Friday, September 13, 2024

இராமர் வாழ்ந்த யுகம் எது என்று தெரியுமா?

அறிவு என்பது இரண்டு வகைப்பட்டது. சாஸ்த்திரங்களிலிருந்து பெறுவது ஒரு வகை. அவ்வாறு பெற்றதை உள்வாங்கி ஆராய்ந்து புரிந்து கொள்வது இன்னொரு வகை. இவ்வாறு புரிந்து கொண்ட அறிவின் மூலம்தான் சூரியன் இருளை நீக்குவதைப் போல அறியாமையை நீக்கிக் கொள்ள முடியும் என்று விஷ்ணு புராணம் (6-5) கூறுகிறது.

ஆனால் கோனார் நோட்ஸை மனப்பாடம் செய்தது போல ஒப்பிக்கும் அறிஞர்கள் உள்ள இந்த காலக் கட்டத்தில், அதிலும் அவர்களை ஆட்டுவிக்கும் சூத்திரதாரியாக கிரிப்டோ வேடதாரி இருக்கையில் அறிவு எங்கிருந்து, எப்படி வரும்? கோடிகளிலேயே திளைக்கும் கிரிப்டோவுக்கு அடங்கி மூளையையும் அடகு வைத்து விட்ட அறிஞர்களுக்கும், கிரிபட்டோ வேடதாரிக்கும் கொஞ்சம் யுகம் பற்றிய அறிவைப் புகட்டும் பதிவு இது.
யுகம் என்றால் என்ன?
யுக்மா என்னும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து யுகம் என்னும் சொல் வந்தது.
யுக்மா என்றால் இரட்டை (twin) அல்லது ஜோடி (pair) என்று பொருள்.
அது மட்டுமல்ல, பேரூழி (eon) என்பதையும் யுகம் என்பார்கள்.
இவற்றுள் பேரூழியைக் கணிக்கும் யுகக் கணக்கையே, இராமர் வாழ்ந்த காலத்துக்குச் சொல்வது கிரிப்டோவுக்கு
சௌகரியமான ஒன்று, இராமர் வாழ்ந்ததே கற்பனை என்று சொல்லிவிடலாமே. இந்த அழகில் சயின்ஸ் கூடாது என்று சொல்லிக் கொண்டே, லட்சக் கணக்கான, இல்லை இல்லை, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று இந்த யுகக் கணக்கை எடுப்பவர்கள், அது சயன்ஸ்ஸில் தான் வருகிறது என்பதை அறிந்திருக்கவில்லை.
ஆமாம். பேரூழியான யுகக் கணக்கு, கணிதம், கோளம் சார்ந்த ஜோதிட சித்தாந்தத்தில் வருவது. இதை ஆங்கிலத்தில் astronomy என்பார்கள். அது முழுவதும் கணக்கு. அதிலும் நவ கிரகங்களின் சாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவது.

பேரூழி என்னும் யுகம்
இராகு கிரகம் தவிர்த்து, மீதி 8 கிரகங்கள் ஒரு முறை மேஷ இராசியின் ஆரம்பத்தில் சந்தித்தால், மீண்டும் அதே புள்ளியில் இணைய 4,32,000 வருடங்கள் ஆகும். இது ஒரு பங்கு. ஒன்று என்பதற்குக் ' கலி என்று பெயர்.
அதன் இரண்டு மடங்கு (8, 64,000) துவாபரம் என்று பெயர். அதற்கு இரண்டு என்று அர்த்தம்.
அதன் மூன்று மடங்கு (12,96,000) திரேதா எனப்படும். திரேதா என்றால் மூன்று என்று பொருள்.
அதன் நான்கு மடங்கு (17, 28,000) கிருதம் எனப்படும். கிருதம் என்றால் நான்கு என்று பொருள்.
இவை வெறும் எண்கள்தான். இந்த எண்களைத்தான் மகாபாரதத்தில் அக்ஷ விளையாட்டு (சூதாட்டம் என்று மகாபாரதம் சொல்லவில்லை) அல்லது பாசக விளையாட்டு என்று சகுனியும், தரும புத்திரரும் விளையாடும் போது, கிருதமா, திரேதாவா, துவாபரமா, கலியா என்று கேட்டு விபீதகம் என்னும் அஷ காய்களை உருட்டுவார்கள். நாம் சிறு வயதில், ஒற்றையா, இரட்டையா, பரட்டையா என்று புளியங் கொட்டையை
வைத்து விளையாடுவோமே, அது போல.
நம் அறிஞர்கள் கோனார் நோட்சை தாண்டி படிக்கணும். கலி, துவாபரம் என்ற கணக்குதான் மேலே சொன்ன யுகக் கணக்கு. இந்த கணக்கு பிரம்மனுடைய நாள் எனப்படும் கல்பம், அவரது ஆயுசான 100 வயது ஆகியவற்றைக் கணிக்கப் பயன் படுவது. ஜோதிட சித்தாந்தங்களில் விவரிக்கப்படும் இது, ஆன்மீகத்திலும், மனிதனது வாழ்க்கையை கணிக்கவும் கொடுக்கப்படவில்லை. இது படைப்புக் கடவுளான பிரம்மன் ஆயுளை அளக்கப் பயன்படுவது.
இது ஶ்ரீமத் பாகவதம் 12- 4 இல் விளக்கப்படுகிறது. இதைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே
சதுர் யுக சஹஸ்ரம் து
பிரஹ்ம்மனோ தினம் உச்யதே (12-4-2)
என்று ஆயிரக் கணக்கான ஆண்டுகள் கொண்ட சதுர் யுகம் பிரம்மனுடைய தினத்தைக் குறிப்பது என்பர், என்கிறது.
அப்படியென்றால், இதை நம்முடைய காலத்தை அளக்க, கலி யுகம் 5126 என்று நாம் பயன் படுத்துகிறோமே என்று கேட்டால், நாம் தான் கோனார் நோட்ஸ் நெட்ரு போடுகிறவர்களாயிற்றே, அறிவு, சிந்தனை என்பதெல்லாம் நமக்குக் கிடையாதே. அதனால் வேத வியாசரும், அன்றைய பூர்வ ரிஷிகளும் ஒரேடியாக 4,32,000 ஆண்டுகளை ஆறு சாகைகள் என்று பிரித்து கொடுத்து விட்டார்கள். அதன் படி இப்பொழுது மூன்றாவது சாகையான சாலிவாஹன சகத்தில் நாம் இருக்கிறோம்.
ஆர்யபட்டர் கொடுத்துள்ள இப்படிப்பட்ட கணிதம் சார்ந்த யுகக் கணக்கை, கீழே பார்க்கவும்.



