாம். பெற்ற தாயும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. எதிர்பார்ப்பதும் இல்லை. ஆனால் பிள்ளைகளான நமக்குக் கடமை உண்டல்லவா? அவளுக்கு ஏதேனும் செய்து அவளை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்ய வேண்டும்; நாம் செய்வதில் அவள் பெருமை அடைய வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் அல்லவா? அதைத்தான் கடவுளுக்கும் நாம் செய்ய வேண்டும். அவனை உயர்த்திப் பேசுவதில், புதிதாக அவனுக்குப் பெருமை வந்து விடுவதில்லை. அப்படிப் பேசுவது நமக்குத் தான் பெருமை- எப்படிப்பட்ட தாயை நான் அடைந்துள்ளேன் என்று பிள்ளைகள் பெருமிதத்துடன் சொல்வதைப் போல…..

(தொடரும்…)

Vedic concept of Creation from the 'navel' and the sound of 'damaru' (Tamil)- Part 3


பிற கட்டுரைள் : 
Part 1:அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்
Part 2: வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்
Part 3: பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்
Part 4: பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்
Part 5: பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்

பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்


எண்ணிலடங்கா பிரபஞ்சங்கள் சுழல் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. அவை கால் பங்கு தோன்றும் நிலையிலும், (manifest form) மீதி முக்கால் பங்கு தோற்றம் இல்லா நிலையிலும் இருக்கின்றன என்றும் பார்த்தோம். இவை அனைத்தும் பாதுகாப்பாக இருக்கின்றன என்பதை சக்கரத்தாழ்வாராகவும், இவை அனைத்திலும் யோகேஸ்வரனாக அந்தப் பரம் பொருள் இருக்கின்றான் என்பதை யோக நரசிம்ஹர் நிலை கொண்டிருப்பதிலும் காணலாம்.





முடிவில்லா இப் பிரபஞ்சங்கள் எந்நேரமும் இயக்கத்தில் இருக்கின்றன என்பதை நடராஜர் உருவில் காண்கிறோம். ரிக் வேதத்தில் சொல்லப்படும் பிரபஞ்சப் படைப்பு பற்றிய பாடலானது இருளிலும், தோற்றமில்லா நிலையிலும் தொடர்ந்து இந்த இயக்கம் நடந்து கொண்டிருப்பதைக் கூறுகிறது. தோன்றும் பிரபஞ்சத்திலும் இயக்கம் நடக்கிறது. தோற்றம் இல்லாப் பிரபஞ்சத்திலும் (unmanifest) நம் அறிவுக்கு எட்டாத நிலையில் இயக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இயக்கம் அணுவிலும் காணப்படுகிறது. பிரம்மாண்டத்திலும் காணப்படுகிறது. தோன்றும் பிரபஞ்சத்திலும், ஜடப் பொருளிலும், அணுவுக்குள் அணுவாகவும் ஓயாமல் இயங்கிக்கொண்டே இருக்கிறது– என்னும் இவை அனைத்தையும் காட்டுவது நடராஜத் தத்துவமே.

இடைவிடாத இயக்க நிலையை உணர்ந்துள்ள அறிவியலார், அந்த இயக்கத்தை நடராஜர் உருவில் என்றோ நாம் அறிந்துள்ளோம் என்பதை ஆமோதித்து, ஜெனீவாவில் உள்ள நுண்ணணு ஆராய்ச்சி மையமான CERN கழகக் கட்டடத்தின் முன்புறம் இரண்டு மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலையை நிறுவியுள்ளனர். உருவ வழிபாட்டினை இகழ்ச்சியாகப் பார்க்கும் இன்றைய உலகில் அறிஞர்களும், அறிவியலாரும் இவற்றின் பின் அமைத்துள்ள அரும் பெரும் கருத்துக்களை உணர ஆரம்பித்துள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சி.

ஏனோ தானோவென்று ஏற்பட்டதல்ல இந்த இந்து மதம். இந்த மதத்தின் ஒவ்வொரு கருத்துக்கும் பின் சீரிய பலப் பல உண்மைகள் பொதிந்துள்ளன. அறிவியலார் அறிந்துள்ளதோ, முடிவில்லாத இயக்கம் ஒன்றை மட்டுமே. ஆனால் அந்த இயக்கத்தில் நடராஜர் அறிவிக்கும் படைப்புக் கோட்பாடுகளை அவர்கள் அறிந்திலர். அவை என்னவென்று பாப்போம்.


