Thursday, December 28, 2017

Vedic concept of Path of the Universe (Tamil) - Part 4

பிற கட்டுரைள் : 
Part 1:அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்
Part 2: வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்
Part 3: பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்
Part 5: பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்

பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்


கொப்பூழ் தாமரையில் அமர்ந்த நான்முகப் பிரம்மன் படைத்தலைத் தொடங்குகிறார். இந்தத் தொடக்கத்திலேயே இரண்டு விஷயங்கள் முடிவாகி விடுகின்றன. ஒன்று, ஆரம்பம் முதல் முடிவு வரை என்னென்ன, எப்படி எப்படி இருக்க வேண்டும் என்கிற ப்ரோக்ராம். மற்றொன்று, எவ்வளவு காலம் இந்த ப்ரோக்ராம் நீடிக்க வேண்டும் என்பது.

ப்ரோக்ராமை அமைத்துக் கொடுப்பது வேத அறிவு. இது அழியாத விஞ்ஞான விதிகள் கொண்ட அறிவு. எவ்வளவு முறை இந்தப் பிரபஞ்சம் அழிந்து, மீண்டும் தோன்றினாலும், இந்த அறிவைக் கொண்டு மீண்டும் மீண்டும் ப்ரோக்ராம் அமைத்துக் கொள்ளலாம். அந்த அறிவை, படைப்பின் ஆரம்ப கட்டத்தில், நாராயணன் தன் கொப்பூழில் தோன்றிய பிரம்மனுக்கு உபதேசம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. பிறகு எப்பொழுதெல்லாம் உலகங்கள் அழிந்து, மீண்டும் பிறப்பிக்கப்பட வேண்டுமோ, அப்பொழுதெல்லாம் இந்த அறிவை நான்முகப் பிரம்மன் நினைவுக்குக் கொண்டு வந்து படைத்து விடுகிறார். இந்தக் காரணத்தினாலேயே, வேத மத அறிவை, நாமும் ஓரளவேனும் புரிந்து கொண்டால், நாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே, ஆரம்பம் முதல் முடிவு வரை சொல்லிவிட முடியும்.

மற்றொரு விஷயம், எவ்வளவு காலம் இந்தப் பிரபஞ்சம் ஓடிக் கொண்டிருக்க முடியும் என்பது. பிரபஞ்சங்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் ஒவ்வொரு பிரபஞ்சமும், நான்முகப் பிரம்மனின் ஆயுள் வரைதான் ‘தோன்றும்’ (manifest) பிரபஞ்சமாக இருக்க முடியும். நான்முகப் பிரம்மனின் ஆயுள் முடியும்போது, அவர் படைத்து வரும் பிரபஞ்சத்தின் ஆயுளும் முடிந்து விடும். நான்முகப் பிரம்மனின் ஆயுள் முதலிலேயே முடிவாகி விடுகிறது. அது நூறு வருடம்.

ஆயுள் காலம் நூறு

தோற்றத்தின் போதே பிரம்மனின் ஆயுள் முடிவாகி விடுகிறது என்பதால் இந்தப் பிரபஞ்சம் தோன்றும்பொழுதே எப்பொழுது முடிந்துவிடும் என்பதும் முடிவு செய்யப்பட்டு விடுகிறது என்று புலனாகிறது. இதெல்லாம் அறிவுக்கு உகந்ததல்ல என்று தள்ளி விடுவதற்கு முன்னால், இன்றைய விஞ்ஞானம் இதுவே மனிதனுக்கும் பொருந்தும் என்ற சாத்தியகூறைக் காட்டும் மரபணுவை அறிந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

சாலமன் மீன்களும், தேனீக்களும் தங்களது அடுத்த தலைமுறையை உருவாக்கியவுடன் இறந்து விடுகின்றன. இதற்குக் காரணம் ஒரு மரபணு. எப்பொழுது இறப்பு நேரிடும் என்ற செய்தி இந்த மரபணுவில் உள்ளது. இந்த மரபணு வேலை ஆரம்பித்தால், இறக்கும் நேரம் வந்து விட்டது என்று பொருள். இப்படி ஒரு செய்தியைத் தாங்கியுள்ள மரபணு ஒன்று நம் உடலிலும் இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பிட்ட கால அளவே வாழவேண்டும் என்னும் Apoptosis அல்லது Programmed cell death என்ற ஒரு விஷயம் செல்களுக்கு உண்டு. அதன் விவரம் நம் உடலில் மரபணுவுக்குள் ஒளிந்துள்ளது. கருவில் இருக்கும்போதும், வெளியில் நடமாடும்போதும், அவ்வப்பொழுது இதற்கு வேலை உண்டு. இந்த மரபணுவுக்கு மனிதனின் இறப்பை நிர்ணயிப்பதிலும் வேலை இருக்கிறதா என்ற ஆய்வு நடந்து கொண்டிருக்கின்றது. கருவிலேயே மரபணுவில் ஆயுள் நிர்ணயம் செய்யப்படுவது சாத்தியமானதுதான் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மரபணு கொண்டுள்ள செய்தியை நம்மால் மாற்ற முடிந்தால் இறப்பை வெல்ல முடியும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள்.