நான்கு யுகங்கள் சேர்ந்த சதுர் மஹா யுகம் (43,20,000) மேஷ இராசியின் துவக்கத்தில் ஆரம்பிக்கும் என்று எழுதியுள்ளார். அதாவது, கிருத யுகம் மேஷத்தில் ஆரம்பிக்கும்.
இது ஒரு வகை யுகம். இது இரட்டை அல்ல என்பதைக் கவனிக்கவும்.

தர்ம யுகம்
இன்னொரு வகை இருக்கிறது. அது தர்மம், அதர்மம் என்ற இரட்டையைக் கொண்டது. எப்படி இரண்டு மாடுகள் வண்டியை இழுக்கின்றனவோ அவ்வாறே தர்மமும், அதர்மமும் மனிதனுடைய காலத்தை இழுக்கின்றன.
இந்த விவரங்களை, ஶ்ரீமத் பாகவதம் 12-2 இல் பூமி கீதம் என்னும் பகுதியில் காணலாம். நன்றாகக் கவனியுங்கள். 2 ஆவது அத்தியாயத்தில் தர்மம் சார்ந்த யுகமாகவும், 4- ஆவது அத்தியாயத்தில் பிரம்மனின் தினத்தைச் சொல்லும் ஆயிரக் கணக்கான வருடங்களைக் கொண்ட யுகமாகவும் ஶ்ரீமத் பாகவதம் வேறு படுத்திக் காட்டியுள்ளதைக் கவனிக்கவும். இரண்டும் ஒன்றல்ல. பிரம்மனுக்குச் சொல்லப்பட்டதை பூமி கீதம் அத்தியாயத்தில் சொல்லவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இனி இந்த 2- ஆவது அத்தியாயத்தில் சொல்லப்பட்ட விவரத்தைக் காண்போம்.
பல மன்னர்களால் ஆளப்படும் இந்த பூமியில், சதுஷ் பாதத்தில் தர்மம் நிற்கும் போது, அது
கிருத யுகம்.
மூன்று பாதத்தில் தர்மம் நிற்கும் போது ஒரு பாதம் அதர்மம் என காலம் திரேதா யுகத்தைக் காட்டும்.
இரண்டு பாதத்தில் தர்மம் நிற்கும் போது, இரண்டு பாதம் அதர்மத்துடன் துவாபர யுகத்தை இழுத்துச் செல்லும்.
ஒரு பாதத்தில் தர்மம் நிற்கும் போது, மூன்று பாதத்தில் அதர்மம் கலி யுகம் என நடத்திச் செல்லும்.
இதை சத்வம், ராஜசம், தாமசம் அடிப்படையிலும் சொல்லப்படுகிறது. கிருதத்தில் சாத்வீகமும், திரேதாவில் ராஜசமும், துவாபரத்தில் ராஜச- தாமசமும், கலியில் தாமசம் மட்டுமே தூக்கலாக இருக்கும்.
இதைச் சொல்லும் ஶ்ரீமத் பாகவதம், மேலும் ஒன்றைச் சொல்கிறது. தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக பகவான் இப்படிப்பட்ட காலக் கணக்கில்தான் அவதரிப்பார்.
கல்கியின் அவதாரத்தைப் பற்றிச் சொல்லும் ஶ்ரீமத் பாகவதம் தர்ம பதியாக கல்கி அவதாரம் எடுத்து கிருத யுகதைக் கொண்டு வருவார் என்கிறது.
அப்பொழுது சொல்லப்படுவதைக் கவனமாகக் கேளுங்கள்.


ஆரியபட்டீயத்தில் சொல்லப்பட்டுள்ளது போல இந்த காலக் கணக்கில் கிருத யுகம் மேஷத்தில் ஆரம்பிக்கவில்லை.
கடக இராசியில், சூரியன், சந்திரன், குரு ஆகிய மூன்றும் பூச நட்சத்திரத்தில் சேரும் போது கிருத யுகம் ஆரம்பிக்கும்.
இந்தச் சேர்க்கை நூறு வருடங்களுக்கு ஒரு முறை உண்டாகும். ஆனால் அப்பொழுதெல்லாம் கிருதம் உண்டாகாது. தர்மத்தின் அளவு நான்கு பங்காகி, கல்கி அவதாரம் எடுத்தபின் இந்தக் கிருத யுகம் உண்டாகும்.
இந்த தர்மம் சார்ந்த யுகத்தில் திரேதாவில் இராமர் பிறந்தார். இது அரசனின் தர்ம பரிபாலனத்தைப் பொறுத்தே அமைகிறது என்று வால்மீகி இராமாயணமும், மகாபாரதமும் பல இடங்களில் சொல்கிறது.