உடுக்கை எழுப்பும் ஒலி

நடராஜரது உடுக்கை ஒலியில் படைப்பு ஆரம்பமாகிறது. உடுக்கை எழுப்பும் ஒலி ஓங்காரமாகும் . தோற்றமில்லா நிலையிலிருந்து ஓடிக்கொண்டே வரும் பிரபஞ்சம், ஓங்கார ஒலியால் மாறுபாடு அடைந்து, தோன்றும் பிரபஞ்சமாக, (manifest Universe) அதாவது படைக்கப்பட்டதென உருமாறுகிறது. இன்றைய அறிவியலில், படைப்பு என்பது பெரும் வெடிப்புச் சிதறலாகவோ (Big Bang) அல்லது கோர்க்கப்பட்ட அமைப்பிலோ (String theory) இருக்கலாம் என்பவையே அனுமானங்கள். ஆனால் நடராஜர் காட்டும் படைப்பு ரகசியம் வேறு. அது ஓங்காரப் பிரம்மத்திலிருந்து ஆக்கம் உண்டாகிறது என்று காட்டுவது.



ஓங்காரப் பிரம்மத்தில் அகரம் முதல் அக்ஷரம். ஓங்கார ஒலியின் தொடர்ச்சியாக, பல்வேறு கூறுகளாக இருப்பவை பீஜாக்ஷரங்கள். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவித இயல்பையும், சக்தியையும் கொண்டவை. அவற்றைப் பகுத்து அந்தந்த சக்திகளை ஒவ்வொரு கடவுளாக, அவரவர் மன, குண, ஆன்மிக நிலைக்கு ஏற்ப வழிபட உதவுமாறு அமைத்துள்ளனர் வேத ரிஷிகள். மந்திர, யந்திர, தந்திர வழிகள் என இன்னின்ன சக்திகளை அடைய, இன்னின்ன வழிகள், இன்னின்ன பீஜாக்ஷரங்கள் என்று அமைத்துள்ளனர். இவை யாவுமே எங்கும் வியாபித்துள்ள பரம் பொருளின் உட்-கூறுகள். 

இதை இங்கே சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தமிழ்ப் பற்று என்ற பெயரில் சமஸ்க்ருதத்தை இகழ்வது என்ற கலாசாரம் தமிழ் நாட்டில் இருக்கிறது. சமஸ்க்ருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா? தமிழில் செய்யக் கூடாதா, தமிழில் செய்தால் இறைவனுக்குப் புரியாதா, அவன் தமிழில் கேட்க மாட்டானா, என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.

எந்த மொழியில் வேண்டுமானாலும் இறைவனை நினைக்கலாம், வணங்கலாம், துதிக்கலாம். அவரவர் விருப்பம். இன்னும் சொல்லப்போனால் மனத்தின் மூலமாகத்தான் உள்நோக்கி அவனை நினைக்கிறோம். ஆனால் கோயில் விஷயம் வேறு. கோயில்களில் மந்திர, யந்திர அல்லது தந்திர வழியில் ஆதார பீஜாக்ஷரங்களை நிலை நிறுத்தியிருப்பர். மேலே கூறப்பட்ட அடிப்படை விஷயங்களைப் பாருங்கள். தெய்வங்கள் தொடங்கி, கிரகங்கள் வரை பீஜாக்ஷரத்தால் குறிக்கப்பட்டுள்ளன. அவை அவ்வவற்றின் ஆதார சுருதி. அந்த ஆதாரத்தின் அலை வரிசையை அடையுமாறு அமைக்கப்பட்டவைகளே மந்திரங்கள், உச்சாடனங்கள் முதலியன. அப்படி அமைந்த அலைவரிசையில் அர்ச்சனை நடந்தால் ஆதாரத்தைப் போய் அடையும். அங்கே பார்க்க வேண்டியது என் மொழியா உன் மொழியா என்பது அல்ல. எந்த அலை வரிசை என்பதுதான் முக்கியம். அது அமைந்த மந்திரம் மற்றும் அர்ச்சனைதான் முக்கியம். அது இல்லாமல், தான் விரும்பும் மொழியில்தான் சொல்ல வேண்டும் என்றால், அதற்கு, கோயிலுக்குப் போய்தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே சொல்லிக் கொள்ளலாம். எனவே அந்தந்த கோயில்களில் வழி வழியாக இருந்து வரும் ஆதாரமான வழிமுறைகளைச் சிதைக்கக்கூடாது.