இமயமலைக் குகைகளில் இன்றும் கூட சிலர் முன்னூறு, நானூறு வருடங்கள் வாழ்ந்து கொண்டிருகிறார்கள் என்று சொல்கிறார்கள். சித்தர்கள் பலரும் பல நூறு, ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. சித்தர்கள் என்றாலே சித்தி அடைந்தவர்கள்; அதாவது நினைத்தது கைகூடப் பட்டவர்கள் என்று பொருள். அவர்கள் பெற்ற சித்தி வல்லமையால் பௌதிகமான மரபணுவை மாற்ற முடிந்திருக்கிறது.

பல நூற்றாண்டுகள் அவர்கள் உடலுடன் வாழ்ந்திருந்தாலும், பிரம்மனின் ஆயுளைத் தாண்டி யாரும் வாழ முடியாது. ஆயுள் முடிந்தவுடன், ‘ஆட்டம் க்ளோஸ்’ என்று அவரும் புறப்பட்டு விடுவார். முக்தியும் சித்தியும் அடைந்தவர்களும் அவருடன் இந்தச் சக்கரத்தை விட்டே நீங்கி விடுவார்கள். அதற்கப்புறம், பரம்பொருளுடன் ஐக்கிய நிலைதான்.

நான்முகப் பிரம்மன் ஆயுள் நூறு என்பதால், நூறு என்னும் ஆயுள் கணக்கு மனிதனுக்கும் விசேஷமாகிறது.  பிரம்மனின் நூறு வயதை ஒட்டியே, வேத நூல் பிராயம் நூறு என்கிறார்கள். இதை ஒட்டியே நூறு ஆண்டுகள் வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனர். நூறு வருடங்கள் ஜீவிக்க வேண்டும், நூறு வருடங்கள் சூரியனைப் பார்க்க வேண்டும், நூறு வருடங்கள் புகழும், மகிழ்ச்சியும் பொங்க வாழ வேண்டும் என்று மந்திரங்கள் உள்ளன. ராம தூதனாக வந்த அனுமனைப் பார்த்ததும் சீதைஇவ்வாறு கூறுகிறாள் – “ஒருவன் பிழைத்து மாத்திரம் இருந்தால், நூறு வருடங்களுக்குப் பிறகாவது சந்தோஷத்தை அனுபவிக்காமல் இருக்கமாட்டான் என்னும் உலக வழக்கு என் விஷயத்தில் உண்மை ஆயிற்று,” என்று நூறு வருஷம் பிழைத்திருப்பது பற்றிக் கூறுகிறாள். (வால்மீகி ராமாயணம்- 5-34-6)

இங்கு ஒரு கேள்வி வருகிறது. ராமர் 11,000 வருடங்கள் வாழ்ந்ததாக வால்மீகி கூறுகிறார். தசரதன் போன்றோரும் பதினாயிரம் ஆண்டுகள், அறுபதனாயிரம் ஆண்டுகள் என்று ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்ந்தனர் என்று சொல்லியிருக்கிறார்களே. இவையெல்லாம் எப்படிச் சாத்தியமாகும்? ஆகாது. எனவே இவை கட்டுக்கதைகள் என்று எண்ணத் தோன்றும்.

ஆனால் சீதை கூறியிருப்பதைப் பாருங்கள். மனிதனின் உடல் தாக்குப் பிடிக்கும்படியான நூறு வயது வாழ்க்கைதான் உலக வழக்கில் அன்றும் இருந்திருக்கின்றது என்பது அவள் கூறுவதிலிருந்து தெரிகிறது. அப்படியிருக்க ஆயிரக்கணக்கான வருடங்கள் என்று கூறியது கற்பனையா?

இல்லை. அற்புதமான இந்த வேத மதத்தில், பல ட்ரில்லியன் வருஷங்கள் ஓடும் ‘தோன்றும்’ பிரபஞ்சத்தில், பலவிதக் கணக்கு வழக்குகள் இருக்கின்றன. அதில் ஒன்று ராம ராஜ்ஜியம் சொல்லப்பட்ட வருடக் கணக்காகும். இந்தக் கணக்கின் அடிப்படையில் நூறு வருட மனித ஆயுளில், ஆயிரக்கணக்கான வருடங்கள் எப்படி சொல்லப்படுகிறது என்று விளக்கலாம். அதைப் பிறகு பார்ப்போம். வேறு சில அடிப்படைகளைத் தெரிந்து கொண்டால் அதை விளக்குவது சுலபம். அதனால் அடிப்படைகளிலிருந்து ஆரம்பிப்போம்.