வேதாங்க யுகம்
மூன்றாவதாக, வேதாங்க ஜோதிடத்தில் யுகக் கணக்கு வருகிறது. அதில் யுகம் என்பது இரட்டை. சூரியனும், சந்திரனும் உத்தராயணத்தில் ஆரம்பிக்கும் பயணம் மீண்டும் அதே புள்ளியில் வருவதற்கு 5 வருடங்கள் ஆகின்றன. அதற்குள் இரண்டு அதிக மாதம் வருகிறது. அதிக மாதத்துடன் ஒரு ஏறு முகம், ஒரு இறங்கு முகம் என இரட்டை இருக்கிறது.
இதையே, மகாபாரதத்தில் பின் பற்றினார்கள். இதையே இராமாயண காலத்திலும் பின்பற்றி இருக்க வேண்டும். ஏனெனில் இராமர் யஜூர் வேதத்தில் சமர்த்தர் என்றும், வேதாங்கங்களை அறிந்தவர் என்றும் ஹனுமன் கூறுகிறார். பஞ்ச வர்ஷாத்மக யுகம் எனப்படும் இந்த யுகத்தைத்தான் இராமரும், அவர் காலத்தவரும் பின்பற்றியிருக்க வேண்டும்.
இராமருக்கு முன்னால் வாழ்ந்த தீர்கதமஸ் முனிவர் 10 - ஆவது யுகத்தில் மூப்பு எய்தினார் என்று ரிக் வேதம் சொல்வதன் மூலம் இராமருக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இந்த 5- வருட வேதாங்க யுகம் பயன் பாட்டில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.
" தீர்கதமா மாமதேயோ ஜுஜுர்வான் தஸமே யுகே” (ரிக் வேதம் 1-158-6) என்னும் இந்த ஸ்லோகத்தில்,
10- ஆவது யுகம் என்றால் தீர்கதமஸ் 50 முதல் 55 வயதுக்குள் மூப்படைந்தார் என்று அர்த்தம்.
இந்த யுகம் உத்தராயணத்தில் ஆரம்பிக்கிறது. இதன் ஐந்து வருடங்களுக்கும் சம்வத்சரம், பரிவத்சரம், இடாவத்சரம், அனுவத்சரம், வத்சரம் என்று பெயர். அந்தந்த வருடத்தில், அதன் பெயரைக் கொண்டுதான், சங்கல்பம் செய்திருக்க வேண்டும்.
இந்த யுகக் கணக்கை கீழே பார்க்கலாம்.


Y-VJ என்பது யஜூர் வேதாங்க ஜோதிடக் கணக்கைத் காட்டுகிறது. யஜூர் வேதியான இராமர் இதைத்தான் பின்பற்றியிருக்க வேண்டும். மஹாபாரத காலத்து 5 வருட யுக காலண்டரை மஹாபாரத புத்தகத்தில் கொடுத்தேன். அதுபோல இராமாயண காலத்து 5 வருட காலண்டரை வரப்போகும் இராமாயண புத்தகத்தில் கொடுக்கிறேன்.
இராமர் காலத்தில் இருந்த தர்மத்தின் அளவின் அடிப்படையில் திரேதா யுகமாக இருந்திருக்கிறது. அதாவது அப்பொழுது ராஜசம் அதிகமாக இருந்திருக்கிறது. அதீத ராஜசத்தால் மன்னர்கள் ஆட்டம் போடவே பரசுராமர் அவர்களை அழித்தார்.
அந்த யுகத்தின் தர்ம அளவைக் காப்பதற்கு, நாரதர் முதலானோர் அறிவுரைப்படி இராமர் சம்பூக வதம் செய்திருக்கிறார்.
ஆக, யுகக் கணக்கு இவ்வாறாக இருக்க, எல்லா சாஸ்திரங்களையும் ஆராயாமல் பொத்தாம் பொதுவாக கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் வாழ்ந்தார் என்று சொல்வது கிரிப்டோக்களின் அஜெண்டா தான்.
சுஸ்ருத சம்ஹிதை 1.4.7 சொல்கிறது
एकं शास्त्रमधीयानो न विध्याच्छास्त्रनिश्चयं ।।
तस्माद्बहुश्रुत : शास्त्रं विजानीयाच्चिक्थसह: ।।
ஒரே ஒரு சாஸ்திரத்தை ஒருவன் படித்து, சாஸ்திரம் சொல்லும் முடிவை அறிய முடியாது. அதனால் சிகிச்சை செய்பவன் பல சாஸ்திரங்களையும் அறிந்திருந்தால் தான் சரியான முடிவு எடுக்க முடியும்.
இதையே சுக்ர நீதியும் சொல்கிறது.
இந்த அணுகு முறையைக் கொண்டுதான், சாஸ்திர நிரூபணம் செய்ய வேண்டும்.
இராமர் கால நிரூபணமும் இந்த அணுகு முறையைக் கொண்டுதான் செய்ய முடியும்.
தாமசம் ஓங்கியுள்ள இந்த காலக் கட்டத்தில், மடாதிபதிகளையே ஆட்டிப் படைக்கும் வேடதாரி அசுரர்கள் இருக்கும் இந்த காலத்தில், சாஸ்திரம் மக்களைச் சென்று அடைவது கடினம். அடைந்தால், அதைப் பெற்றவர்கள் செய்த பாக்கியம்.
பி.கு:
தர்ம யுகத்தில் திரேதா யுகம் எப்பொழுது ஆரம்பித்தது என்பதை வாயு புராணம், பிரம்மாண்ட புராணத்தில் படிக்கலாம். அவற்றை எனது வலைத்தளத்தில் எழுதியுள்ளேன். எனது மகாபாரதம் புத்தகத்திலும் எழுதியுள்ளேன். வரப்போகும் இராமாயண புத்தகத்திலும் இவை இடம் பெறப் போகின்றன.
அத்துடன், இராமாயண காலம் பற்றிப் புரிந்து கொள்ள சூரிய சித்தாந்தம் தரும் வானவியல் சாஸ்திர அறிவும், சிசுமாரத்தில் பொருந்தியுள்ள துருவ நக்ஷத்திரங்களைப் பற்றிய அறிவும் தேவை. இராமாயண கால துருவ நக்ஷத்திரத்தை வால்மீகி சொல்கிறார்.
அவையும் புத்தகத்தில் இடம் பெறும். இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் இருந்தால், ரிஷிகள் தந்துள்ள ஞானத்தை ஒதுக்குகிறோம், இழக்கிறோம் என்று அர்த்தம்.