மீண்டும் உடுக்கை ஒலிக்கு வருவோம். ஒலி அலைகள் ஏற்படுத்தும் அதிர்வுகளால் படைத்தல் (Creation) ஆரம்பமாகிறது என்று உடுக்கை ஒலி உணர்த்துகிறது. இப்படி இருக்கலாம் என்று அறிவியலாரில் ஒரு சாரார் இப்பொழுது எண்ணத் தொடங்கியிருக்கின்றனர். படைக்கும் நேரத்தில் நடராஜர் அடித்த உடுக்கையின் ரீங்காரம், தோன்றும் பிரபஞ்சம் முழுவதையுமே ஆக்ரமிக்கும். ஓங்கார ரூபமாக அவனே எங்கும் வியாபித்துள்ளான் என்று பிரமாண நூல்கள் சொல்வதால் அண்டம் முழுவதும் அவ்வொலி– அந்த ஓங்கார ஒலி இருக்க வேண்டும். எந்தச் செயலைச் செய்யும் முன்னால், நம்மைச் சுற்றி என்றென்றும் இருக்கும் அந்த ஓங்கார ஒலியை உச்சரித்து, அதன் மூலம் அந்த ஓங்கார ரூபியை நம் செயலுக்கு அதிகாரியாகவும், சாட்சியாகவும் வைக்கிறோம்.

ஓங்காரமே எங்கும் வியாபித்துள்ளது என்பதற்கு சாட்சி என்ன என்றால், இப்படியும் சொல்லலாம்:
அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். அண்டத்தில் பிரம்மாண்டமாக, இடைவிடாத இயக்கத்துடன் நடராஜர் உருவில் பிரபஞ்சங்கள் அடுத்தடுத்து சுழன்று கொண்டிருப்பதைப் போல, அணுவிலும் வட்டப் பாதையில் இடைவிடாமல் இயக்கம் நடந்து கொண்டுருக்கின்றது.

ஓங்காரமும் அப்படியே. அண்டத்தில் எங்கும் ஓங்காரம் ஓடிக்கொண்டிருந்தால், பிண்டத்திலும் அது ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லவா? ஆம். ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இது உண்மையே என்று தெரிந்து கொள்ள நம் உடலில் ஓடும் இயக்கமான ரத்த ஓட்டத்தைக் காது கொடுத்துக் கேளுங்கள். ஸ்டெதெஸ்கோப்பை ரத்த நாளங்கள் உள்ள கை மீது வைத்துக் கவனியுங்கள். அற்புதமான ஓங்கார ஒலியே கேட்கிறது. வாழ்வாதாரமான ரத்தம் ஓங்கார ஒலியுடன் நம் உடலைச் சுற்றிச் சுற்றி வருகிறது– படைப்பின் ஆதாரமாகிய அணுத்துகள்கள் அண்டத்தைச் சுற்றிச் சுற்றி ஓங்கார ஒலியுடன் வருவதைப்போல.

இங்கே ஒரு கேள்வி எழலாம். ஒலி அலைகள் பயணிக்க ஒரு மீடியம் வேண்டுமே, ஒலி அலைகள் வெற்றிடத்தில் பயணிக்காதே என்று கேட்கலாம். அங்கும் நடராஜரது உடுக்கை ஒலி ஒரு க்ளூ கொடுக்கிறது.

எண்ணில்லாத இந்தப் பிரபஞ்சங்கள் முழுவதும் நடராஜரின் இயக்கம் ஊடுருவி இருக்கிறது என்பதை அவரது நடனம் காட்டுகிறது. அப்படி இருக்க அங்கே வெற்றிடம் எப்படி இருக்க முடியும்? வெற்றிடம் என்று நாம் நினைக்கும் பகுதியிலும் பரம் பொருள் ஊடுருவியிருக்கிறான் என்பதல்லவா வேதம் காட்டும் அறிவு? அதன்படி வெற்றிடம் என்பதே கிடையாது. வெற்றிடம் என்று நாம் நினைக்கும் பகுதியிலும் நாமும், நம் அறிவியலாரும் அறியாத ஏதோ ஒரு பொருள் இருக்க வேண்டும். (அதை இன்று அறிவியல்dark matter என்ற பெயரில் ஒத்துக் கொள்கிறது.) உடுக்கையின் ஓங்கார ஒலி அவற்றின் வழியே ஊடுருவி பல நிலைகளிலும் படைப்புக்கு உறுதுணை ஆகிறது என்பதே உடுக்கை ஒலி காட்டும் ஞானம்.