அடிப்படைப் பரிமாணக் கூறுகள்

நாராயணனின் கொப்பூழில் தோன்றிய பிரம்மன் படைப்பை ஆரம்பிக்கிறார். வேத அறிவின்படி, தன் தியானத்தில் உற்பத்தி செய்த படைப்பு, எல்லாத் திசைகளிலும் சரியானபடி சென்று கொண்டிருக்கிறதா என்று சரிபார்க்க நான்கு திசைகளிலும் பார்க்கிறார். இதைக் காட்டவே அவருக்கு நான்கு பக்கங்களிலும் முகங்கள் உள்ளனவாக சித்தரிக்கப்படுகிறது. எல்லாம் திருப்தியாகச் சென்று கொண்டிருக்கிறது என்று மீண்டும் தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார். 


இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், திசைகள். விண்வெளியில் திசைகள் எப்படி இருக்கும்? சூரியனை முன்னிட்டு, பூமியில் திசைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆகாயத்தில் போனால் திசை ஏது என்ற கேள்வி வருகிறது.

ஆகாயத்திலும் திசை இருக்கிறது. எப்படி என்று பார்ப்போம்.

கால, தேச (இட), பரிமாணம் என்பதை மட்டுமே இன்றைய விஞ்ஞானம் அறிந்துள்ளது. வேத மதப் பிரபஞ்சவியலில் இது முக்கூட்டுப் பரிமாணமாக உள்ளது. அது திக்கு, தேச, காலம், பரிமாணம் எனப்படும். இதை ‘த்ரிப்ரச்னாதிகாரம்’ என்பர். திக்கு இல்லாமல் தேசம் அதாவது இடம் கிடையாது. இடம் என்றால் அதற்கு ஒரு திக்கு இருக்கும். இடம் என்றால் கூடவே காலப் பரிமாணமும் வந்து விடும். இவை மூன்றும் ஒன்றுக்கொன்று இயைந்தவை.

திக்கு என்றால் நாம் திசை என்று பொருள் கொண்டு விடுகிறோம். திக்கு என்பது அதற்கும் அப்பாற்பட்டது. ஒருவன் வழி தெரியாமல் தவித்தால், எப்படி, எங்கு போவது என்று தெரியாமல் விழித்தால் அவனை ‘திக்கற்றவன்’ என்கிறோம்; ‘திக்கற்று நிற்கிறான்’ என்கிறோம். ஆகவே திக்கு என்பது வழி அல்லது செல்ல வேண்டிய பாதை என்பதாகும். பாதை வகுக்காமல் பயணத்தை எப்படி பிரம்மன் தொடங்க முடியும்?

இந்தத் திக்கை இன்றைய அறிவியலார் யோசிக்கவில்லை. ஒளிக்கீற்று தேச-காலப் பரிமாணத்தில் வளைந்து செல்கிறது. அந்த வளைவு அதன் பாதை- அதன் Direction– அதை திக்கு எனலாம். ஈர்ப்பு விசை உள்ள ஓர் இடத்தை நெருங்கும் ஒளிக்கீற்று பாதையை மாற்றிக்கொள்கிறது. திக்கு, தேச, காலம் இவை ஈர்ப்பு விசையால் மாறுபாடு அடையக்கூடியவை என்னும் அடிப்படை விதியில் வேதம் கூறும் பிரபஞ்சவியல் அமைந்துள்ளது.

இதை ஒட்டியது பிரபஞ்சங்களின் அமைப்பும் சுழற்சியும். பல பிரபஞ்சங்கள் (Multiverses) இருப்பதை இன்றைய அறிவியலார் ஒத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அவை எப்படிப் பயணிக்கின்றன என்பதைக் கற்பனையாகத் தான் சொல்லியுள்ளனர். ஒவ்வொரு பிரபஞ்சமும் ஒரு குமிழியாக உப்பிக்கொண்டே போகின்றன என்பது அவர்களது சமீபத்தியக் கருத்து. குமிழியாக ஆக்கும் மூல காரணம் எப்படியிருக்கும்? தெரியாது. குமிழி எத்தனை காலம் உப்பிக் கொண்டே போகும்? ஒரு நாள் வெடித்துவிடும் அல்லவா? அப்பொழுது என்ன ஆகும்? அவர்களிடம் விடை கிடையாது. அந்தக் குமிழிகள் போகும் வழிப்பாதை என்ன? விடை இல்லை.

வேதம் கூறும் பிரபஞ்சவியலில் விடை இருக்கிறது. மேல்சொன்ன இரண்டு விஷயங்களையும் (திக், தேச, காலம், மைய ஈர்ப்பு விசை + பிரபஞ்சங்கள்) ஒன்றே இணைக்கிறது இந்தப் பிரபஞ்சவியல்.
சக்கரத்தில் பயணிக்கும் பிரபஞ்சத்தில் திக்கு இருக்கிறது.