Wednesday, September 11, 2024

தசரதருக்கு வயது 60,000 ஆண்டுகளாமே?

இராமர் ஆண்ட காலம் 11,000 வருடங்கள் என்பது 11,000 தினங்களுக்கு சமம் என்று வேதப் பிரமாணத்துடன் சொன்னோம். உடனே, அந்தக் கணக்கை தசரதரது வயதுக்கும் பயன்படுத்தி, தசரதர் 60,000 ஆண்டுகள் வாழ்ந்தார்; அப்படியென்றால் 60,000 நாட்கள் என்று அர்த்தமா? 60,000 ÷ 360 = 166.6 வருடங்கள் என்றாகுமே என்று கேட்பவர்களுக்கு உண்டு. அவர்களுக்கும், 60,000 வருடங்கள் வாழ முடியும், அதை நம்ப வேண்டும் என்று சொல்லும் கிரிப்டோ வேடதாரிக்கும் இந்தப் பதிவு.

இராமருக்குச் சொன்ன கணக்கு, அவர் வாழ்க்கை நிகழ்ச்சிகளில், வால்மீகி வெளிப்படையாக வயதினைச் சொல்லாத, இராமரது ஆட்சியாண்டுகளைக் கண்டு பிடிக்க உதவியது. அப்படிப்பட்ட குறிப்பிட்ட வயதும், காலமும் வேறெங்கும் வால்மீகி சொல்லவில்லை.
ஆனால் பல இடங்களில், பல விவரங்களுக்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளை வால்மீகி சொல்லியுள்ளார். உதாரணமாக, தசரதர் தான் பிறந்ததிலிருந்து தனக்கு 60,000 ஆண்டுகள் முடிந்து விட்டன என்று விஸ்வாமித்திரரிடம், தன் மகன்களை அனுப்புமாறு கேட்கும் போது சொல்வார்.
அதே 60,000 வருடங்கள் தான் தன்னுடைய வயதென்று, தசரதரின் நண்பனான
ஜடாயுவும் சொல்கிறார்.
தசரதரது முன்னோர்களான
சகரன் 30,000 ஆண்டுகள் ஆண்டிருக்கிறார்;
திலீபன் 30,000 ஆண்டுகள் ஆண்டிருக்கிறார்.
இப்படி ஆயிரக்கணக்கில் சொல்லப்படும் விவரங்கள் வால்மீகி இராமாயணத்தில் நிறைய இருக்கின்றன.
பிரம்ம ரிஷி பட்டம் பெற விஸ்வாமித்திரர் தவம் செய்த வருடங்கள் 5000.
ஆனால் அத்ரி ரிஷியின் மனைவியான அனசூயா 10,000 வருடங்கள் தவம் செய்திருக்கிறாள்.
அவளைப் போல மண்டகர்ணி என்னும் ரிஷி, நீரில் நின்று கொண்டே, காற்றை மட்டும் ஆகாரமாகக் கொண்டு 10,000 வருடங்கள் தவம் செய்திருக்கிறார்.
இவையெல்லாம் வேறு யுகம். அப்பொழுது காலக் கணக்கு வேறு என்று சொல்பவர்களும் உண்டு. யுகம் என்னும் வாதத்தை எடுத்தீர்கள் என்றால் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். பிரம்மனின் ஆயுளைச் சொல்லும் லக்ஷக் கணக்கான ஆண்டுகளுக்கு அடிப்படை, 30 நாழிகை ( = 24 மணி) கொண்ட ஒரு சூரிய தினம் தான். யுகத்துக்கு யுகம் காலக்கணக்கு மாறவில்லை. அந்தந்த யுகத்தில் மனிதன் ஆயிரம் வருஷம் வாழ்ந்தான் என்று சொல்லப்பட்டுள்ளதே என்று கேட்டால், தொடர் சங்கிலியாக வம்சாவளி அவ்வளவு காலம் சென்றதைக் குறிப்பிடுகிறது. கலி யுகத்தில் கர்பத்திலேயே ஆயுள் முடிந்து விடுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது, இந்த அர்த்தத்தில் தான்.
எனவே வேதப் பிரமாணம் மனித ஆயுள் நூறு வயது என்பதைத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். சில வருடங்கள் கூட, குறைய இருக்கலாம். அதனால் ஆயிரக் கணக்கான வருடங்கள் என்று சொல்லுமிடத்தில் கணக்கில்லாத வருடங்கள் என்றோ, பல வருடங்கள் என்றோ பொருள் கொள்ள வேண்டுமே தவிர, அதன் நேர் பொருளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
உதாரணமாக, புருஷ சூக்தம் சஹஸ்ர சீரிஷா புருஷ, சஹாராக்ஷ சஹஸ்ர பாத் என்று சொல்வதை, அப்படியே பொருள் கொண்டால், ஆயிரம் தலையுடன் இருப்பவன் என்றால், இரண்டாயிரம் கண்கள், இரண்டாயிரம் கால்கள் இருக்க வேண்டுமே. ஆனால் ஆயிரம் கண்கள், ஆயிரம் கால்கள் என்றுதானே சொல்கிறது? அங்கு சஹஸ்ரம் என்பது எண்ணிலடங்காதது என்றுதானே பொருள் கொள்கிறோம்?
அது போல 60,000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றால் பல்லாண்டுகள் வாழ்ந்தார் என்றோ, அல்லது 60 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். அவ்வாறுதான் இதுநாள் வரை பெரியவர்கள் சொல்லி வந்தார்கள். மூதறிஞர் இராஜாஜி அவர்களும் அவ்வாறே, தான் எழுதிய இராமாயணம் ' சக்கரவர்த்தித் திருமகன் ' புத்தகத்திலும் எழுதியுள்ளார்.