இந்த ஒலி நம் காதுக்குக் கேட்க வேண்டும் என்பதில்லை. அதைக்கேட்க வேண்டுமானால், அந்த மூலாதாரத்தை நோக்கி பக்தியோ, முக்தியோ, சித்தியோ, வித்தையோ (32 வித்தைகள் பற்றிய குறிப்புகள் வெவ்வேறு உபநிஷத்துக்களில் காணப்படுகின்றன.)— ஏதோ ஒரு வழியில் நாம் பயணிக்க வேண்டும்.

அப்படிப் பயணிக்கவில்லை என்றாலும், அந்த ஒலி அலைகள் அடைந்த பரிணாம வகைகளை இன்று நாசா (NASA) விஞ்ஞானியர் செவிமடுத்து, பேச்சிழந்து நிற்கின்றனர்.

சமீபத்திய ஆராய்ச்சிகளின் மூலம் நம் சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் ‘பேசி’க் கொள்வதை செவிமடுத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட அலை வரிசையில் கிரகங்கள் ரேடியோ அலைகளை வெளிவிடுகின்றன. இவற்றைக் காதால் கேட்கும் வண்ணம் ஒலி அலைகளாக மாற்ற முடியும். அப்படிச் செய்த போது, இந்த ஓசையை ஓர் இசையாக இந்த கிரகங்கள் வெளிப்படுத்துகின்றன என்று தெரிய வந்துள்ளது. அப்படிக் கேட்ட ஒலியில், சனிக் கிரகத்தின் ஒலி பிரமிக்கத்தக்கதாக உள்ளது. அதை இங்கே கேட்கலாம்.


நாதப் பிரம்மம்

இசை என்று சொல்லும்பொழுது, நாதப் பிரம்மம் என்பது நினைவுக்கு வருகிறது. நாதமே பிரம்மம் என்றால், நான்முகப் பிரம்மன் வெளிப்பட்ட இடமான, தோன்றும் பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் ஓங்காரம் எழும்பிய போது, நாதமும் வெளிப்படிருக்க வேண்டும் அல்லது நாதமாக வெளிப்பட்டிருக்க வேண்டும் என்றாகிறது. இதை விஞ்ஞானம் இன்னும் அறியவில்லை.

இந்த நாதப் பிரம்மம் ஏழு ஸ்வரங்களாக உள்ளது. இவை சாம வேதத்தின் ஆதார ஸ்வரங்கள். எண் வடிவிலும் இவற்றைக் குறிப்பர். அவை தரும் வெவ்வேறு ராகத்தில் கடவுளை அடையும் அலை வரிசை உண்டாகிறது. சாம கானத்தில் இறைவன் இறங்கி வருதல் அதனால் சாத்தியமாகிறது.

தோன்றும் பிரபஞ்சத்தில் அணுக்கள் பயணித்தபோது அவை ஓங்காரத்தையும், நாதத்தையும் சுமந்து கொண்டோ, அல்லது அவற்றால் செலுத்தப்பட்டோ இன்னும் இயக்கத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அறிவியலாருக்கு எட்டியுள்ள Doppler Effect அவற்றுக்கிடையே இருக்கும் ஒருவித பேச்சு அல்லது நாதம் என்று கொள்ளலாம். அவற்றுக்கு அலைவரிசையும், நிறமும், வடிவும் இருக்கிறது என்பதை இன்றைய அறிவியல் மூலமே தெரிந்து கொள்கிறோம்.

இந்த அணுக்களும், அவை கொண்ட பொருள்கள் அனைத்தும் தத்தமக்கென்று பரிபாஷையைக் கொண்டிருக்கும் என்பது சாத்தியமென்று தெரிகிறது. நம்முடைய பிரதேசம் என்று பார்க்கையில் சில விஷயங்கள் முன்னோரால் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, சாயாக் கிரகங்கள் எனப்படும். ராகு, கேது நீங்கலாக மீதி ஏழு கிரகங்களும் இந்த ஏழு ஸ்வரங்களையும் கொண்டவை என்பதே. அவற்றுக்கு நிறமும் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் உருவாக்கினார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் அடிப்படை என்று ஏதோஒன்று உள்ளது என்று தெரியப்படுத்தும் வண்ணம், சில விஷயங்கள் நம் சிற்றறிவுக்குத் தென்படுகிறது.