முன்பு நடராஜர் ரூபத்தில் காட்டிய சக்கரத்தில் எண்ணிலடங்கா பிரபஞ்சங்கள் சுழலுகின்றன என்று பார்த்தோம். இந்த அமைப்பை குயவனின் பானை வனையும் சக்கரத்திற்கு ஒப்பிடலாம்.

அந்தச் சக்கரத்தின் நடுவில் ஓர் அச்சு உண்டு. அதை ஆதாரமாகக் கொண்டு சக்கரம் சுழலும். குயவனின் சக்கரத்தில் எண்ணிலடங்கா வட்டங்களை இணைத்துக் கொள்ளுங்கள். சக்கரத்தின் ஒவ்வொரு வட்டமும் ஒவ்வொரு பிரபஞ்சம் செல்லும் பாதை. அதில் ஒரு வட்டத்தில் நம் பிரபஞ்சம் இருக்கிறது என்று கொள்வோம். இந்தச் சக்கரத்தில் பல வட்டங்கள், முன்னும் பின்னும், மேலும் கீழும் என்று கணக்கில் அடங்காமல் இருக்கும் அமைப்பே பல பிரபஞ்சங்களின் அமைப்பாகும்.


குயவன் சுழற்றி விடுவது போல, இந்தச் சக்கரம் அச்சான இறைவனால் எந்நேரமும் சுழற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதைத்தான் அவன் எந்நேரமும் கர்மம் செய்து கொண்டே இருக்கிறேன் என்று கீதையில் கூறுகிறான். இந்த அச்சான ஆதாரம்தான் ஈர்ப்பு மையம். சுழலும் வட்டங்களில் நாமிருக்கும் பிரபஞ்சங்களும் பயணிக்கின்றன.

இங்கே ஒரு செய்தி மறைந்திருக்கின்றது. பிரபஞ்சங்கள் பயணிப்பது வட்டத்தில். அப்படியென்றால், பிரபஞ்சங்கள் அந்தரத்தில் பயணிக்கவில்லை. ஓர் ஆதாரத்தில், அதாவது base ஒன்றில் பயணிக்கின்றன என்றாகிறது. வட்டம் சுழல, அதன் மீது பிரபஞ்சமும் ஓடுகிறது. இந்தக் கருத்தில், இன்றைய அறிவியலாரின் குழப்பம் ஒன்று தீர்கிறது.

Big Bang என்று வெடித்துச் சிதறலினால் அண்டங்கள் உருவாகி சென்று கொண்டேயிருக்கின்றன என்பது பிரசித்தமான கருத்து. வெடிப்பினது வலிமையைப் பொருத்துதான் சிதறலின் ஓட்டமும் இருக்கும். அதன்படி, போகப்போக அண்டங்களின் ஓட்டம் குறைய வேண்டும். அப்படிக் குறையக் காணோம், குறையும் என்ற சாத்தியமும் இருக்கக்காணோம். இதுவே அந்தக் குழப்பம்.

நாம் எடுத்துக்கொண்ட குயவன் சக்கரத்தைப் பார்ப்போம். குயவன் சக்கரச் சுழற்சியில், வட்டம் இடை விடாமல் சுழன்று கொண்டிருக்கிறது. வட்டங்களைச் சுழலச் செய்வது அச்சு. அந்த அச்சு போல் ஆதாரமாக இருக்கும் சக்தியை இறைவன் என்கிறோம். சக்கரத்தின் வேகத்தை நிர்ணயம் செய்வது இறைவன் என்னும் அச்சு. ஆதாரமான அச்சின் (இறைவனின்) இயக்கத்தால் எழும் வேகம், வட்டங்களையும் (base) அவற்றில் பயணிக்கும் அண்டங்களையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போகிறது. சுழலும் அண்டங்களுக்கும் உள்ளிடை சக்தி (charge) இருந்தால், அந்த சக்தியுடன்,  base- ஆக அமைந்த வட்டத்தின் சுழலும் வேகமும் சேர்த்து, இப்பொழுது இருப்பது போல் எப்பொழுதும் ஓடிகொண்டே இருக்கும்.

இதில் தெரியும் இன்னொரு சமாசாரம், வட்டங்கள் திரவத் தன்மை (fluidity) கொண்டதாக இருக்க வேண்டும் என்பது. அதில்தான் இந்த அண்டங்கள் அடித்துச் செல்லப்படுவதைப் போல் அமைய முடியும். இந்த ஆதாரத் திரவத் தன்மை வாயு ரூபத்தில் இருப்பதாக பிரபஞ்சவியல் கூறுகிறது. இந்த வாயு, ஸப்த வாயு என்று ஏழு வாயுக்களாக உள்ளன. அவற்றில் ஐந்து பூமியில் உள்ளன. மீதி இரண்டும் பிரபஞ்சச் சுழற்சியில் உதவுகின்றன.