அதற்கேற்றாற் போல, இராமாயணத்திலேயே பல இடங்களில், சிறிய காலத்திற்கு, பெரிய அளவில் காலத்தைச் சொல்லி இருப்பதைக் காணலாம்.
உதாரணமாக, இராமர் 14 ஆண்டுகள் செல்ல வேண்டும் காட்டில் இருக்க வேண்டும் என்று கைகேயி சொன்னதும், மிகவும் துக்கப்பட்ட, தந்தை தசரதரைப் பார்த்து இராமர் சொல்கிறார் - நான் வனவாசத்தில் இருக்கும் காலம், நீங்கள் 1000 வருடங்கள் ஆட்சி செய்யுங்கள் - என்று.
வனவாசமோ 14 வருடங்கள் தான். ஆனால் அதை 1000 வருடங்கள் என்று ஏன் இராமர் சொல்ல வேண்டும்? 14 வருடங்கள் கழிவது ஆயிரம் வருடங்கள் போல இருக்கும். அது போல தசரதர் வெகு காலம் வாழ்ந்தது 60,000 ஆண்டுகள் ஆனதைப் போல இருந்திருக்கிறது.
அதுபோல லட்சுமணனும், வனவாசம் செல்ல வேண்டும் என்று கைகேயி சொன்னாள் என்று கேள்விப்பட்டவுடன் கொதித்துப் போகிறான். அப்பொழுது இராமரைப் பார்த்துச் சொல்கிறான் - ஆயிரம் வருடங்கள் நீ ஆண்டு விட்டு அதன் பிறகு உன் குழந்தைகளுக்கு இராஜ்ஜியத்தைக் கொடுத்து விட்டு வானப்பிரஸ்தம் செல்ல வேண்டும். இப்பொழுது ஏன் வனம் போக வேண்டும் என்பான். இராமர் ஆள வேண்டியது 1000 வருடங்கள் என்கிறான், 11,000 வருடங்கள் என்று அல்ல.
வால்மீகி இராமாயணத்தில் இதைப் போல பல வசனங்கள் வருகின்றன. இராமர் வன வாசம் சென்று 5 தினங்களான போது, அது 5 வருடங்கள் போல இருந்தது என்கிறார் கௌசல்யா.
தசரதர் இறந்தவுடன், அந்த ஒரு இராத்திரி பொழுது 100 வருடங்கள் போல இருந்தன என்றனர் ரிஷிகள்.
மழை காலம் என 4 மாதங்கள் தான் காத்திருந்தது 100 வருடங்கள் போல இருந்தது என்று இராமர் சொல்கிறார்.
இது போல தமிழிலும் சொல்லப்பட்டு உள்ளது. தொல்காப்பியத்தை அரங்கேற்றியது பாண்டிய மன்னனான மாகீர்த்தி என்பவனது அவையில். அதைச் சொல்லும் நச்சினார்க்கினியர், அந்த மன்னன் 24,000 வருடங்கள் ஆண்டான் என்கிறார். நமக்கு மிக நன்றாகத் தெரியும், எந்த பாண்டிய அரசனும் அத்துணை காலம் ஆளவில்லை என்று. ஆனால் அப்படிச் சொல்வது 24 வருடங்கள் என்றோ, அல்லது பல்லாண்டுகள் என்றோ பெருள்படுமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
அதுபோலவேதான் தசரதர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் 60,000 ஆண்டுகளும்.


Sunday, September 8, 2024

இராமர் 11,000 வருடங்கள் ஆண்டாரா?

இராமர் பதினோராயிரம் ஆண்டுகள் ஆண்டார் என்ற விவரம் மூன்று இடங்களில் வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படிப் பதினோராயிரம் ஆண்டுகள் இராமர் வாழ்ந்தது சாத்தியமே என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். அப்படிச் சொல்வதில் சில கேள்விகள் வருகின்றன.

அவர் வாழ்ந்த காலம் வரையிலும், அவரது தம்பிமார்களான லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகியோரும் வாழ்ந்தார்களே, அவர்களும் 11,000 ஆண்டுகள் வாழ்ந்தார்களா. அவர்களுடன் அவர்கள் மனைவிமார்களும் இராமருடன் சரயு நதியில் இறங்கி வைகுந்தம் போனார்களே அவர்களும் 11,000 வருடங்கள் வாழ்ந்தார்களா?