நிறம் என்று பார்க்கையில், ஆதார நிறங்கள் பச்சை, சிவப்பு, நீலம் ஆகியவை. கிரகங்களில் இவை முறையே, புதன், செவ்வாய், சனி ஆகும்.

இப்பொழுதுதான் அதிசய ஒற்றுமை வருகிறது. இவற்றின் ஸ்வரங்கள்:

புதன் – ஸ
செவ்வாய் – ரி
சனி – ப

தமிழ்ப் பண்ணில் (ஆய்ச்சியர் குரவையில் காணலாம்) இவை முறையே குரல் (கிருஷ்ணா), துத்தம் (நப்பின்னை), இளி (பலராமன்) ஆவர்! இவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் பல வித இசை எழுந்துள்ளன.

இவற்றின் தெய்வங்கள் யார் என்றால் (இவை நக்ஷத்திர சூக்தம் என்று யஜுர் வேதத்தில் உளளன.)

புதன் – ஸ – த்ரிவிக்ரமன் (வாமனன்)செவ்வாய் – ரி – பூமி
சனி – ப – பிரஜாபதி
 (இவரிடமிருந்து உயிர்கள் உற்பத்தியாகின்றன.)

இவை மூன்றும் படைக்கப்படும் ஆதாரமான விஷயங்கள் மற்றும் அவற்றின் காப்பாக மூவுலகமும் அளப்பவன் (த்ரிவிக்ரமன்). சுருக்கெழுத்துப் போல ஆதாரமான அலைவரிசையிலும், நிறத்திலும், அக்ஷரத்திலும் இவை உள்ளன. ஆரம்பத்தில் இவை ஓங்காரத்தில் கிளம்பி, பிரபஞ்சம் விரிய விரிய இவையும் எளிய பகுப்புகளாக உருமாறி, யாருக்காக இந்த படைத்தலைச் செய்தானோ, அந்த ஜீவர்களாகிய நாம் வாழ வகை செய்துள்ள பாங்கே இவை எல்லாம்.

இதில் இன்னொரு அதிசயமும் உள்ளது.

புதனைக் குறிக்கும் கடவுள் மால் என்னும் மாயோன். மால் என்றால் மயக்குபவன் என்பது பொருள். செவ்வாயைக் குறிக்கும் கடவுள் சேயோன் எனப்படும் மால் மருகன் ஆன முருகன்மருகன் என்றால் மரபில் வந்தவன் என்று பொருள். மாலின் மரபில், அதாவது வழியில் தானும் மயக்குபவன் என்று அர்த்தம். இவர்கள் இருவருமே, சாதாரண மக்களை எளிதில் மயக்கித் தம் பக்கம் திருப்புகின்றனர். அப்படியும் மயங்காதர்களை சனீஸ்வரன் மாற்றுகின்றான்.



கிரகங்களுக்குள்ளே, சனிக்குத்தான் சனீஸ்வரன் என்று ஈசன் பட்டம் உண்டு. கிரகங்கள் எல்லாம் மக்களுக்கு நல்லது தரவென்று இறைவனிடம் தத்தமக்கென்று வரம் பெற்ற போது, சனி மட்டும் மக்களுக்குத் துன்பம் தருபவனாக தான் இருக்க வேண்டும் என்று கேட்டாராம். ஏன் அப்படி என்று கேட்டதற்கு, துன்பம் வரும் பொழுதுதான் மக்கள் இறைவனை நினைப்பர். அதனால் சர்வேச்வரனான உன்னை நினைத்துக்கொண்டே இருக்க, நான் அவர்களுக்கு அடுத்தடுத்துத் துன்பம் தரவேண்டும் என்று சொன்னாராம். தன் பெயர் கெட்டாலும் பரவாயில்லை, மக்கள் இறை பக்தியைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் சனிக் கிரகம் கேட்கவே, அவருக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம், சனீஸ்வரன் என்று ஈஸ்வரப் பட்டத்தையும் சேர்த்து அழைக்கும்படி இறைவன் செய்தாராம்.

இதிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், படைப்பின் கடைசிக் கட்டம் வரை அந்தப் பரம் பொருளை அடைய வேண்டுவதற்கான சாத்தியக் கூறுகளை இறைவன் அமைத்துள்ளான்.