அவை:
(1) ஆவஹன் :- மேகங்கள் மிதக்க ஆதாரமாக இருப்பது.
(2) ப்ரவஹன் :- உயிர் தரும் பிராணனாக இருப்பது.
(3) உத்வஹன் :- கடல் நீரை ஆவியாக்கி மேகமாக்குவது.
(4) சம்வஹன் :- மேகங்களுக்கு இடையே இருந்து மழை பொழிய ஏதுவாவது
(5) விவஹன் :- சூறாவளி போன்ற வேகக் காற்றில் நிலை பெற்றிருப்பது.
இனி வருபவை உலகிற்கு வெளியே இருப்பவை.
(6) பரிவஹன் :- பால் வெளி என்னும் நாம் இருக்கும் கலக்சிகள் போன்றவை செல்ல ஆதாரமாக இருப்பது.
(7) பராவஹன் :- பிரபஞ்சம் முழுவதையுமே தாங்கிக் கொண்டு செல்லும் ஆதார வாயு இது. உடுக்கையில் ஆரம்பித்த பிரபஞ்சத்தை அக்னி வரை இழுத்துக் கொண்டு செல்கிறது இந்த வாயு. இதில்தான் மொத்தப் பிரபஞ்சமும், அதன் இயக்கமும் நடைபெறுகின்றன.

பராவஹன் சென்று கொண்டிருப்பதால் அதில் பயணிக்கும் பிரபஞ்சங்களும் அது செல்லும் திக்கிலே செல்கின்றன! இது சுழல் பாதை என்று பிரபஞ்சவியல் கூறுகிறது.

எப்படி இது சுழல் பாதை என்பதை இன்றைய அறிவியல் மூலமாகவும் சொல்லலாம். இங்கே வேலை செய்வது Centripetal force போன்ற சக்தி.

இந்தப் படத்தில் உள்ள நபர் போல் இறைவனை அச்சாக உருவகிக்கலாம். நடுவில் நிற்கும் நபர் ஆதாரமான அச்சு போன்றவர். அவரது கையில் தான் சுழற்றுகின்ற வலிமையையும் ஆதாரமும் இருக்கிறது. அவர் கயிற்றைச் சுழற்றும் போது அது வட்டப் பாதையில் சுழல்கிறது. சுழற்றும் கயிற்றின் நுனியில் இருப்பது அண்டங்கள். இந்த அமைப்பை பிரம்மச் சக்கரம் என்றும் அதில் உள்ள ஆரங்கள் (spokes) என்று பலவற்றையும் உபநிடதங்கள் விவரிக்கின்றன.


நடுவில் உள்ள மைய சக்திக்கு செங்குத்தாக உள்ள ஆரங்களில் அண்டங்கள் என்னும் charged particleசெல்லும்போது, பாதை வட்ட வடிவில் அமைகிறது. எனவே இடைவிடாது சுழலும் பிரம்மச் சக்கரத்தில் அண்டங்கள் அந்தச் சுழல் பாதையில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கின்றன.

இங்கேயும் ஒரு கேள்வி வருகிறது. ஆதார அச்சு இறைவன் என்று சுழற்றும் அவன் சக்தியைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் சுழலும் அண்டத்திற்கும் ஓர் உள்ளிடை சக்தி இருக்க வேண்டும். அது எங்கிருந்து வருகிறது?

இதை விளக்க, குழந்தை பிறப்பில் நிகழ்வதை உதாரணமாகக் காட்டலாம்.

சிசேரியன் ஆபரேஷன் மூலமாகக் குழந்தை பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வயிற்றைத் திறந்தாயிற்று. குழந்தை, கர்பப்பை நீரில் இன்னும் மூழ்கி இருக்கிறது. சில நேரங்களில், சிக்கலான பிரசவங்களில் பல நிமிடங்கள் திறக்கப்பட்ட வயிற்றில் குழந்தை இருக்கும். ஆனால் அக்குழந்தை பிறப்பது எப்போது என்று சொல்கிறோம்? சாதாரண பிரசவமானால் தலை தெரிவது, பூமியில் விழுவது, வெளிக் காற்று படுவது, அழுவது என்று பலரும் பல வித பதில்கள் வைத்திருப்பார். முடிவான பதில் என்ன என்று ஆராய்ந்தால், மூச்சு நிற்பது என்பது இறப்பு என்றால் மூச்சு ஆரம்பிப்பது பிறப்பு ஆகும். அந்தக் குழந்தையை வெளியே எடுத்து, அது அழ ஆரம்பித்தவுடன், காற்று நுரையீரலை அடைந்தவுடன் உயிர்க் கணக்கு ஆரம்பிக்கிறது.