சரயுவில் இறங்குவதற்கு முன், அவரவர் தங்கள் மகன்களை ஆங்காங்கே அரசர்களாக நிறுவினார்கள் - இராமரது மகன்களான லவ - குசன் உட்பட - அவர்கள் கூட 11,000 வருடங்கள் வாழ்ந்தார்களா? அதிலும் லவன், குசன் ஆகிய இருவரும், இராமர் ஆள ஆரம்பித்த சில வருடங்களிலேயே இராமாயணத்தைப் பாடி, இராமருடன் இணைந்தவர்கள். அவர்கள் இராமர் ஆண்ட 11,000 ஆண்டுகள் வரை வாழ்ந்து, அவர் உலகை விட்டு நீங்கிய பிறகும், வாழ்ந்து ஆண்டவர்கள். அப்படியென்றால் அவர்கள் 11,000 ஆண்டுகளுக்கு மேலேயே வாழ்ந்தார்கள்
என்று சொல்லலாமே?
அவர்களை விடுங்கள். வானரனான சுக்ரீவன், அங்கதனை அரியணையில் அமர்த்தி விட்டு, இராமனுடன் இணைந்து சரயுவில் இறங்கினான். அப்படியென்றால் அவனும், அங்கதனும் 11,000 ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் ஆவார்களே, அதை ஏன் வால்மீகி சொல்லவில்லை?
விபீஷணனும், இராமரது கடைசி கணங்களில் அவரை வந்து பார்க்கிறான். இராமரால் ஜகன்னாதப் பெருமானைப் பூஜிக்குமாறு சொல்லப்பட்டு, இராமர் பூவுலகை விட்டு நீத்த பிறகும் வாழ்ந்திருக்கிறான்.
இவ்வளவு பேர் 11,000 வருடங்கள் வாழ்ந்து இருந்தார்கள் என்றால், இராமர் அவ்வளவு வருடங்கள் வாழ்ந்தார் என்பதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது?
உடனே கிரிப்டோக்களும், அவர்கள் விதைத்து வைத்த அறிஞர்களும் கிளம்பி விடுவார்கள் - அது வேற யுகம் அப்பொழுதெல்லாம் அந்த அளவு காலம் வாழ்ந்திருப்பார்கள் என்பார்கள்.
இப்படிக் கேட்டவர்கள் எல்லாம் அறிஞர்கள். அதிலும் விடாமல் சந்தியாவந்தனம் செய்பவர்கள். அதில் என்ன மந்திரம் சொல்கிறார்கள்?
'பஸ்யேம சரத சதம், ஜீவேம சரத சதம்'.
அது ஏன் சரதம் (சரத் காலம்), அது ஏன் சதம் (நூறு)?
யோசித்துப் பார்த்தார்களா ?
பூர்வர்கள் கேட்டதைப் போல எங்களுக்கும் நூறு வயது கிடைக்கட்டும் என்று வேதம் ஏன் சொல்கிறதே? அப்படியென்றால் நூறு வயது வாழ்வதே பெரிது என்பதால் தானே அப்படி வேதத்தில் சொல்லியுள்ளார்கள்?
சதம் ஜீவந்து சரத - நூறு வருடம் வாழட்டும் என்று ஏன் ரிஷிகள் எழுதி வைத்தார்கள்?


இதெல்லாம் மனிதர்களுக்கு, இராமருக்கு அல்ல என்பார்கள் அறிவு ஜீவிகள்.
ஆனால் இராமர் தன்னை மனிதனாகத் தான் காட்டிக் கொண்டார்.
'ஆத்மானம் மானுஷம் மன்யே' என்றுதான் சொல்கிறார்.



பிரம்மாவும், இராவணனைக் கொல்ல, இராமா, நீ மனிதனாக அவதரித்தாய் என்கிறார்.


ஒரு தாயின் கருவில் வளர்ந்து, இந்த உலகில் மனிதனாகப் பிறந்து, உதாரண புருஷனாக வாழ்ந்து, மனிதப் பிறவியை முடித்துக் கொள்ள சரயுவில் இறங்கியவர் இராமர்.
இராமாயணத்தில் பல இடங்களில் அவர் சந்தியா ஜெபம் செய்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. யஜூர் வேதியான அவர், சரத சதம் என்று நூறு வயதைக் கேட்கும் சந்தியா வந்தன மந்திரத்தைத்தான் சொல்லியிருக்கிறார்.
ஆனால் அவர் 11,000 ஆண்டுகள் ஆண்டார் என்று சொல்லப்பட்டுள்ளதே என்று கேட்டால், பிரமாணங்களைப் பாருங்கள்.

வேதம் தான் பிரமாணம்.
இதிகாச, புராணங்களில், வேதப் பிரமாணத்துக்கு மாற்றாக ஏதேனும் சொல்லப்பட்டால், வேதம் சொல்வதைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது ரிஷிகளின் வாக்கு.
ஜைமினி மீமாம்ச சூத்திரத்திற்கு (6.7.13.31 முதல் 40 வரை) உரை எழுதிய ஸபர ஸ்வாமி சஹஸ்ர சம்வத்சரம் என்பதை ஆயிரம் நாட்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார்.
இதையே காத்யாயன ஶ்ரௌத்த சூத்திரமும் (1.6.17 - 27) ஆயிரம் வருடங்கள் என்பதை ஆயிரம் நாட்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில், अहर्वै संवत्सर: சம்வத்சரம் என்பது ஒரு நாள் - அஹர் என்கிறது.



இந்த வேத பிரமாணங்களைச் சுட்டிக் காட்டி, மகாபாரதத்தில், பீமன், யுதிஷ்டிரரிடம் சொல்கிறான் - வனவாசம் ஆரம்பித்து 13 நாட்கள் ஆகி விட்டன. இவை 13 வருடங்களுக்குச் சமானம்.