கொப்பூழ் தாமரை

படைப்பின் துவக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள மற்றொரு வர்ணனை, திருமாலின் நாபியிலிருந்து எழுந்த தாமரையில் நான்முகப் பிரம்மன் அமர்ந்து உலகத்தைப் படைத்தான் என்பது. இங்கே ஓங்காரம் வரவில்லையே, இந்த வர்ணனையும், உடுக்கை ஒலி வர்ணனையும் ஒத்துப் போகவில்லையே என்று கேட்கலாம்.


இங்கேயும் ஓங்காரம் இருக்கிறது. திருமாலின் கொப்பூழில் மலர்ந்த தாமரை, லக்ஷ்மியின் வடிவம். திருமாலின் இதயம் என்னும் தாமரையில் குடி கொண்டுள்ள லக்ஷ்மியே, தோன்றும் உலகில் தாமரையில் எழுந்தருளுகிறாள். படைப்புக் காலத்தில் கொப்பூழில் மலர்ந்த தாமரை, திருமாலின் அங்கமே. அந்த லக்ஷ்மியைப் பாடும் ஸ்ரீ சூக்தம் என்னும் ரிக் வேதப் பாடல் அவளை எல்லாப் பொருளிலும் உறைபவள் என ‘ஈச்வரீம் சர்வ பூதானாம்’ என்கிறது. அவளை அடைபவர் கேட்கும் ஒலி யானையின் பிளிறல் ஒலி. யானையின் பிளிறல் ஓங்காரமாகும். யானையும் ஓங்கார ஒலியால் அவள் துதிக்கப்படுகிறாள் என்று இந்தப் பாடல் கூறுகிறது. அவள் இருக்கும் இடத்தில் என்றும் ஓங்காரம் கேட்டுக் கொண்டிருக்கும்.

இயக்கத்தைச் செலுத்திக் கொண்டிருப்பவர் நடராஜர் என்றால், படைப்புக்குள் நிழைந்து கொண்டிருக்கும் அண்டங்களுக்கு சுபிட்சத்தை வழங்கிக் கொண்டிருப்பவள் கொப்பூழ் தாமரையான லக்ஷ்மி.



உடுக்கை ஒலி கிளம்பிய அதே மூலத்தில் நான்முகப் பிரமம்னும் ஓங்காரத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார். வேதத்தை நினைவுக்குக் கொண்டுவந்து அதை வெளிப்படுத்துவது படைப்பின் அந்த மூலத்தில்தான். இந்த மூன்று கடவுளர்களது ஆதார ரூபத்தை ஒருங்கே வணங்கியவர் முற்காலத் தமிழர்.



மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூ’ போல இருந்தது மதுரை மாநகர் என்னும் பரிபாடல் இதைப் பறைசாற்றுகிறது. மதுரையை ஆண்டவன் சோம சேகரக் கடவுளை வணங்கிய பாண்டியன். அவன் ஆண்ட நாடு மாயோன் அளித்த தாமரை போன்றது. (இன்றும் மதுரை நகரம் தாமரை வடிவில்தான் இருக்கிறது). அதனால் சுபிட்சம் பெருகியது. அங்கே ‘பூவினுட் பிறந்தோன் நாவினில் பிறந்த’ – அதாவது பூவில் தோன்றிய நான்முகப் பிரமனது நாவில் தோன்றிய வேத ஒலியைக் கேட்டுத்தான் மதுரை மன்னனும், மக்களும் துயில் எழுவர் (கோயிலில் விடிகாலை வேத முழக்கம் நடந்தது என்று பொருள்).

ஆனால் மற்ற இரு மன்னர்களது தலை நகரங்களான வஞ்சியிலும், உறையூரிலும் கோழி கூவுவதைக் கேட்டுத்தான் துயில் எழுவர் என்கிறது இப்பாடல். சங்க காலத் தமிழர் மும்மூர்த்திகளையும் ஒருங்கே போற்றினர் என்பதற்கு இது ஒரு சான்று. சமயச் சண்டை உருவாகாத காலம் அது.

ஓங்கார ஒலியில் ஆரம்பித்த படைப்பு, மேற்கொண்டு சென்ற விதத்தை இந்தப் பிரபஞ்சவியல் எவ்வாறு விளக்குகிறது என்பதை அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்…)