இங்கே ஒன்றைப் பார்க்க வேண்டும். அக்குழந்தை வயிற்றைத் திறந்தும் பல நிமிடங்கள் இருந்ததே, அப்பொழுது உயிர் இல்லையா? அப்பொழுதும் அது ஜீவிதத்தில்தானே இருந்தது? ஆம். அதுவரை ஜீவிதத்தைத் தந்தது கொப்பூழ்க் கொடி! படைப்பு ஆரம்பிக்கும் வரை இறைவனின் கொப்பூழில் காப்பாற்றப்பட்ட பிரபஞ்சம் போல், அந்தக் குழந்தையும் தாயின் கொப்பூழ்க் கொடியின் மூலம் ஜீவிதத்தில்தான் இருந்தது. கொப்பூழைவிட்டுப் பிரிந்தவுடன் தோன்றும் பிரபஞ்சம் போல் அதுவும் பிறக்கிறது. அங்கேயும் ஜீவிதத்தை அதுவாக உண்டாக்கிக் கொள்ளவில்லை. வெளியில் இருந்த காற்று (ப்ரவஹன்) கொப்பூழ் தந்த சத்துக்கு ஒரு substitute ஆக ஜீவிதத்தைத் தருகிறது.


பிரபஞ்சப் படைப்பில், கருவறையில் இருக்கும் வரை இறைவன். வெளியில் வந்தவுடன் வாயு தேவன்! இறைவனின் கொப்பூழ் தந்த ஜீவிதத்தைத் தருவதால், காற்றும் ப்ரத்யக்ஷ பிரம்மம் ஆகிறது. காற்றை கண்ணுக்குத் தெரிந்த கடவுள் அல்லது பிரம்மம் என்கிறோம். இதை எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம், பரம்பொருள் திருமாலாகப் பாம்பணையில் படுத்துக்கொண்டு, கொப்பூழ் கொடி வெளிப்பட, அதில் முதல் பிறப்பாக நான்முகப் பிரம்மனைக் காட்டுகிறார். அந்த பிரம்மன் தோன்றும் பிரபஞ்சத்தின் சுவாசம் போன்றவன். தோன்றும் பிரபஞ்சம் அவர் கட்டுப்பாட்டில் வந்து விடுகிறது- மூச்சுக் காற்று நம் ஜீவிதத்தை நடத்துவது போல.

குழந்தையைப் போல, தோன்றும் பிரபஞ்சத்தின் அத்தனை படைப்புகளுமே இப்படி இறைவன் கருவிலும், கருவை விட்டு வெளியே இருக்கும் போது (தோன்றும் பிரபஞ்சத்தில்) அவனது மற்றொரு பிம்பமான பராவஹன் என்னும் வாயுவாலோ, அல்லது நாம் அறியாத ஏதோ ஒரு வஸ்துவினாலோ charged– ஆகப் போய்க் கொண்டிருக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

நாம், நமக்கு என்று எதுவும் இல்லை. இருப்பவை எல்லாம் அவன் உண்டாக்கி (கருவில் இருப்பதுபோல), அவன் உமிழ்ந்து (தோன்றும் பிரபஞ்சத்தில் பிறப்பித்து), அவன் நடத்திச் சென்று, அவனே அதை உள்வாங்கி என்றென்றும் பிரம்மச் சக்கரத்தில்- அந்தப் பிரம்மச் சக்கரம் அமைந்த தன் கர்ப்பத்தில் வைத்திருக்கிறான்.

இதிலிருந்து தெரியும் மற்ற வேத மதக் கருத்துகள்:-
  • அவனன்றி ஓரணுவும் அசையாது. அவன்தான் ஒவ்வொரு அசைவையும் செய்பவன். அவன்தான் பிரபஞ்சச் சக்கரத்தைச் சுழலச் செய்பவன். அதில் அண்டங்களைச் செலுத்துகிறவன. அங்கே நம்மையும் பிறப்பித்து, நம் ஜீவிதத்தையும் நடத்துபவன்.

  • பிறக்கும் முன் அவனில் நாம் நிலை பெற்றிருக்கிறோம். பிறந்த பின்னும், அவன் நம்முள் நிலை பெற்றும் (சுவாசக் காற்றாக), நம்மைச் செலுத்தியும், நமக்கு ஆதாரமான அடித் தளமாகவும் இருக்கிறான். நம்மை அவன் விடுவதில்லை – ஒழிக்க ஒழியாத உறவாக நமக்கும் அவனுக்கும் இருக்கிறது.

  • இந்த உறவை நாம் மறந்து விடலாம். அவன் மறப்பதில்லை. மறப்பது அவன் மரபணுவில் இல்லை எனலாம், அவனுக்கு மரபணு என்பவை இருந்தால்!!

  • நம்மை விடாமல் பிடித்துகொண்டிருப்பது அவன். அதனால நம்மைச் செம்மைப் படுத்தி எப்படியேனும் தன்னிடம் சேர்த்துக் கொண்டு விடுவான்.
மேல்சொன்ன உதாரண விளக்கத்தின் மூலம் தெரியும் மற்றொரு முக்கிய விஷயம் பித்ரு காரியம் ஏன் செய்ய வேண்டும் என்பது. ‘பெற்றோர் இறந்தவுடன் அவர்களுக்கு பித்ரு காரியம் செய்கிறேன் என்றால் அவர்களுக்குத் தெரியவா போகிறது? அது அவர்களை அடையப் போகிறதா என்ன? அதற்குப் பதிலாக அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை நன்றாகக் கவனித்துக் கொண்டால் போதும். இறந்த பிறகு ஸ்ராத்தம் என்று சடங்குகள் செய்யத் தேவையில்லை. அப்படிச் செய்யவில்லை என்றால் அதனால் நம் பிள்ளைகளையும், பேரன்களையும் பாதிக்கும் என்பதெல்லாம் சும்மா புருடா.’– இதுவே இன்றைக்குப் பரவலான கருத்து.

பெற்றவர்கள் உயிருடன் இருக்கும் வரை அவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. இங்கே கொடுக்கல்-வாங்கல் (give and take) என்னும் இயற்கையின் நியதி வருகிறது. அக்னி ஹோத்திரம் ஹோமத்திலும் இந்தக் கொடுக்கல்-வாங்கல் இருப்பதைக் காணலாம். நல்ல காற்றை நாம் எடுத்துக் கொள்கிறோம். அதற்குப் பதிலாக அசுத்தக் காற்றைத் திருப்பித் தருகிறோம். இங்கே இயற்கையின் சமன்பாடு (equilibrium) பாதிப்படைகிறது. திருப்பிக் கொடுத்த காற்றை சுத்தப்படுத்தவில்லை என்றால், நமக்கு மட்டுமல்ல நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் கிடைப்பது அசுத்தக் காற்றுதான். அதைத் தவிர்க்க அக்னி ஹோத்திரம் செய்யப்படுகிறது.

அதைப் போல பெற்றோர் நமக்குச் செய்வதால் நாம் பட்ட கடனை, நாம் திருப்பிக் கொடுக்க வேண்டும். பெற்றோர் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் அவரிடமிருந்து ஒன்றைப் பெற்றால் அதைத் திருப்பித் தர வேண்டும். இல்லை என்றால் நாம் கடன் பட்டவர்களாகி விடுவோம். கடன்பட்ட ஒருவனால், மற்றோருவனுக்குக் கடன் அளிக்க முடியாது. உயிருடன் உலவும் காலத்தில் யாரிடம் கடன் பட்டாலும், அந்தக் கடனைத் திருப்பித் தரவில்லை என்றால், வேறொரு பிறவியிலாவது அந்தக் கடனை அடைத்து விட முடியும்.

இவையெல்லாம் பிறந்தபிறகு – அதாவது வாழும் காலத்தில் நடப்பது.

ஆனால் பிறக்கும் முன் பட்ட கடனுக்கு நாம் எப்பொழுது, எப்படித் திருப்பி அடைக்கிறோம்?

தாய், தந்தையரது செல்களின் ஒடுக்கத்தில் நுழைந்து பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்கிறோமே, அப்பொழுது கடன் படவில்லையா? அவர்களது மரபணு மூலமாக, ஐம்பூதங்களிளிருந்தும், சத்தினை இழுத்து நம் உடலை வளர்க்கிறோமே, அந்த ஐம்பூதங்களுக்கும் கடன் படவில்லையா? இழுக்கும் மூச்சுக் காற்றுக்கே, திருப்பித் தந்தால்தான் நம் வாழ்கை நோயற்று இருக்கும். பலப் பலவிதமான உடல் பகுதிகளுக்காக ஐம்பூதங்களிலிருந்து ஓயாது பத்து மாதங்கள் தேவையானவற்றை தாயின் கொப்பூழ் கொடி மூலமாகப் பெற்றிருக்கிறோமே, அது கடன் இல்லையா? அதை எப்படி, எப்பொழுது திருப்பித் தருகிறோம்?

அங்குதான் வேத மதத்தின் மிக உயர்த்த இயற்கை சமன்பாடு சிந்தனை தெரிகிறது. பிண்டமாக, உதகத்தில் (நீரில்) நிலைபெற்று கர்ப்பத்தில் நாம் பெற்றதை, உதகத்தில் பிண்டத்தை இணைத்து, பிண்டோதகக் கிரியையாக, யார் மூலமாகப் பெற்றோமோ, அவர் மூலமாக, அவர் நாம் பிறக்கும் முன் இருந்த நிலையை ஒத்த நிலையை இறப்பில் அடைந்தவுடன், திருப்பித் தருகிறோம்.

இங்கே கடனைத் திருப்பிச் செலுத்த உதவும் Medium பெற்றோர். கடன் பட்டது இயற்கைக்கு.

உதகத்தில், பிண்டம் வளரக் கடன் வாங்கினோம். பிண்டத்தை உதகத்தில் கரைத்து அதைத் திருப்பிச் செலுத்துகிறோம்.



நம் பெற்றோர், பாட்டன்கள், அவர்தம் பெற்றோர் என்று குறைந்தது மூன்று தலைமுறை வரை மரபணுவை கருவில் கடன் வாங்குகிறோம். அதன் அடிப்படையில் இயற்கையிலிருந்து நமக்குத் தேவையானதை எடுத்துக்கொள்கிறோம். அதைத் திருப்பித் தரவில்லை என்றால், நம்மிடம் உள்ள இருப்பு குறைந்து விடும். குறைந்த இருப்பிலிருந்து நம் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் எந்த அளவு எடுத்துக் கொள்ள முடியும்? சொத்து இருந்தால்தானே அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க முடியும்? கடன் வைத்திருந்தால் கடன் கொடுத்தவன் (இயற்கை) நம் பிள்ளைகளை விடுவானா? அல்லது அவர்கள் கடன் கேட்டால் கொடுப்பானா? இல்லையே! இயற்கை நமக்குத் தருவது நோயற்ற வாழ்வு. நாம் இயற்கைக்குக் கடன் பட்டால், நம் பிள்ளைகளுக்குக் தேவையான கடன் (நோயற்ற வாழ்வு) இயற்கையிலிருந்து கிடைக்காமல் போகும்.

மேலே கூறப்பட்ட சிசேரியன் குழந்தை உதாரணத்தைப் பாருங்கள். வயிற்றைத் திறந்தும், அது ஜீவிதத்தில் இருக்கிறது. அந்த ஜீவிதம் வளர இடம் தந்தது தாய் வயிறு. ஜீவிதம் பெற்றது அவள் கொப்பூழ் கொடி மூலமாக; அது அவள் இயற்கையிலிருந்து பெற்ற உணவு. இன்றைக்குப் பரிசோதனைக் குழாயில் கருவை உண்டாக்கினாலும், கரு வளர வேண்டியது தாயின் கர்ப்பத்தில். அதற்கு மாற்று என்றுமே வர இயலாது.

பெற்றோர் மூலமாக நாம் பஞ்ச பூதங்களுக்கும் பட்ட கடனை, தீவிர சிந்தனையுடன் (ஸ்ரத்தையுடன்) பிண்டம் வைத்து நீர் மூலமாகத் திருப்பித் தருகிறோம்.

பிரபஞ்சங்களை கர்ப்பத்தில் வைத்துள்ள இறைவனை இதே எண்ணத்தில் பாருங்கள். அவனுக்கும் நாம் கடன் படவில்லையா? நம்மை உருவாக்கி, பிறப்பித்து, கர்ம வினையை முடிக்க உதவி, இந்தக் கர்மச் சக்கரத்திலிருந்து விடுபட உதவுகிறானே, அவனுக்கு என்ன திருப்பிச் செய்கிறோம்?

அவன் எதிர்பார்க்க மாட்டான்; எதிர்பார்க்கக் கூடாது என்றெல்லாம் சொல்லலாம். பெற்ற தாயும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. எதிர்பார்ப்பதும் இல்லை. ஆனால் பிள்ளைகளான நமக்குக் கடமை உண்டல்லவா? அவளுக்கு ஏதேனும் செய்து அவளை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்ய வேண்டும்; நாம் செய்வதில் அவள் பெருமை அடைய வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் அல்லவா? அதைத்தான் கடவுளுக்கும் நாம் செய்ய வேண்டும். அவனை உயர்த்திப் பேசுவதில், புதிதாக அவனுக்குப் பெருமை வந்து விடுவதில்லை. அப்படிப் பேசுவது நமக்குத் தான் பெருமை- எப்படிப்பட்ட தாயை நான் அடைந்துள்ளேன் என்று பிள்ளைகள் பெருமிதத்துடன் சொல்வதைப் போல…..

(தொடரும்…)

3 comments:

Vijay said...

போற்றி ஓம் நமசிவாய! அருமையான பதிவு. இது நரனும் ஹரியும் ஒன்று என்பதை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. இது பற்றிய தகவல் இருந்தால் பகிரவும். வாழ்க வளமுடன்!

Aruna said...

Madam, absolutely wonderful article. The explanation on the 'pindam' w.r.t the pitru Maryam is very enlightening. Thank you🙏

Is this available in English? It can be shared with others who can't read Tamil...
Regards

Jayasree Saranathan said...

Thank you. Not yet written in English.