இவற்றை எல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? . முன்னோர் மொழிந்த மொழியை முறை தப்பாமல் பின்பற்ற வேண்டும் என்று சொல்லிக் கொள்பவர்கள், ரிஷிகள் எழுதி வைத்ததிலிருந்து முறை தப்பாமல் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இராமர் 11,000 வருடங்கள் ஆண்டார் என்றால் வேதப் பிரமாணப்படி, 11,000 நாட்கள் என்று அர்த்தம் செய்ய வேண்டும். சூரியன் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட 360 நாட்கள் கொண்ட சாவன வருடத்தால் வகுத்து 30 வருடங்கள் ஆண்டார் என்று பொருள் கொள்ள வேண்டும்.
அப்படியெனில் வால்மீகி 11,000 ஆண்டுகள் என்று சொல்லியே இருக்க வேண்டாமே என்று இன்னொரு கரூப் கேட்கும்.
இராமாயணம் என்பதன் கதாநாயகன் இராமர். அவர் பிறப்பு முதல், அவர் வாழ்வில் நடந்த ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சிக்கும் வால்மீகி அவருடைய வயது அல்லது காலத்தை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ சொல்லி விடுகிறார்.
பிறந்த நேரத்தைப் பற்றி வால்மீகி சொன்னதைப் போல வேறு யாருக்கும், எந்த ரிஷியும் சொல்லவில்லை. இராமர் திருமண வயது, சீதையின் வயது, வனவாசம் ஆரம்பித்த வயது, முடித்த வயது என்று எல்லாவற்றையும் காட்டிய வால்மீகி, இராமர் ஆண்ட காலத்தைச் சொல்லாமல் விடுவாரா? சொன்னார். பொடி வைத்துச் சொன்னார்.
மற்ற எல்லாவற்றுக்கும், நேரிடையாக மனித வயதைச் சொன்ன வால்மீகி அவர்களுக்கு, இராமர் இத்தனை ஆண்டுகள்தான் ஆண்டார் என்று மனித அளவில் குறுக்கிச் சொல்ல மனம் வரவில்லை. அதனால் இரகசியமாக code ரூபத்தில் சொல்லி விட்டார்.
வேதம் தெரிந்தவன் புரிந்து கொள்வான். வேதம் படித்தும், உள்வாங்கிக் கொள்ளாதவன், புரிந்து கொள்ள மாட்டான்.
கொசுறு:
இராமர் வாழ்ந்த காலம் வரை வாழ்ந்து, இராமருடன் சேர்ந்து மற்றவர்களும் சரயுவில் இறங்கினார்கள் என்பது உத்தர காண்டத்தில் வருவது. அது வால்மீகி இராமாயத்தில் சேர்த்தியே இல்லை என்று ஒரு க்ரூப் வரும்.
உத்தர காண்டத்தை வால்மீகிதான் எழுதினார். இதை, பால காண்டம் 3-38 இல் வைதேகியின் விசர்ஜனத்தையும் எழுதி விட்டார் என்பதிலிருந்தும், 4-2 இல் ஆறு காண்டங்களுடன், உத்தர பகுதியையும் ஒன்றாகவே எழுதி விட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது என்பதாலும் தெரிய வருகிறது.
பட்டாபிஷேகம் வரை லவ - குசர் மூலமாக வெளிப்படுத்தினார். அப்பொழுதே எழுதி முடித்த உத்தர காண்டத்தை, அந்த இதிகாசத்தின் பாத்திரங்கள் உலகை விட்டு நீங்கிய பின் வெளிப்படுத்தி உள்ளார். இவ்வாறே வியாசரும், மகாபாரதத்தை, அதன் கதாபாத்திரங்கள் மறைந்த பிறகுதான் வெளிப்படுத்தினார் என்று மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே உத்தர காண்டம் வால்மீகியால் எழுதப்பட்டது உண்மை. இந்த விவரங்களை மக்கள் அறிந்து கொள்ளவும், யோசிக்கவும், விடாமல், மூளைச் சலவை செய்பவர்களிடமிருந்து ஒதுங்கி இருத்தல் நலம்.

Saturday, September 7, 2024

இராமாயணத்துக்கும், மஹாபாரதத்துக்கும் இடையே உள்ள கால இடைவெளி

மகாபாரதத்தைக் கற்பனை என்று நம்ப வைப்பது கடினம். ஏனெனில் கிருஷ்ணர் தனது மனித சரீரத்தை விட்ட வருடத்திற்கு 35 வருடங்களுக்கு முன் மஹாபாரத யுத்தம் நடந்தது என்பதற்கு மகாபாரதத்தில் ஆதாரங்கள் இருக்கவே, மஹாபாரத யுத்தம் நடந்தது பொ. மு. 3136 என்பதை எளிதில் ஒதுக்கிவிட முடியாது.

ஆனால் இராமாயணத்தில் அப்படி ஒரு சான்று இல்லை என்பதால், இராமாயணம் கோடிக் கணக்கான வருடங்களுக்கு முன்னால் அல்லது லட்சக் கணக்கான வருடங்களுக்கு முன்னால் நடந்தது என்று இஷ்டத்துக்கு அடித்து விடுவார்கள். அத்தனை வருடங்களுக்கு முன்னால் நடந்த கதை என்றால் வால்மீகி இராமாயணம் எப்படி இவ்வளவு காலம் உரு மாறாமல் இருக்க முடியும்?
இந்தக் கேள்வி கிரிப்டோக்களுக்குத் தேவையில்லை. நீங்கள் நம்ப வேண்டும். அவ்வளவுதான். அப்படி பலரும் நம்ப ஆரம்பித்தால்தான், பின்னால் எளிதில் நம்மை முட்டாள்கள் என்று முத்திரை குத்தி, இராமாயணம் ஒரு கற்பனைக் கதை என்று சொல்லிவிட முடியும்.
ஆனால் கிரிப்டோக்களுக்குத் தெரியாது, இராமாயண காலத்தைக் கணக்கிடும் வண்ணம் ரிஷிகள் விவரங்களைத் தந்துள்ளார்கள் என்பது.
அவர்கள் யாரும் இராமாயணம் கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்றோ, லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்றோ சொல்லவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். உண்மையில் எந்த இதிகாசமும், புராணமும் இராமர், கோடிக் கணக்கான அல்லது லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார் என்று சொல்லவில்லை.
அவை சொல்வதெல்லாம் இக்ஷ்வாகு வம்சாவளியில் வந்தவர்கள் யார் என்பதே. உண்மையில் புராணங்கள் தரும் அரசர் பட்டியலைக் கொண்டுதான், நாம் மௌரியர், சுங்க வம்சத்து அரசர்களைக் கண்டு பிடித்துள்ளோம்.
அது போல இக்ஷ்வாகு குலத்தில் இராமருக்கு முன் வாழ்ந்த அரசர்கள் யார் என்றும், இராமருக்குப் பின்னால் யார் யார் அந்த குலத்தில் ஆண்டார்கள் என்றும் ரிஷிகள் எழுதி வைத்திருக்கிறார்கள். அதிலும், கிருஷ்ணர் வாழ்ந்த காலம் வரை யாரெல்லாம் அயோத்தியை ஆண்டார்கள் என்பதை ஒரு ரிஷி அல்ல பல ரிஷிகள், பல புராணங்களில் சொல்லியுள்ளனர்.
அதிலும் பொத்தாம் பொதுவாகச் சொல்லவில்லை. இராமர் மகன் குசன், அவர் மகன், அதிதி, அவர் மகன் நிஷதன் என்று இன்னார் மகன் இன்னார் ஆண்டார் என்றும், இவருக்குப் பிறகு இவர் என்றும் தொடர்ச்சியாக அரசர்கள் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். நடுவில் ஓரிரண்டு பெயர்கள் விடுபட்டிருக்கலாம். ஆனால் மொத்தம் 30 முதல் 31 வரை மட்டுமே இக்ஷ்வாகு குலப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு புராணம் (4-22), வாயு புராணம் (2-26), பாகவத புராணம் (9-12) என மூன்று புராணங்களில் வேறு வேறு ரிஷிகள் கொடுத்துள்ள தொடர் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



இவர்கள் அனைவரும், பிருஹத்பலன் என்ற அரசனில் முடிக்கின்றனர். இவன் மகாபாரதப் போரில் போரிட்டிருக்கிறான். அபிமன்யுவால் கொல்லப் பட்டிருக்கிறான்.
இதைச் சொல்லும் பாகவத புராணம் ஸ்லோகங்களை கீழே கொடுத்துள்ளேன்.



குசனில் ஆரம்பித்து, பிருஹத்பலனில் முடியும் இந்தப் பட்டியலை சுக முனிவர் பரிக்ஷித் அரசனிடம் சொல்லி, உன் தந்தையால் அவன் கொல்லப்பட்டான் என்கிறார்.
இப்பொழுது கணக்கிடுங்கள். இராமர் முதல், கிருஷ்ணர் (மகாபாரதம்) வரை 30 அல்லது 31 அரசர்கள்தான் தொடர்ந்து இருந்திருக்கிறார்கள். இவர்கள் ஆண்ட மொத்த காலம் எவ்வளவு இருக்க முடியும்?
அதன் மூலம், இராமாயணத்துக்கும், மகாபாரதத்துக்கும் இடையே எத்தனை ஆண்டுகள் இடைவெளி இருந்திருக்கும்?

இராமாயணம் 7000 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சரித்திரம்

பிராமணனாகப் பிறந்து கிருஸ்துவப் பெண்ணை மணந்து கொண்டு, அதை மறைத்து, பிராம்மணனாகவே தன்னைக் காட்டிக் கொண்டு, பிராம்மணர்களையும், ஹிந்து மதத்தவர்களையும் தாக்கும் கிரிப்டோக்களும் இருக்கிறார்களே, அவர்கள் பரப்பும் பொய்யையும், அவதூறுகளையும் காட்ட உண்மைக் கருத்துக்களை சிறு கட்டுரைகளாக எழுதுகிறேன்

***
இராமாயணம் 7000 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சரித்திரம்.
அதன் காலக் கட்டத்தை நிரூபிப்பது, கர தூஷண வதம் ஆரம்பிக்கும் போது விழுந்த விண்கல் ஆகும். பதினெட்டு ஸ்லோகங்களில் ஒரு ஸர்கம் முழுவதும் வால்மீகி அதை விவரிக்கிறார். விண்கல் விழுந்த வேகத்தில் காற்றில் நைட்ரஜன் ஆக்சைடுகள் பல உருவாகி இருக்கின்றன. அவை சிவந்த நிறம் கொண்டவை. நீரில் கரைத்து நீரையும் இரத்தச் சிவப்பாக மாற்றுபவை.
பெரும் சத்தத்துடன் விழுந்த விண்கல் குறித்து விளக்கும் அந்தப் பகுதியில் இரத்த மழை பொழிந்தது என்கிறார் வால்மீகி. இராமரும் இரத்த மழையைப் பார்த்தார். பூமி அதிர்ந்தது. தூசிப் படலம் எழுந்தது. சூரியன் தூசியால் மறைந்தது.
இவ்வாறு விளைவுகளை ஏற்படுத்திய விண்கல் GISP2 என்னும் அறிவியல் பட்டியலில் குறிக்கப்பட்டிருக்க வேண்டுமே என்று தேடினால் ஆச்சரியம். நாம் கண்டுபிடித்த வருடமான பொ. மு. 5078 இல் அது பதிவாகி இருக்கிறது. இராமாயணம் நடந்தது உண்மையே அதன் காலம் உண்மையே என்று நிரூபிக்கும் வரைபடம் இது.
அந்த விண்கல் விழுந்த இடம் பஞ்சவடிக்கு அருகே, திரம்பகேஸ்வர் கோயில் அருகே உள்ள வட்ட வடிவ குளங்கள் ஆகும். அவை விண்கல் விழுந்தால் உண்டான பள்ளங்கள் என International catalogue of meteor craters பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த விண்கல் விழுந்த வருடமே இராமாயணம் என்பது உண்மையாக நடந்தது என்பதற்கும், அதன் காலத்துக்கும் உலகளாவிய ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளும் விவரம் ஆகும்.

இராமாயண நிகழ்ச்சிகள் கால அட்டவணை



GISP2 graph for விண்கல் விழுந்த வருடம்



திரம்பகேஸ்வர் கோயில் அருகே விண்கல் விழுந்த பள்ளங்கள்







Part 2 of my talk on Lanka (Q-A session)

 In the 2nd part of my talk on Lanka, I am replying to questions such as

# Types of Yuga and Rama's birth in Treta yuga # Reference to two Agastya-s in Sugreeva's version # Presence of Agastya in two Tamil sangam-s # How to justify 100 yojana length of Ram setu # The mention of 1000s of years in different contexts in Valmiki Ramayana # Origin of Tamil-Sanskrit.

The talk was given to Satyameva Jayate channel.
It can viewed here: